வெள்ளை அறிக்கை.. பிடிஆர் சூசகம்.. பூனக்குட்டி வெளியே வரப்போகுது.. எடப்பாடி பழனிசாமிக்கு செக்!
சென்னை : நிதி மேலாண்மையில் அ.தி.மு.க. கண்ட தோல்வி "மாநில நிதி நிலை" குறித்து இனி வரப்போகும் வெள்ளை அறிக்கையில் மேலும் வெளிப்படப் போகிறது என்று கூறியுள்ள நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்னும் சில நாட்களில் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திட்டமிட்டுள்ளார்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் அதற்கு முன்னதாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டு கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதி மேலாண்மை தவறுகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதில் பிடிஆர் உறுதியாக உள்ளார். அப்போது தான் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அரசால் என்னென்ன நலத்திட்டங்களை செய்ய நதி ஒதுக்க அரசால் முடியும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் பிடிஆர் நம்புகிறார்.
கற்பனை கதை
இந்நிலையில் லாட்டரி சீட்டு விற்பனைய மீண்டும் கொண்டுவரக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், லாட்டரி கொண்டுவரப்பட உள்ளதாக கற்பனை கதைகளை பரப்ப வேண்டாம் என்று கூறினார். அந்த அறிக்கையில் தான் வெள்ளை அறிக்கை கூறியுள்ளார்.
சென்னை வெள்ளம்
இது பற்றி பிடிஆர் கூறும் போது, எடப்பாடி பழனிசாமியின் நான்காண்டு கால ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால், தமிழ்நாட்டின் நிதிநிலைமை எத்தகையை சரிவினை சிதைவினைச் சந்தித்துள்ளது என்பதை 15ஆவது நிதிக்குழுவும், மத்திய ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. 2015 சென்னை வெள்ளம் குறித்த சி.ஏ.ஜி அறிக்கை, 2017-18 மற்றும் 2018-19 மாநில நிதி குறித்த சி.ஏ.ஜி.யின் தணிக்கை அறிக்கை ஆகியவற்றை உரிய காலத்தில் சட்டமன்றத்திற்குக் கூட காட்டாமல் மூடி மறைத்து வைத்திருந்தவர் இதே எதிர்கட்சித் தலைவர்தான் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
மாநி நிதி நிலை
திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்தத் தணிக்கை அறிக்கைகள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, சென்ற அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் தோல்விகள் பொது வெளிக்கு வந்துள்ளது. நிதி மேலாண்மையில் அ.தி.மு.க. கண்ட தோல்வி "மாநில நிதி நிலை" குறித்து இனி வரப்போகும் வெள்ளை அறிக்கையில் மேலும் வெளிப்படப் போகிறது" என்று கூறினார்.
எப்படி கையாள போகிறார்
இதன் மூலம் நிதி நிலை அறிக்கைக்கு முன்பு வெள்ளை அறிக்கை வெளியாகப்போவது உறுதியாகி உள்ளது. இந்த வெள்ளை அறிக்கையை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் நெருக்கடி அளிக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இதை எப்படி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கையாளப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.