ஆரோக்கிய வாழ்வுக்கு தேவை யோகாவா.. தீவிர உடற்பயிற்சியா...? நல்ல முடிவெடுக்க நச்சுன்னு 4 பாயிண்ட்!
சென்னை: ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி மிக முக்கியம் என தெரியும். ஆனால் யோகா செய்யலாமா அல்லது ஜிம்முக்கு சென்று தீவிர உடற்பயிற்சி செய்யலாமா என்ற குழப்பம் நன்கு படித்தவர்களுக்கு கூட எழுகிறது என்றால் வியப்பாக உள்ளதா..?
ஆம்.. வரத்தாங்க செய்யுது.. காரணம் இரண்டிலும் பெஸ்ட் உள்ளதால்தான். ஆனால் சரியான முடிவெடுக்க வேண்டும் இல்லையா.. அது முக்கியமாச்சே. இதுவரை உடற்பயிற்சி குறித்து ஓரளவிற்கு தெரிந்தவர்கள் கீழ் குறிப்பிட்டு உள்ள சில முக்கிய டிப்ஸ் தெரிந்துக் கொண்டாலே ஆரோக்கிய உடலை பெற எது முக்கியம் .. எந்த அளவிற்கு முக்கியம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
1. சிந்தனையை செம்மைப்படுத்தி தன்னம்பிக்கையை அதிகரிக்கும் யோகா
நம் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதுடன், எதையும் தன்மைபிக்கையுடன் அணுக தேவையான நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் யோகா. ஆனால் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கட்டுக்கோப்பான உடல் அமைப்பை மட்டுமே பெற வழி வகுக்கும்.
2. உடல் உள் உறுப்புகளுக்கும் வெளி தோற்றத்திற்கும் வலு சேர்க்கும் யோகா..!
உடல் முழுதும் அசைவுகள் கொடுத்து, கைகளை நீட்டி மடக்கி திருப்பி யோகா செய்வதால் செரிமானத்திற்கு உதவி புரியும். இதயத்தின் செயல்பாடு சீராக இருக்க செய்யும். ஹார்மோன் சுரப்பை நிலையாக வைத்துக்கொள்ளும். மொத்தத்தில் வலுவான தசைகளை உருவாக்கும்.
ஆனால், உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகளை நன்கு வலுவாக்கினாலும் இதயத்தின் வேலைப்பளு அதிகரிக்கும்.
3. ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை.!
நம்முடைய பலம் எது? பலவீனம் எது? என்பதை எளிமையாக புரிந்துக்கொண்டு நாம் எடுத்து வைக்கும் எந்த செயலையும் சரியான பாதையில் கொண்டு செல்ல யோகா வழி வகுக்கும். இதன் மூலம் நம்மை நாமே நன்கு புரிந்துக்கொண்டு வாழ்க்கையின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்லும். ஆனால் உ டற்பயிற்சியில் ஒரு குழுவாக இணைந்து செயல்படும் போது... எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை என்றால் தோல்வி மனப்பான்மை அல்லது மனச்சோர்வு வர வாய்ப்பு உள்ளது. உதாரணத்திற்கு அதிக உடல் எடை கொண்ட ஒருவர் குறிப்பிட்ட மாதத்தில் 5 கிலோ எடை குறைத்து இருக்கும் பட்சத்தில் தம்மால் 3 கிலோ எடை மட்டுமே குறைக்க முடிந்தது என்றால்.. ஒருவிதமான தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்படுவார்கள்
4. யோகாவில் முழு கவனம்..!
யோகா நிலையங்களில் கண்ணாடி வைப்பது கிடையாது. எனவே நம் முழு கவனமும் யோகா செய்வதில் இருக்கும். குறிப்பாக நாம் எங்கு அமர்ந்து உள்ளோம்; நம் உடல் என்ன செய்கிறது; உடலில் நடக்கும் சிறு சிறு அசைவுகள் என அனைத்தையும் எளிதாக உணர்ந்து, மனதை ஒரு நிலைப்படுத்த முடியும். ஆனால் உடற்பயிற்சி கூடத்தில் இப்படி ஒரு வாய்ப்பு இருக்காது. கண்ணாடி பார்த்துக்கொண்டே பயிற்சி செய்வதால்.. நம் உடல் அமைப்பு பற்றிய கவலை நமக்குள் வந்துக்கொண்டே இருக்கும்.
5. ஸ்லிம் பிட் (அழகான உடலம்மைப்பை) கொடுக்கும் யோகா
கை கால்களை நீட்டி மெதுவான அசைவுகளை மிருதுவாக கொடுப்பதால், உடல்தசை வலுப்பெற்று அழகான உடலமைப்பை பெற முடியும். ஆனால்... அதிக எடையுடன் உடற்பயிற்சி செய்யும் போது தசைகள் வலுப்பெற்று கடினமான உடல் தோற்றத்தை கொடுக்கும்
6. எளிதாக செய்யலாம் யோகா
நம் முழு உடலையும் ஈடுபடுத்தி யோகா செய்வதால் இதற்காக தனி உபகரணங்கள் தேவைப்படாது. நம் உடலையே "வெய்ட்ஸ்" போல் பயன்படுத்தி பல வித ஆசனங்கள் செய்வதன் மூலம் மினுமினு சருமம் பெறுவதுடன், வலுவான உடலை பெற முடியும். ஆனால் உடற்பயிற்சியில் வெயிட்ஸ் மற்றும் மற்ற சில உபகரணங்கள் பயன்படுத்தி மட்டுமே தொப்பை குறைப்பதோ அல்லது தோள்பட்டை வலுவடைய செய்யவோ முடியும். இப்படியெல்லாம் செய்தாலும் எதிர்பார்க்கும் பலன் கிடைக்க பல நாட்கள் ஆகும்
7. யோகா செய்ய 4 அடி இடம் போதும்...
யோகா செய்ய பெரிய அளவில் இடம் தேவையே இல்லை. நம் வீட்டு அறையில் கூட செய்யலாம். அல்லது சிறிய இடம் இருந்ததாலே போதும் எங்கு அமர்ந்து வேண்டுமானாலும் யோகா செய்ய முடியும். மொத்தத்தில் 6 க்கு 4 அடி இடம் இருங்தாலே போதுமானது. ஆனால் உடற்பயிற்சி செய்ய அதற்கான இடமும் தேவையான உபரகாரணங்களும் தேவை
8. சிரமம் கொடுக்காத யோகா ..!
யோகா செய்யும் போது மெதுவாக அசைந்து கொடுத்து உடல் தசைகளுக்கு வேலை கொடுப்பதால், நமக்கு தேவையான எனர்ஜி லெவலை கொடுக்கும். இதன் காரணமாக தசைகள் மற்றும் இணைப்புகளில் ஈரப்பசை சரியான அளவில் வைக்கும்.. உடல் வலியும் இல்லாமல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
ஆனால் உடற்பயிற்சியின் போது வெயிட்ஸ் பயன்படுத்துவதாலும், அதிக அளவில் எனர்ஜி செலவழித்து பயிற்சி செய்வதாழும் உடல் வலி,சோர்வு ஏற்படும் . சில நேரங்களில் காயம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது
9.சுவாசத்தை எளிதாக்கும் யோகா
மன அழுத்தம், கவலை, சோர்வான நேரங்களில் இறுக்கமான மன நிலையில் இருப்போம் அல்லவா..? இது போன்ற தருணங்களில் மூச்சை நன்கு உள்ளிழுத்து விட்டால் சற்று புத்துணர்வு பெற முடியும்.. இப்படி ஒரு புத்துணர்வை இரண்டே நிமிடத்தில் பெற மூச்சு பயிற்சியே போதுமானது
யோகா செய்வதால் இது போன்ற இன்னும் ஏராளமான பயன்களை பெற முடியும். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி உதவினாலும். நம் மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தி யோகா செய்வதால் உடலும் ஆரோக்கியம் பெரும் உள்ளமும் பேரானந்தமாய் இருக்கும்.
எனவே நம் தேவையை பொறுத்தே உடற்பயிற்சி செய்வதா..? அல்லது யோகா செய்வது சிறந்ததா என முடிவு செய்துக்கொள்ளலாம். இருந்தாலும் ஒரு சிலர் உடற்பயிற்சியும் செய்வார்கள் யோகாவும் செய்வார்கள். இவ்வாறு செய்வது நல்லதா..? அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்பதை அடுத்து பார்க்கலாம்.
- குழலி