ரஜினியை சுற்றி இருப்பவர்கள் யார்..? ஏன் இந்த தடுமாற்றம்..? கலக்கத்தில் ரசிகர் மன்றத்தினர்..!
சென்னை: நாடு போற்றும் நல்ல நடிகர் என பெயரெடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு ஆறரை லட்சம் ரூபாய் வரி விவகாரத்தால் இன்று தேசியளவில் விவாதப் பொருளாகியுள்ளார்.
நான்கு சுவர்களுக்குள் பேசி முடிக்க வேண்டிய விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்று ஊரெல்லாம் பேச வைத்துள்ளார் ரஜினி.
இதன் மூலம் தேவையற்ற விமர்சனங்களில் சிக்கியதோடு தனது இமேஜை தாமே குறைத்துக்கொள்ளும் வகையிலும் அவர் செயல்பட்டுள்ளார்.
தூத்துக்குடி டூ சொத்து வரி வரை.. பாடம் கற்றுக் கொண்டே இருக்கும் ரஜினி.. ஆனால்
ராகவேந்திரா மண்டபம்
நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. சென்னையில் உள்ள மிக முக்கிய வி.ஐ.பி.க்கள் இல்லத் திருமணங்கள் மட்டுமே இங்கு நடைபெறும். அதற்கு காரணம் அந்தளவிற்கு மிகவும் காஸ்ட்லியான கல்யாண மண்டபம். ஒரு நாள் வாடகையே ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் அந்தளவுக்கு இடவசதி மற்றும் திருமண வீட்டார் எதிர்பார்க்கும் அனைத்து சவுகரியங்களும் அங்கு இருக்கும்.
மாநகராட்சி
சென்னை மாநகராட்சி தரப்பில் 6 மாதத்திற்கு ஒரு முறை சொத்து வரி வசூல் செய்வது வழக்கம். இது நடிகர் ரஜினிகாந்திடம் மட்டும் வசூல் செய்யும் நடைமுறை அல்ல. சென்னையில் யாரெல்லாம் சொந்தமாக சொத்து வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் சொத்து வரி கட்டியாக வேண்டும். இதில் ரஜினிகாந்திற்கு மட்டும் எங்கிருந்து கிடைக்கும் விதி விலக்கு. ஆயிரத்தில் ஒருவனாக புறப்பட்டு நீதிமன்றத்தின் கதவை கட்டிய ரஜினிக்கு குட்டு வைத்து அனுப்பிவிட்டது நீதிமன்றம்.
யார் ஐடியா?
கோடிகளில் ஊதியம் பெறும் ரஜினிகாந்துக்கு ஆறரை லட்சம் ரூபாய் வரித்தொகை என்பது பெரிய தொகையல்ல. அதுவும் அரசாங்கம் தான் வரி கேட்டதே தவிர அரசியல் கட்சிகள் எதுவும் நிதி கேட்கவில்லை. அப்படியிருக்க சொத்து வரி விவகாரத்தில் ரஜினி ஏன் அவசரம் காட்டினார் என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. சொத்துவரிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய ரஜினி, இன்று சத்தமின்றி வரியை முறைப்படி கட்டி ரசீது பெற்றுக்கொண்டார்.
நியாயம் இல்லை
ரஜினியின் இந்த தடுமாற்றத்தை பார்த்தால் அவருக்கு ஆலோசனை கூற உரிய நபர்கள் அவருடன் இல்லை என்பது தெரிய வருவதாக கூறுகிறார் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான கணபதி. மேலும், வருமானம் இல்லை எனக் கூறி வணிக வரியை குறைக்குமாறு ரஜினி கேட்டிருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்றும் சொத்து என்பது எப்போதும் அவருக்கு சொந்தம் என்பதால் சொத்து வரியில் அவர் சலுகை எதிர்பார்ப்பது ஏற்புடையதல்ல எனவும் தெரிவிக்கிறார் அவர்.