மக்களே.. இவர்கள்தான் காங்கிரஸ் வேட்பாளர்களாம்.. உறுதியில்லை, ஊகம்தான்!
- கோயா
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளை திமுக ஒதுக்கி விட்டது. அடுத்து என்ன தொகுதி, யார் வேட்பாளர் என்ற மேட்டர் காத்திருக்கிறது.
அதை விடுங்க, காங்கிரஸ் தரப்பைச் சேர்ந்த மிக மிக நம்பகமான ஒருவரிடம் நாம் தொடர்பு கொண்டு, பாஸ் யார் யார் எந்தெந்த தொகுதி.. லைட்டா தட்டி விடுங்க என்று (இடது) காதைக் கிள்ளியபோது அவர் சொன்னது இது.
இதுதான் அந்த பத்து தொகுதிகள்:
- ஈரோடு
- சிவகங்கை
- தேனி
- ஆரணி
- சேலம்
- ராமநாதபுரம்
- விருதுநகர்
- புதுச்சேரி
இருங்க.. இருங்க.. என்னண்ணே எட்டு தொகுதிதான் வருது என்று மறுபடியும் அவரது (இப்போது வலது) காதைக் கடித்தபோது, அட இதுதாங்க இப்போதைக்கு கசிந்தது. புல் லிஸ்ட் அதிகாரப்பூர்வமாக வரும்போது பார்த்துக்கங்க என்றார். அட நில்லுங்கண்ணே.. இந்த எட்டில் நிற்கப் போவது யார்.. அதை யார் சொல்லுவாங்க என்று செல்லமாக கோபித்துக் கொண்டோம்.. அதையும் நான்தான் சொல்லணுமா என்று அலுத்துக் கொண்டே அவர் கக்கிய அந்தத் தகவல் இதுதான்..
ஈரோடு - ஈவிகேஎஸ் இளங்கோவன்
சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்
தேனி - ஜே. எம்.ஆரூண்
ஆரணி - விஷ்ணு பிரசாத் (டாக்டர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர்)
சேலம் - கே.வி. தங்கபாலு
ராமநாதபுரம் - எஸ். திருநாவுக்கரசர்
விருதுநகர் - மாணிக்கம் தாகூர்
புதுச்சேரி - ஜான் குமார்.
ஓகே.. இவர்கள்தான் வேட்பாளர்களா.. அப்படியெல்லாம் சொல்ல முடியாது. இதில் ஓரிருவர் மாறலாம். பட் பெரும்பாலானவர்களின் பெயர்கள் உறுதியாகி விட்டது என்று கூறி அவர் பறந்து விட்டார். அவர் இருக்கட்டும்.. ஆமா அது யாரு புதுச்சேரியில் ஜான் குமார்.. இருங்க, போய் விசாரிச்சுட்டு வர்றோம்.