முகிலனை கண்டுபிடியுங்கள்.. இணையும் கைகள்.. ஆர்.நல்லகண்ணு தலைமையில் மார்ச்.2ம் தேதி போராட்டம்!
10 நாட்களுக்கு முன் காணாமல் போன சமூக ஆர்வலர் முகிலனை மீட்க கோரி, தமிழக அரசுக்கு எதிராக வரும் மார்ச் 2ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
சென்னை: 10 நாட்களுக்கு முன் காணாமல் போன சமூக ஆர்வலர் முகிலனை மீட்க கோரி, தமிழக அரசுக்கு எதிராக வரும் மார்ச் 2ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு உட்பட பல முக்கிய தலைவர் இதில் கலந்து கொள்கிறார்கள்.
கடந்த பிப்ரவரி 15ம் தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூகநல போராளியுமான முகிலன் கடந்த வாரம் சென்னையில் காணாமல் போனார். இன்னும் இவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, போலீஸ் இவரை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டுள்ளது.
எப்படி காணாமல் போனார்
சென்னையில் முகிலன் சார்பாக ‘கொளுத்தியது யார்? ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்' என்ற பெயரில் அவர் முக்கிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அன்று இரவே சர்ச்சைக்குரிய வகையில் முகிலன் காணாமல் போனார். இவரை போலீசார் கைது செய்து இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூட தகவல்கள் வருகிறது.
ஆலோசனை செய்தனர்
இச்சம்பவம் தொடர்பாக இன்று மதியம் சென்னையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சமூக ஆர்வலர்கள், போராளிகள் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் பெரும் எண்ணிக்கையில் திரண்டு ஆலோசனை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
யார் எல்லாம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, திமுக ராஜ்ய சபா எம்.பி டி. கே. எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி. மகேந்திரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். ஆலோசனையில் முடிவில், முகிலனை மீட்க கோரி சென்னையில் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
என்ன முடிவு
அதன்படி முகிலனை உடனடியாக தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மார்ச் 2ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பல முக்கிய தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.