டாஸ்மாக் திறக்க முடிகிறது.. மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாதா? சென்னை ஹைகோர்ட் கேள்வி!
சென்னை: சமூக இடைவெளி பிரச்சனை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்த நிலையில், ஏன் டாஸ்மாக்கை மூட அரசு கொள்கை முடிவு எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா தொற்று பாதிக்காமல் தடுக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுதும் உள்ள அம்மா உணவகங்களிலும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச முட்டைகள் வழங்கவும்,பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு முட்டை வழங்க வேண்டும் ,அதே போல ஊட்டச்சத்து வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
முட்டைகள் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் உள்ளதால் தற்போது ஆசிரியர்கள் வேலை இல்லாமல் இருப்பதால் அவர்களது பணியை செய்யலாம் என்றும் தெரிவித்தனர். அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் ஒரே மாதிரியான மாத்திரைகளை அனைவருக்கும் வழங்க முடியாது என்றும் அதில் பிரச்சனைகள் உள்ளது என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் மெதுவாக பரவி வருகிறது- சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாணவ மாணவிகளுக்கு முட்டை வழங்கவேண்டும், மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் சமூக இடைவெளி பிரச்சினை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் அப்படியானால் டாஸ்மாக்கை மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டியது தானே என்று கேள்வி முன்வைத்தனர். தொடர்ந்து பள்ளிகளில் வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ எப்படியாவது முட்டை வழங்க வேண்டும் என்றும் எப்படி வழங்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் சில உத்தரவுகளை பிறப்பித்தனர். ஆனால் அரசு தரப்பில் ஒரு நாள் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியதால் வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.