ஜின்பிங்-மோடி சந்திப்பில் நேற்று அசத்திய மதுசூதன் ரவீந்தரன்.. இன்று காணோமே!
சென்னை: பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான மாமல்லபுர பயணத்தில் அனைவரையும் கவர்ந்தவர் மதுசூதன் ரவீந்தரன். ஆதிதமிழரின் சிற்பகலை பெருமைகளை அன்னிய தேசத்து அதிபருக்கு அழகாக எடுத்துரைத்த அந்த தமிழ் மகன் மதுசூதன் ரவீந்தரனை இன்றும் பலரும் தேடி ஏமாற்றம் அடைந்தனர்.
பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜின்பிங் இடையே முறைசாரா மாநாடு மூலமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருதரப்பு உறவை வலுப்படுத்தும் யுக்தியாக இந்த முறைசாரா மாநாடுகள் கருதப்படுகின்றன.
மாமல்லபுரத்தில் புராதான தமிழர் சிற்பங்களை ஜின்பிங் மற்றும் மோடி பார்வையிட்டனர். அந்த சிற்பங்கள் குறித்து ஜின்பிங்குக்கு விவரித்தவர்தான் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி மதுசூதன் ரவீந்தரன். சீனாவில் நீண்டகாலம் பணிபுரிந்ததால் அவருக்கு உள்ளூர் மொழியான மாண்ட்ரிக் பேசுவதில் தேர்ச்சி பெற்றவராவார்.
அதனால்தான் யுஹான் முறைசார சந்திப்பின் போதும் மதுசூதன் ரவீந்தரன் இருதலைவர்களிடையேயான மொழிபெயர்ப்பாளராக இருந்தார். தற்போது மாமல்லபுரம் மாநாட்டின் மூலம் ஒரே நாளில் உலகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிற நபரானார் மதுசூதன் ரவீந்தரன்.
ஆனால் மோடி-ஜின்பிங்கின் இன்றைய 2-ம் நாள் பேச்சுவார்த்தை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மதுசூதன் ரவீந்தரன் இடம்பெறவில்லை. இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் எங்கே மதுசூதன் ரவீந்தரனை காணவில்லை என்கிற கேள்வியை சமூக ஊடகங்களில் எழுப்பியதுடன் பல்வேறு யூகங்களையும் கொளுத்திவிட்டுப் போயினர்.
பொதுவாக பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின் போது வெளியுறவு அமைச்சக இயக்குநரான நிலாக்ஷி சஹா சின்காதான் மொழிபெயர்ப்பாளராக இருப்பார். ஏனெனில் அவருக்கு இந்தி, ஆங்கிலம், பெங்காலி மற்றும் பிரெஞ்ச் மொழிகள் நன்கு தெரியும் என்பதுதானாம்.