துரைக்கண்ணு மரணம்- அடுத்த வேளாண்துறை அமைச்சர் பதவி 'டெல்டா'வுக்கா? 'ஜாதி'க்கா?
சென்னை: தமிழக அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் உயிரிழந்ந்த நிலையில் புதிய வேளாண்துறை அமைச்சராக டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சென்னை மருத்துவமனையில் துரைக்கண்ணு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை சில நாட்களுக்கு முன்னரே மிகவும் மோசமானது. அப்போதே அடுத்த வேளாண் அமைச்சர் யார் என்கிற விவாதம் அதிமுகவில் தொடங்கிவிட்டது.
டெல்டாவுக்கு வாய்ப்பு?
இந்த நிலையில் துரைக்கண்ணு சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு. அவர் மரணம் அடைந்த நிலையில் அதே டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேளாண்துறை அமைச்சர் பதவி கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
யார் யாருக்கு வாய்ப்பு?
பேராவூரணி எம்.எல்.ஏ. கோவிந்தராசு, பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. சேகர் ஆகியோரது பெயர்கள் புதிய வேளாண்துறை அமைச்சர் பதவிக்கு அடிபடுகின்றன. டெல்டாவின் அதிமுகவின் முகமாக, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவரான வைத்திலிங்கம், பேராவூரணி எம்.எல்.ஏ. கோவிந்தராசுவுக்கு ஆதரவு தந்திருக்கிறாராம்.
சிவி சண்முகம் முயற்சி
இன்னொரு பக்கம், சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும் நிலையில் வைத்திலிங்கமே அமைச்சராக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை எனவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஜாதிய அடிப்படையில் துரைக்கண்ணு வசம் இருந்த வேளாண்துறை தமக்கே தரப்பட வேண்டும் என சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
புதிய அமைச்சர் யார்?
கடந்த காலங்களில் அமைச்சரவை மாற்றங்கள் ஜாதிய அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டன. இதனை பின்பற்றியே தமக்கு வேளாண்துறை இலகாவையும் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்பது சிவி சண்முகத்தின் வாதமாம். புதிய வேளாண்துறை அமைச்சர் யார் என்கிற அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம்.