அதிமுகவுக்கு ரஜினி.. அப்படீன்னா திமுகவுக்கு கமல்.. இப்படித்தான் முடியும் போல!
ரஜினிகாந்த் அதிமுகவுக்கு ஆதரவு தருவார் என்று கூறப்படுகிறது.
சென்னை: ரஜினி அதிமுகவுக்கு.. கமல் திமுகவுக்கு.. என்றுதான் கூட்டணி முடியும் போல இருக்கிறது.
அதிமுக, பாஜகவின் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. ஜனவரியிலும் கூட்டணி அறிவிக்கப்பட்டுவிடும்.
இதில் பாமக, புதிய தமிழகம், தேமுதிக இணையும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாமக உள்ள அணியில் விடுதலை சிறுத்தைகள் சேராது என்று திருமாவளவன் சொல்லிவிட்டார்.
மதவாதம்
பாஜகவை கழுவி கழுவி ஊத்தி வருகிறார், வைகோ. அதனால் மதிமுகவும் இதில் இடம் பெறாது. மதவாதத்துக்கு எதிரான பாதையில் கமல் சென்று கொண்டிருப்பதால், மய்யமும் இதில் உடன்படாது.
ஆட்டோமேட்டிக்
ஆக, அதிமுக - பாஜக கூட்டணி உறுதி என்றால், "ஆட்டோமேட்டிக்காக" ரஜினி ஆதரவும் பாஜக பக்கம்தான் இருக்கும். இதுவரை அதிமுக அமைச்சர்கள் கமலை எதிர்த்து வந்த அளவுக்கு ரஜினியை எதிர்க்கவில்லை, சாடவும் இல்லை.
பாமகவுக்கு ஆகாது
அதேபோல, எந்த கட்சியையும் விமர்சிக்காமல் நாசூக்கு போக்கு கடைப்பிடிப்பதைதான் ரஜினி கடைப்பிடித்து வருவதால், அதிமுக ஒன்றும் அவருக்கு எதிரி கட்சியாக இருக்காது. ஆனால் ரஜினி இதில் இணைந்தால், பாமகவுக்கும் ஆகாது, தேமுதிகவுக்கும் ஆகாது.
வெட்கப்படுவார்களா?
ஆனால் கடந்த 2014 தேர்தலின்போது யாரும் எதிர்பாராத வகையில் தேமுதிகவும் பாமகவும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்தன. அந்த அடிப்படையில் இந்த முறையும் இவர்கள் பாஜக கூட்டணியில் ரஜினியுடன் கை கோர்க்கவும் வெட்கப்பட மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
மறைமுக பேச்சு
இந்த பக்கம் திமுகவுடன், காங்கிரஸ் உறுதியாகிவிட்டது. கம்யூனிஸ்ட்களும் கூடவேதான் இருக்கிறார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் இந்த இரு கட்சிகள் இருக்கும் பக்கம்தான் கமலின் ஆதரவு பெருமளவு இருக்கும். ஆனால் திமுகவுடன் நேரிடையாக எந்த பேச்சுவார்த்தையிலும் கமல் இறங்கவில்லை. அதேசமயம், மறைமுகமாக பேச்சு நடப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
திமுகவுக்கு கமல்?
ஒருமித்த கருத்துடைய கட்சியோடுதான் கூட்டணி என்று சொல்லிவிட்டாலும், கூட்டி கழித்து பார்த்தால், பார்த்தால், அதிமுகவுக்கு ரஜினி என்றால், திமுகவுக்கு கமல் என்று கூட்டணி முடியவும் வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. இது அரசியல் கணக்கு.. இவர்களை வைத்து மக்கள் போடப் போகும் கணக்குதான் மகேசன் தீர்ப்பு என்பதால் அந்தக் கணக்கை அறியவே அனைவரும் ஆவலோடு காத்துள்ளனர்.