டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தாரா டிடிவி தினகரன்? தனிவிமான பயணத்தின் பரபர பின்னணி
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் திடீர் டெல்லி பயணம் அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பயண நேரத்தை தவிர்த்து 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே டி.டி.வி.தினகரன் டெல்லியில் இருந்ததாக அங்குள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.
இதனிடையே தினகரன் டெல்லிக்கு விமானம் ஏறும் வரை அது குறித்த தகவல் அமமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண் மசோதாக்கள்... விவசாயிகளிடம் ஆலோசிக்கவில்லை... டிடிவி தினகரன் கண்டனம்!!
பண்ணைவீடு
கடந்த மார்ச் மாதம் முதல் புதுச்சேரி ஆரோவில் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி வருகிறார் டிடிவி தினகரன். குடும்ப உறவினர்கள் மற்றும் வீட்டு பணியாட்களை தவிர வேறு யாருக்கும் அங்கு அனுமதியில்லை. திமுக, அதிமுக, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிய போது கூட டிடிவி தினகரன் மிகுந்த மவுனம் காத்து வந்தார். அவரது மவுனத்தின் பின்னணியில் சுப்பிரமணியசாமி இருப்பதாக கூட தெரிவிக்கப்பட்டது.
டெல்லி பயணம்
பதுங்கியது பாயத்தானோ என்பது போல் டெல்லிக்கு நேற்று திடீர் விசிட் அடித்து ஆளுங்கட்சியினர் பிரஷரை எகிற வைத்திருக்கிறார். சசிகலா விடுதலை தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தவே தினகரன் டெல்லிக்கு சென்றதாக வெளியே தகவல்கள் கசியவிடப்பட்டாலும் உண்மை அது இல்லையாம். அங்கு நடந்த சந்திப்பு டி.டி.வி.தினகரனின் அரசியல் எதிர்காலத்துக்கான சந்திப்பாம்.
நட்டாவுடன் சந்திப்பு?
வழக்கறிஞர்களை சந்திப்பதற்காக தனி விமானத்தில் அதுவும் இந்த கொரோனா காலத்தில் தினகரன் நிச்சயம் டெல்லி வந்திருக்க வாய்ப்பில்லை என்றும் பாஜக முக்கியத் தலைவர்கள் சிலரை ரகசியமாக சந்திக்க வந்திருக்கக்கூடும் எனவும் மூத்த டெல்லி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார். மொத்தமாக பயண நேரத்தை தவிர்த்து 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தினகரன் டெல்லியில் இருந்திருக்கிறார்.
தகவல் இல்லை
நேற்று காலை தினகரன் சென்னை விமான நிலையம் சென்றதை அடுத்து அவரது பயண விவரம் அறிவதற்காக செய்தியாளர்கள் பலரும் அமமுக பொருளாளர் வெற்றிவேலை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் டெல்லி செல்லும் தகவலே நீங்கள் சொல்லித்தான் தெரியும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.