மொத்தம் 11 மாவட்டங்கள்.. நிச்சயம் மழை பெய்யும்! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்! எங்கெல்லாம் தெரியுமா
சென்னை: வரும் காலத்தில் வானிலை எப்படி இருக்கும், எந்த பகுதிகளில் எப்போது மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குளிர்ச்சியான ஒரு வானிலையே இருந்து வருகிறது.
பருவமழை முடிந்திருந்த நிலையில், இப்போது ஒரு கேப்பற்கு பிறகு பரவலாக மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே வரும் காலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
2015 சென்னை வெள்ளம் நினைவிருக்கா? பசிபிக் கடலில் உருவாகும் புதிய 'எல் நினோ'.. ஏன் முக்கியம்?
11 மாவட்டங்கள்
இதன் காரணமாக இன்று பிப்.1 தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை எங்கு மழை
அதேபோல நாளை பிப். 2 தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் நாட்கள்
நாளை மறுநாள் (பிப். 3) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். பிப. 4ஆம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழையும் பிப்.5ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோடியக்கரை 40 மிமீ, வேதாரண்யம் 30 மிமீ மழை பெய்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
நாளை இலங்கை மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுநாள் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். பிப். 4இல் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.