+2 வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு லேப்டாப் கட்... பள்ளிக்கல்வித்துறை முடிவு?
சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதை நிறுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக 70,000 பேர் வரை தமிழக அரசின் இலவச லேப்டாப் பெற முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இலவச லேப்டாப் கோரி அண்மையில் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் அரசு இந்த புதிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஐடி துறையில் பணியிழப்பு வேண்டாம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு
கல்விக்கு உதவி
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வாழ்வை முடித்து கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் போது, அவர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து அறிந்து வைத்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. சுமார் 500 கோடியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு வாக்குறுதி
இந்நிலையில் 2017-2018, 2018-2019ம் ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பல ஆயிரம் மாணவர்களுக்கு இன்னும் முழுமையாக லேப்டாப் வழங்க முடியாத நிலை இருக்கிறது. இதனிடையே லேப்டாப் கோரி மாணவர்கள் அண்மையில் போராட்டம் நடத்தியதும், அவர்களிடம் லேப்டாப் தரப்படும் என அரசு வாக்குறுதி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
புதிய முடிவு
ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வரும் நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பை தேர்ச்சி பெறாதவர்கள் இலவச லேப்டாப்பை வாங்கும் தகுதியை இழக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் 70,000 பேர் வரை தமிழக அரசின் இலவச லேப்டாப் பெற முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.
லேப்டாப் கொள்முதல்
தமிழக அரசு எல்காட் நிறுவனத்திடம் இருந்தே பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப்பை கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே ஆர்டர் கொடுக்கப்பட்ட எண்ணிக்கையில் அரசு தரப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.