பொக்கிஷத்தை பொசுக்கி விட்டு எப்படி வாழப் போகிறோம்.. யோசித்தீர்களா?
சென்னை: எல்லா இடத்திலும் இயற்கையை அழித்து வருகிறான் மனிதன். இயற்கைக்குப் புறம்பான செயல்கள்தான் அதிகரித்து வருகின்றன. வயல்களையும், காடு, தோட்டத்தையும் அழிக்கும் மனிதன் மொட்டை மாடியில் தோட்டம் போட்ட வீட்டு விவசாயத்தில் குதித்து விட்டான்.
ஆனால், இயற்கையை அழித்து செயற்கையை நாடுவதில் என்ன பயன்.. இதை யாரும் உணர்கிறோமா என்று தெரியவில்லை. வாழையடி வாழையாக நம் முன்னோர்கள் காப்பாற்றி தந்த பொக்கிஷத்தை அழித்துவிட்டு எதை ஆக்கப்பூர்வமாக செய்ய போகிறோம்.
நண்பர்களே !
உணவே மருந்தாக உட்கொண்டு காலத்தை கழித்து கொண்டிருந்த நம் தலைமுறையே இன்று மருந்தே உனவாக உட்கொள்வதால் காலம் நம் தலைமுறையையே கழித்து கொண்டுள்ளது.
உங்களுக்கு ஞாபகம் உள்ளதா நண்பர்களே, அன்றைய காலத்தில் 10 நண்பர்கள் சேர்ந்தால் போதும் மண்டை காயும் உச்சி வெயிலில் ஊரை சுற்றிவிட்டு
சோர்வடையும் நேரத்தில் அனைவரும் கையில் இருக்கும் பைசாக்களை சேர்த்து 1 ரூபாய் தேத்தி ஒரு இரண்டு எலுமிச்சை பழத்தை வாங்கி எலுமிச்சை ஜூஸ் போட்டு அருந்தி சற்று நேரம் ஓய்வேடுப்போம்.
ஆனால் இதிலுள்ள வேடிக்கை என்னவென்றுனு பார்த்தீங்கன்னா நாம் அருந்தின பழச்சாரில் விட்டமின்-சி உள்ளது . அதனால் தான் நமக்கு களைப்பு தெரியவில்லை என்று பருகிய நண்பர்கள் எவருக்குமே தெரியாது.
இதை ஏன் நான் குறிப்பிடுகிறேன் என்றால் அப்போது எல்லாம் எந்த பழத்தில் என்ன நற்குணங்கள் உள்ளது என்று ஆராய்ந்து பார்க்க மாட்டோம். விரும்பி சாப்பிடுவோம், சுவைத்து உட்கொள்வோம். அநேக நேரங்களில் வெளி உணவுகளை உட்கொள்ளும் வாய்ப்புகளே இருந்ததில்லை. நமது உடல் உபாதைகள் எதுவுமின்றி ஆரோக்கியமாக சுற்றி திரிந்தோம். இதனாலேயே உணவகமும், மறுத்துவமனையும் சற்று குறைந்தே இருந்தது.
ஆனால் இன்று உணவகமும், மருத்துவமனைகளும் ஏராளம். உடல் உபாதைகளோ தாராளம். இதற்கு காரணகர்த்தாக்கள் சாட்சாத் நாமேதான். வீட்டில் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிடுவதை தவிர்த்து , வெளியில் உணவுகளை உட்கொள்வதை விரும்பியதன் விளைவு இன்று நாமே நமக்கு கேடு விளைவித்து கொண்டுள்ளோம் நண்பர்களே
அறியாமை அதிக அளவில் இருந்தாலும் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் , நேரம் தவறாமை இவற்றை பின்பற்றி இருந்தோம். ஆனால் இன்று அறிவு இருந்தும் பயனில்லாமல் குளிர்பானங்களை குளிர்சாதன பெட்டியில் அடுக்கி வைத்துள்ளோம். ஆடம்பர வாழ்க்கை சூழலில் வாழ்க்கை அமைத்துகொள்ளும் மோகத்தில் மிகவும் அழகான வாழ்க்கை சூழலையும், ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களையும் இழந்து கொண்டுள்ளோம் நண்பர்களே.
மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயமென்னவென்று பார்த்தால் இதில் நம் தலைமுறை மட்டுமில்லாமல் நமது அடுத்த தலைமுறையையும் சேர்த்து அழித்து வருகிறோம். நமது தாய் தந்தையர், தாத்த பாட்டி நமக்கு கற்றுக் கொடுத்த ஆராக்கியங்களை நாம் முற்றிலும் மறந்து விட்டாம். நமது சந்ததிகளுக்கு இதைக் கொண்டு செல்லத் தவறி விட்டோம்.
இதை நாம் சற்று உணர்ந்தால் நம் அடுத்த தலைமுறைக்கு பாதிப்பில்லாமல் சற்று தவிர்க்கலாம்..
அழகான வாழ்க்கையை
ஆரோக்கியமாக வாழ முயற்சிப்போம்... என்ன செய்வோமா?
- கலை