ராஜ்ய சபாவுக்கு போகும் திமுகவின் அந்த 3 பேர் யார்?.. நீண்டு கொண்டே போகும் பட்டியல்!
ராஜ்ய சபாவுக்கு திமுக சார்பில் யார் செல்ல போகிறார்கள் என்பதில் குழப்பம் நீடிக்கிறது
Recommended Video
சென்னை: அடுத்த பஞ்சாயத்து திமுகவில் ஸ்டார்ட் ஆகி உள்ளது. அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், யாரைதான் ராஜ்யசபாவுக்கு அனுப்புவது என்பதில் குழப்பம் முட்டிக் கொண்டு உச்சத்தில் நிற்கிறது!
ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால், 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதுதான் நம்ம ஊர் கணக்கு. இப்போதைய நிலவரப்படி, அதிமுகவுக்கு 123 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. (இது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களையும் சேர்த்துதான்) அதனால் அதிமுகவினால் 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.
இதேபோல, திமுகவை எடுத்து கொண்டால், 13 இடங்களில் வெற்றிபெற்றதையடுத்து திமுகவின் பலம் 103 ஆக உயர்ந்துள்ளது. இதுவும் கூட்டணி கட்சிகளின் வெற்றியை சேர்த்துதான். அப்படிப்பார்த்தால், திமுக சார்பாகவும் 3 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும். அதனால் ஆளுக்கு 3 பேரை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பலாம். இதுதான் தற்போதைய தமிழக சூழல்!
அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? தலைமை பதவிக்கு அடிபோடும் முக்கிய நபர்கள்.. பரபர லிஸ்ட்!
குழப்பம்
ஆனால் யாரை அனுப்புறது என்பதில்தான் சிக்கலே ஆரம்பித்துள்ளது. இப்படித்தான் யாருடன் கூட்டணி என்று இழுபறி ஆனது, பிறகு யாருக்கு சீட் தருவது, எந்த தொகுதியை ஒதுக்குவது என்பதில் மண்டையை பிய்த்து கொண்டனர்.
கூட்டணி
இப்போது வெற்றி பெற்றவர்களில் யாரை டெல்லிக்கு அனுப்புவது என்பதில் பஞ்சாயத்து ஆரம்பமாகி உள்ளது. குறிப்பாக திமுகவில். கூட்டணி தொடக்கத்திலேயே வைகோவுக்கு ஒரு இடம் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. சொன்னபடி அதை செய்துதான் ஆக வேண்டும்.
வைகோ
சீட் முதல்கொண்டு, நிறைய விஷயங்களை எதிர்பார்த்து காத்திருந்தவர் வைகோ. தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்டு திருச்சியைகூட கேட்டார். ஆனால் திருநாவுக்கரசு ராகுலை வைத்து பேசி திருச்சியை வசப்படுத்தி கொண்டார். இதனால் வைகோவால் அங்கு போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. சின்னம் சம்பந்தமான பிரச்சனையும் மதிமுகவின் கழுத்தை இறுக்கியது. கடைசியில் வெறும் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
பெருந்தன்மை
ஆனால் வைகோவின் பொறுமை, பெருந்தன்மையை கண்ட திமுக தலைமை, உறுதி அளித்தவாறே வைகோவை ராஜ்யசபாவுக்கு அனுப்ப போகிறது. அப்படி பார்த்தால், மீதம் 2 பேரை திமுக டெல்லிக்கு அனுப்ப முடியும். அந்த 2 பேர் யார் என்பது பெரிய சிக்கலாகி வருகிறது. "யாருக்கு வேண்டுமானாலும் தாங்கள், ஆனால் காங்கிரஸ் சார்பில் மட்டும் யாரையும் அனுப்ப கூடாது" என்கிறார்களாம்.
காங்கிரஸ்
ஏற்கனவே 10 இடங்களை அலேக்காக தூக்கி கொடுத்தது திமுகதான். ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதனால் ராஜ்யசபாவில் காங்கிரஸ் தரப்பில் யாருமே கூடாது, மற்ற 2 பேருமே திமுக நபர்களாகவே இருக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் சொல்லி வருகிறார்களாம் அக்கட்சி மூத்த நிர்வாகிகள்.
நீளும் லிஸ்ட்
அப்படியே 2 திமுக நபர்கள்தான் என்றாலும், அவர்களில் நிறைய பேர் வரிசை கட்டி நிற்கிறார்களாம். அதில், திமுகவின் தொழிற்சங்கமான தொமுசவின் பொதுச்செயலாளர் சண்முகம், திமுக வழக்கறிஞர் பிரிவின் சட்ட ஆலோசர் என்.ஆர். இளங்கோ, திமுக செய்தித் தொடர்புத்துறை செயலாளர் கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு முத்துசாமி, திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆனால் இந்த லிஸ்ட்டில் இருந்துதான் 2 பேர் திமுக சார்பில் ராஜ்யசபாவில் அமர போகிறார்கள் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்!