பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு எதிராக வலுக்கும் குரல்கள்.. யார் இவர்கள்?
சென்னை: தமிழகத்தில் பொதுமக்களுக்கு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்த அமைக்கப்பட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர், சிலர் குற்றங்களை புரிவதாக புகார்கள் எழுவதால் அந்த அமைப்பை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.
தமிழகத்தில் காவலர்களுக்கு உதவியாக இருக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தற்போது அவர்களுக்கு உபத்திரமாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கும் தொடர்பிருப்பதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தில் 6 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து போலீஸாருடன் இணைந்து கொண்டு தங்கள் விருப்பு வெறுப்பை காட்டும் இந்த அமைப்பு கலைக்கப்பட வேண்டும் என கண்டன குரல்கள் வலுக்கின்றன.
சாத்தான்குளம் துயர சம்பவம் : பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை - திருச்சி சரக டிஐஜி உத்தரவு
27 ஆண்டுகள்
இந்த நிலையில் பிரண்ட்ஸ் ஆப் அமைப்பு என்றால் என்ன, அவை எப்போது தொடங்கப்பட்டது என்பது குறித்து பார்ப்போம். இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 27 ஆண்டுகள் ஆகின்றன. இந்த அமைப்பு முதன்முதலாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொதுமக்களுக்கும் போலீஸுக்கும் இடையே ஒரு நெருக்கத்தை கொண்டுவருவதே இதன் நோக்கமாகும்.
அரசியல் கட்சி
4000 பேர் இந்த அமைப்பில் உள்ளனர். இவர்கள் இந்த பணிக்காக விண்ணப்பித்து தேர்வாகிறார்கள். இதற்காக இவர்களுக்கு ஊதியம் ஏதும் வழங்கப்படுவதில்லை. இதற்கான குறைந்தபட்ச தகுதி என்னவெனில் இந்த அமைப்பில் இணைய விண்ணப்பிக்கப்படும் நபருக்கு அரசியல் கட்சியினருடன் தொடர்போ, குற்றப் பின்னணியோ இருக்கக் கூடாது என்பதுதான்.
ஈர்ப்பு
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கிராமப்புற இளைஞர்களே இந்த பணிக்கு பெரும்பாலும் விண்ணப்பிக்கிறார்கள். சம்பளமே இல்லாமல் இந்த அமைப்பில் இத்தனை பேரா என நீங்கள் கேட்பது புரிகிறது. காரணம், போலீஸாருடன் அன்றாடத் தொடர்பில் இருப்பது என்ற ஒரு ஈர்ப்பு காரணமாகவே பெரும்பாலான இளைஞர்கள் இதில் சேர்கிறார்கள்.
அமைப்பு
குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காகவும் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. போலீஸ் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை இழப்பை திரும்ப கொண்டு வருவதற்காகவும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதாக சொல்கிறார்கள். காவல்துறையின் ஆற்றலை வலுப்படுத்துவதற்கும் அவர்களின் தவறான பிம்பத்தை போக்குவதற்கும் இந்த அமைப்பு அமைக்கப்பட்டது.
குற்றச்சாட்டு
பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பு தந்தை, மகன் உள்பட எத்தனையோ அப்பாவிகள் இறப்பதற்கும், காயமடைந்ததற்கும் காரணமாக ஒரு சிலர் இருக்கிறார்கள் என்று பரவலாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதனால் அந்த அமைப்பை கலைக்க வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்துள்ளன.