ஹைட்ரோகார்பன்.. கத்திரிக்காய் கதை சொன்ன அமைச்சர் சிவி சண்முகம்.. முக ஸ்டாலினுடன் கடும் வாதம்
Recommended Video
சென்னை: சட்டசபையில் இன்று ஹைட்ரோகார்பனுக்கு எதிரான தீர்மானத்தை திமுக கொண்டுவந்தது. அப்போது இயற்கை எரிவாயு திட்டத்திற்கு யாருடைய ஆட்சியில் அனுமதி அளிபபட்டது என்பது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா:ஆகியோரிடையே பரபரப்பான விவாதம் நடந்தது.
தமிழக சட்டசபையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்து வருகிறது. இன்று ஹைட்ரோகார்பனுக்கு எதிராக சிறப்பு தீர்மானத்தை திமுக கொண்டுவந்தது. இது தொடர்பாக மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், "தமிழக மக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒரே குரலில் எதிர்த்து வருகிறார்கள். இந்த திட்டத்தை நமது மண்ணில் புகுத்த கூடாது.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதி மூலம் நிலத்திற்குள் உள்ள எந்த வளத்தையும் எடுத்துக்கொள்ளலாம் என பாலிசியில் உள்ளது. பூமிக்கு அடியில் 5 கி.மீ வரை துளையிடப்படுகிறது. ரசாயன தண்ணீர் செலுத்தப்பட்டு பூமிக்கு அடியில் உள்ள படிம கற்கள் உடைக்கப்படுகிறது. பக்கத்து மாநிலமான கேரளாவை போல், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்" என்றார்.
அத்தனை பேரும் அதிமுகவுக்கு ரிட்டர்ன்.. சட்டசபையில் தனி மரமானார் தினகரன்!!
அனுமதி இல்லை
அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்து பேசுகையில், "காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டம் மூலம் மீத்தேன் உள்ள எரிவாயு எடுப்பது, மரபுசாரா கனிமங்களை எடுப்பது தொடர்பாக மத்திய அரசு புதிய கொள்கை அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி எண்ணெய் வளம் உள்பட அனைத்து விதமான இயற்கை வளங்களை ஒரே நிறுவனம் எடுக்க மத்திய அரசு ஒரு அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டது.அதன்படி ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா ஆகிய இரு நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஹைட்ரோ கார்பான் விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை எந்த திட்டத்திற்கும் அனுமதி அளிக்கவில்லை. இனிமேலும் அனுமதி அளிக்காது.
ஹைட்ரோகார்பன் அனுமதியில்லை
இந்த விவகாரத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசு தனது உரிமையை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காது. எந்த காலத்திலும் இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது. ஹைட்ரோ கார்பன் விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை. அதற்கு அனுமதி வழங்கக் கூடாது. அது நீங்களாக இருந்தாலும் சரி, நாங்களாக இருந்தாலும் சரி. தமிழக அரசுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வருவதில் உடன்பாடு இல்லை. பின்னர் ஏன் மனித சங்கிலி போராட்டம்? தற்போது வரை மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள். ஏதோ திட்டம் தொடங்கப்பட்டு விட்டது போல மாய தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அது தவறு
ஜெயலலிதா ரத்து செய்தார்
2011-ம் ஆண்டு மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து, அப்போது தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருந்த திமுகதான் அனுமதி வழங்கியது. அதாவது ஆய்வு செய்வதற்கு அந்த நிறுவனத்துக்கு திமுக தான் அனுமதி கொடுத்தது. 2011-ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, காவிரி டெல்டா பகுதி விவசாய மக்களின் உணர்வுக்கு மதிப்பும், மரியாதையும் அளித்து ஒரு உயர்மட்ட குழு அமைத்து இந்த திட்டம் பற்றி ஆலோசித்தார்.. இதைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் ஆய்வு நடத்த வழங்கப்பட்ட அனுமதியையும் ஜெயலலிதா ரத்து செய்தார். எனவே ஜெயலலிதா அவர்களின் கொள்கை தான் எங்கள் கொள்கை, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும் அ.திமுக அரசு அது தொடர்பான ஆய்வுக்கோ அல்லது உற்பத்திக்கோ நிச்சயம் அனுமதி கொடுக்காது" என்றார்.
ஆய்வுக்கு மட்டுமே அனுமதி
இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், அமைச்சர் பேசும் போது, திமுக ஆட்சியில் தான் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு உரிமம் வழங்கியது போல பேசுகிறார். அது தவறு. திமுக ஆட்சியில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ஆய்வு நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது என்றார். அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம் குறுக்கிட்டு "நீங்கள் எத்தனை தடவை சொன்னாலும், நடந்த உண்மையை மறைக்க முடியாது. 2010-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்தது. அந்த காலக்கட்டத்தில் துணை முதல்வாக இருந்த மு.க.ஸ்டாலின், அதிகாரி ராஜீவ் ரஞ்சன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலகத்தில் கையெழுத்தாகி உள்ளது. ‘‘தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன்'' என்ற நிறுவனத்துக்கு ஆய்வுக்கான அனுமதியை திமுக அரசு கொடுத்துள்ளது" என்றார்.
அனுமதி அளிக்கவில்லை
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் பேசுகையில், "அமைச்சர் சிவி சண்முகம் விளக்கம் தரும் போது தவறான தகவலை தருகிறார். 2011-ல் திமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டது. அந்த திட்டத்தை செயல்படுத்த நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை" என்றார்.
சிவி சண்முகம் கேள்வி
அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழ் நாட்டுக்குள் ஹைட்ரோகார்பன் திட்டமே வரக் கூடாது என்று நாங்கள் எதிர்த்து வருகிறோம். திமுக ஆட்சியில் ஏன் அந்த திட்டத்துக்காக ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
ஆய்வு வேறு அனுமதி வேறு
இதற்கு பதில் அளித்து பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், பொதுவாக எந்த திட்டமாக இருந்தாலும் ஆய்வு என்பது வேறு, அனுமதி என்பது வேறு, ஆய்வையே முடிவு என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.
சிவி சண்முகம் கேள்வி
அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் " கத்திரிக்காயை சாப்பிடுகிறோம் என்றால் அப்படியே சாப்பிட முடியாது வெட்டி, சுத்தம் செய்து சமைத்த பிறகே சாப்பிட முடியும். அது போல ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்ப்பதாக சொல்லும் நீங்கள், அது தொடர்பாக கிணறு தோண்ட ஏன் ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தீர்கள்? என்பதை கூறுங்கள். அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். நாங்கள் இப்படி ஆய்வுக்கு கூட அனுமதி கொடுக்கவில்லை. பிறகு ஏன் திமுக சார்பில் போராட்டம் நடத்துகிறீர்கள்? மனித சங்கிலி போராட்டம் நடத்தியது எதற்காக? பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதன் நோக்கம்தான் என்ன?" என்றார்.
திட்டம் நிறைவேறும் என்பதால்
அப்போது பதில் அளித்து பேசிய மு.க.ஸ்டாலின், "மத்திய அரசு உங்களது எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்து விடும் என்பதால்தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்" என்றார்.
பயப்படதேவையில்லை
இறுதியாக பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், "தமிழ்நாட்டுக்குள் நில பரப்பளவில் மாநில அரசின் ஒப்புதலைப் பெற்றே எதையும் செய்ய முடியும். எனவே யாரும் அச்சப்பட தேவை இல்லை. ஹைட்ரோகார்பன் திட்டம் உள்பட மக்களை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதி கொடுக்காது" என்றார்.