"மாயாவி" ஜெயகோபால்.. அப்படி எங்கேதான் போய் விட்டார்.. கோர்ட் கேட்டதில் ஆயிரம் அர்த்தம் இருக்கு!
Recommended Video
சென்னை: முக்கிய குற்றவாளி ஜெயகோபால் எங்கே? அவரும் வெளிநாட்டிற்குத் தப்பிவிட்டாரா? என்று நீதிமன்றம் கேட்ட கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன.
பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ மரணத்துக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. முக்கிய குற்றவாளியான ஜெயகோபால் எங்கே என்றே தெரியவில்லை.
சுபஸ்ரீ இறந்த அன்றே இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து கிளம்பியது. அப்போது ஜெயகோபால் காணவில்லை. மாயமான அவரை தேடும் முயற்சியில் இறங்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், ஜெயகோபாலை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரை பிடிக்க முடியவில்லை என்று கோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்தது நம் போலீஸார்தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏன் கதவை சாத்துறே.. என்ன செய்ய போறே.. பதற வைக்கும் சேலம் வக்கிரம்.. மோகன்ராஜின் அட்டூழிய வீடியோ
நடவடிக்கை
அதனால் நீதிபதிகள் இந்த விஷயத்தில் இன்னும் கோபமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். ''வழக்குப் பதிவு செய்யப்பட்டவர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை ? லாரி ஓட்டுநர் மீது போடப்பட்ட வழக்குடன் பேனர் வைத்தவரை எப்படி சேர்க்கலாம்'' என்று நீதிபதிகள் கேள்வி கேட்டதற்கும் சரியான பதில் தெரிவிக்காததும் ஆச்சரியமாக உள்ளது.
பொதுமக்கள்
ஜெயகோபால் ஆளும் தரப்பை சேர்ந்தவர். ஒருவேளை இந்த விஷயத்தில் ஆளும் தரப்பும், போலீசும் அவருக்கு சாதகமாக செயல்படுகிறதோ என்ற சந்தேக கணைகளை சுபஸ்ரீ இறந்த நாளில் இருந்தே பொதுமக்கள் எழுப்ப தொடங்கிவிட்டனர். அப்படியானால், இந்த விவகாரத்தில் போலீசாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களால் உற்று நோக்கப்பட்டு வருகிறது.
உதிர் சூர்யா
இதே உதித் சூர்யா விவகாரத்தில் நம் போலீசாரை பாராட்டாமல் இருக்க முடியாது. தவறு நடந்துள்ளது என்று தெரிந்ததுமே, கட்டி அலேக்காக தூக்கி கொண்டு வந்துவிடும் அளவுக்கு திறமை வாய்ந்தவர்களே. அதேபோல, தலைமறைவாக உள்ள ஜெயகோபாலையும் கைது செய்ய மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தனிப்படை
ஆளும் தரப்பை சேர்ந்தவர் என்ற அடையாளத்தை தவிர்த்து, அநியாயமாக ஒரு உசுரு போக காரணமாக இருந்தவர் என்ற கோணத்தில் இதை போலீசார் அணுக வேண்டும் என்பதே நம் எண்ணமாக இருக்கிறது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகளை முடக்கிவிட்டு, ஜெயகோபாலை விரைவாக பிடித்தால், மக்களிடம் நல்ல பெயரை எளிதாக வாங்க முடியும். இதன்மூலம் போலீசார் மீது மக்களுக்கு மேலும் பிடிப்பும், நெருக்கமும் நிச்சயம் ஏற்படும்.
பெருத்த நம்பிக்கை
கோர்ட் கண்டனங்களையும் சம்பாதிப்பதை தடுக்க முடியும், தவிர்க்க முடியும். இது எல்லாவற்றையும்விட பெற்ற மகளை பறிகொடுத்து கலங்கி கொண்டிருக்கும் அந்த ஜீவன்களுக்கு, இந்த கைது நடவடிக்கையால் ஒரு சொற்ப ஆறுதலாவது கிடைக்கும். வெட்டி வா என்றால், கட்டி வந்து நிற்கும் நம் போலீசார் மீதான மலைபோல் நம்பிக்கை இன்னமும் மக்களுக்கு குறைந்துபோய் விடவில்லை!