"ஹிட் லிஸ்ட்" இதுதான்.. இவர்களுக்கு "சீட்" கிடைக்கலாம்.. அவர்களுக்கு "ஆப்பு" வரலாம்!
இந்த முறை அமைச்சர்கள் யாருக்கெல்லாம் சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: அதிமுகவுக்குள் கூட்டணி பிரச்சனை, சீட் எண்ணிக்கை, தொகுதி ஒதுக்கீடுகள் ஒருபக்கம் இருந்தாலும், எந்தெந்த அமைச்சர்களுக்கு இந்த முறை சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது பெரிய எதிர்பார்ப்பாக உருவெடுத்து வருகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் நடக்கும் எந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்திலும் ஓப்பன் பேட்ஸ்மேனாக களமிறங்குவது கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமிதான், இம்முறையும் அவரேதான்.
இந்த தேர்தல் முடியும்வரை அவரேதான்.. இதற்கு காரணம் தங்களால் சொல்ல முடியாத பலவிஷயங்களை, முனுசாமியை வைத்து பேச வைக்க, தலைமை விரும்புவதுதான். அந்த வகையில் முனுசாமி தவிர்க்க முடியாத இடத்தில் அதிமுகவில் இடம்பெற்றுள்ளார்.
வேலுமணி தங்கமணி
அமைச்சர்களை பொறுத்தவரை கொங்கு மண்டல பிரமுகர்கள் ஹிட் லிஸ்ட்டில் வந்துவிடுகிறார்கள்.. வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் போன்றோர், ஏராளமான நலத்திட்டங்களை தொகுதிகளுக்கு செய்திருக்கிறார்கள்.. அவர்களின் குறைகளை போக்கி, திமுகவுக்கு இணையான ஒரு பலத்தை கொங்குவில் வளைத்து போட்டுள்ளனர்.. இதைதவிர தங்களின் துறை வாரியான பணிகளையும் சிறப்பாகவே செய்திருக்கின்றனர்.. இதில் டாப்பில் உள்ளது செங்கோட்டையன் என்றே சொல்லலாம்.
நெருக்கமானவர்கள்
பெருமளவு சர்ச்சைகளிலும், ஊழல்களிலும் இவர்கள் பெயர் அடிபடவில்லை.. இதுபோக முதல்வருக்கு மிகவும் நெருக்கமான நபர்களும்கூட.. நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களும்கூட.. தமிழகம் சார்ந்த எந்த பிரச்சனைகளாக இருந்தாலும், அதை டெல்லிக்கு சென்று பேசி முடித்து வைப்பதும் இவர்களே.. அந்த வகையில் இந்த முறையும் இவர்களுக்கு வாய்ப்பு நிச்சயம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவர்கள் இந்த லிஸ்ட்டில் ஓஎஸ் மணியனையும் இணைத்து கொள்ளலாம்.
திண்டுக்கல் சீனிவாசன்
ஆனால், வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல் உளறி உளறி கொட்டிய அமைச்சர்களான செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர்களுக்கு வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை.. இவர்கள் சீனியர்களாக இருந்தாலும், அதையும் தாண்டி இவர்களின் சர்ச்சைகளே மேலோங்கிவிட்டது.. இதேதான் ராஜேந்திர பாலாஜியும்.. ஒருகட்டத்தில் முதல்வருக்கு தர்மசங்கடத்தையும், எரிச்சலையும்கூட இவர் ஏற்படுத்தி விட்டார்.. முதல்வருக்கு சாதகமாகவே இப்போது வரை ராஜேந்திர பாலாஜி பேசிவந்தாலும்கூட, இவர் பாஜகவை சார்ந்தவரோ என்ற எண்ணமே நமக்கு மேலோங்கிவிடுகிறது.. இதுபோக சொந்த மாவட்டத்தில் ஏகப்பட்ட உட்பூசலிலும் சிக்கி உள்ளதால், இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை.
ஜெயக்குமார்
ஆனால், நிச்சயம் ஜெயக்குமாருக்கு சீட் உறுதி போலும்.. முதல்வருக்கு அடுத்தபடியாக, அல்லது முதல்வரையும் மிஞ்சி இவர்தான் எல்லாருக்கும் பதில் சொல்லி கொண்டிருக்கிறார்.. எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி, செய்தியாளர்களாக இருந்தாலும் சரி, துல்லியமான புள்ளிவிவரங்களுடன் எடுத்து சொல்லி திணறடித்து வருகிறார்.. "முதல்வர் வேட்பாளரை நாங்கள்தான் அறிவிப்போம்" என்று இத்தனை நாளும் மிரட்டிவரும் எல்.முருகனுக்கு இவர் ஒருத்தர்தான் சளைக்காமல் பதில் சொல்லி வருகிறார்.. அதிமுகவின் தூணாகிவிட்ட ஜெயக்குமார் நிச்சயம் அடுத்த முறையும் அமைச்சராவார் என்றே தெரிகிறது.
சிவி சண்முகம்
யாராக இருந்தாலும் பயப்படாமல், டக்டக்கென பதில்களை சொல்லி, கேள்விகளை கேட்டு, திணறடித்து வருகிறார் சி.வி. சண்முகம்.. சமுதாய வாக்குகள் நிறைந்தவர்.. திமுகவுக்கு சரியான போட்டியாளர்.. அதிமுகவின் சில மூத்த தலைகளே இவருக்கு சில சமயம் ஆஃப் ஆகிவிடுவார்கள்.. ராமதாஸ் ஒருவேளை கூட்டணியில் இல்லாவிட்டாலும் சரி, விழுப்புரத்தையே தன் பக்கம் திரும்பி பார்த்து விடுவார்.. அந்த வகையில் இவருக்கு இந்த முறையும் சான்ஸ் கிடைக்கும் என்றே தெரிகிறது..
வாரிசு அரசியல்
இதற்கு நடுவில், வாரிசு பிரச்சனையும் உருவாகி உள்ளது.. திண்டுக்கல் சீனிவாசனும், அமைச்சர் பாஸ்கரும் தங்களது மகன்களுக்கும் சீட்டு கேட்டு தலைமையை ஏற்கனவே நெருக்க வந்ததாக ஒரு செய்தி வெளியானது.. இவர்களுக்கே இந்த முறை சீட்டு கிடைக்குமா என்பது தெரியவில்லை.. தென்மாவட்டங்களை பொறுத்தவரை இந்த 2 அமைச்சர்களுக்கும் இந்த முறை கல்தா நிச்சயம் என்கிறார்கள். அதேபோல, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜனும், தனக்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, தன் மகனுக்கு கட்டாயம் சீட் வாங்கி தர வேண்டும் என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கத்தின் மூலம் காய்நகர்த்தி இருக்கிறார் என்கிறார்கள்.
ஜெயலலிதா
ஜெயலலிதா இருந்தவரை எவ்விதப் பின்னணியும் இல்லாத நிலையிலும் தீவிரமான கட்சி தொண்டர்கள் பலருக்கு உயர்பதவிகளை வழங்கி கவுரவப்படுத்தினார்... இதை திமுககூட இன்றுவரை செய்ததில்லை.. பல குடிசையில் வசித்தவர்கள் கோபுரத்துக்கு உயர்த்தியதில் ஜெ.வுக்கு நிறைய பங்கு இருக்கிறது, ஆனால், வாரிசு அரசியலை அவர் பிரதானப்படுத்தவில்லை.. அவர் மறைந்த பிறகுதான், ஓபிஎஸ், ராஜன் செல்லப்பா, ஜெயக்குமார் என லிஸ்ட் பெரிதானது.. இப்போதும்கூட அதே பாணியை அதிமுக கடைப்பிடித்தால், திமுகவுக்கு இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதைதான் மக்கள் கேட்க வேண்டி வரும்.
டாப் லிஸ்ட்
அதேசமயம், இந்த முறை தயவு தாட்சன்யம் பார்க்காமல், வெற்றிபெறக் கூடியவர்களுக்கே சீட் கொடுக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. அதாவது அமைச்சர்கள் என்கிற முறையில் எல்லாம் சீட் வழங்க முடியாது என்பதில் அதிமுக தெளிவாக இருக்கிறதாம்.. யார் யார் அந்த டாப்லிஸ்ட்டில் இடம் பிடிக்கிறார்கள்? யார் யாருக்கு கல்தா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்!