சென்னையிலிருந்து ரயில்கள் புறப்படுமா? எங்கெல்லாம் செல்லும்?.. அசர வைக்கும் புது புது விதிமுறைகள்!
சென்னை: நாடு முழுக்க பல்வேறு இடங்களில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
நாடு முழுக்க மொத்தம் 15 நகரங்களுக்கான பயணிகள் ரயில் போக்குவரத்து இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு துவங்கி உள்ளது. இதனால் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக லாக்டவுன் தளர்வு கொண்டு வரப்படும் என்கிறார்கள்.
சென்னையில் இருந்தும் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ரயில்கள் இயக்குவதில் முதலில் குழப்பம் நிலவிய நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் இன்று முதல் இயக்கம்.. சென்னை உள்பட 30 ரயில்கள் விவரம்
சென்னை நிலை
இது தொடர்பாக சென்னை ரயில்வே நிலைய அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் ரயில் சேவை புதன் கிழமையில் இருந்து துவங்கும். முதல் ரயில் வெள்ளிக்கிழமை டெல்லிக்கு செல்லும். இதற்கான டிக்கெட் விற்றுவிட்டது. ரயில் நிலையத்திற்கு மக்கள் எப்படி வருவார்கள், எங்கே தங்கி இருப்பார்கள் என்பது மட்டுமே தற்போது கேள்வியாக உள்ளது. மற்ற திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
என்ன மாதிரியான விதிகள்
இதற்கான பல்வேறு விதிகள் சென்னை ரயில் நிலையங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்திற்குள் நுழையும் போதும் வெளியே செல்லும் போதும் எல்லோருக்கும் கை கழுவ கிருமி நாசினிகள் கொடுக்கப்படும்.
எல்லோரும் கண்டிப்பாக பயணம் முழுக்க மாஸ்க் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம்.
இ டிக்கெட் இருந்தால் மட்டுமே பயணிகள் உள்ளே வர முடியும். இ டிக்கெட் இல்லாத யாரும் ரயில் நிலையத்திற்குள் வர முடியாது.
எல்லா பயணிகளும் கண்டிப்பாக ரயில் நிலையத்தில் சோதனை செய்யப்படுவார்கள்.எல்லா பயணிகளும் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கொரோனா, காய்ச்சல் அறிகுறி இல்லாத நபர்கள் மட்டுமே ரயிலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அபராதம் வசூலிக்கப்படும்
ரயில் தொடங்கும் 90 நிமிடத்திற்கு முன் பயணிகள் ரயில் நிலையம் வந்து இருக்க வேண்டும். சரியான சமூக இடைவெளியை கடைப்பிடித்து ரயில்களில் பயணிகள் இயங்க வேண்டும். ரயிலில் யாருக்கும் போர்வை கொடுக்கப்படாது. ஆன்லைன் டிக்கெட்டை கேன்சல் செய்ய 24 மணி நேரத்திற்கு முன் கேன்சல் செய்ய வேண்டும் இதற்கு 50% கட்டணம் அபராதமாக வசூலிக்கப்படும்.
சென்னை நேரம்
சென்னையில் இருந்து டெல்லிக்கு மட்டும் தற்போது ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி எல்லா வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில்கள் இயக்கப்படும் . காலை 6.35 சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படும். டெல்லிக்கு மறுநாள் காலை 10.30 மணிக்கு ரயில் செல்லும். இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
சென்னைக்கு வரும் நேரம்
அதேபோல் சென்னைக்கும் டெல்லியில் இருந்து மட்டுமே ரயில்கள் இயக்கப்படும். டெல்லியில் இருந்து சென்னைக்கு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தற்போது ரயில்கள் இயக்கப்படும். மாலை 4 மணிக்கு டெல்லியில் இருந்து ரயில் புறப்படும். மறுநாள் இரவு 8.40 மணிக்கு ரயில் சென்னையை வந்தடையும். இடையில் ரயில் எங்கும் நிற்காது என்பது குறிப்பிடத்தக்கது.