அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்...? பொதுக்குழுவில் அமைச்சர் தங்கமணி சூசகம்
சென்னை: வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி சூசகமாக பொதுக்குழுவில் தெரிவித்துள்ளார் அமைச்சர் தங்கமணி.
234 தொகுதிகளையும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைப்போம் என, அமைச்சர் தங்கமணி பேசியிருப்பது அரசியல் களத்தில் அதுவும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அமைச்சர் தங்கமணியின் இந்த சூசகமான பேச்சு துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அதிருப்தியை ஏறடுத்தியுள்ளது.
திருவிழா
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் இன்று நடைபெற்றது. இதனால் வானகரம் பகுதி முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருந்தது. எங்கு நோக்கினும் அதிமுக கரைவேஷ்டிகளும், கொடிகளும் தான் தெரிந்தன.
அதிமுக விதி
மேலும், அதிமுக பொதுக்குழுவில் பெயரளவில் ஏற்கனவே வடிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன. மற்றபடி எந்த முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டவில்லை. ஏற்கனவே உள்ள விதிகளைத் தான் மெருகேற்றி, வண்ணம் பூசி பிரேக்கிங் நியூஸாக கொடுத்தது இந்தப் பொதுக்குழு.
பேச்சில் காரம்
முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பேச்சில் மட்டும் சற்று காரம் தெரிந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை பற்றி சாடினார். மேலும், ரஜினியையும் அவர் விட்டுவைக்கவில்லை, கட்சியே தொடங்காதவர் எனப் பேசி சீண்டினார்.
முதல்வர் வேட்பாளர்
அதிமுகவில் 2021 சட்டமன்றத் தேர்தல் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி உள்ள நிலையில், அமைச்சர் தங்கமணி 2021-லும் 234 தொகுதிகளையும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைப்போம் என பேசியதற்கு பல காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. மீண்டும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது அவரது பேச்சு.
ஓ.பி.எஸ்.தரப்பு
அமைச்சர் தங்கமணியின் இந்த சூசகமான கருத்து அதிமுக உட்கட்சி விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே அமைச்சரின் இந்தப் பேச்சை துணை முதல்வர் ஓ.பி.எஸ். தரப்பு ரசிக்கவில்லை என்பது பொதுக்குழு நடைபெற்ற மண்டபத்திலேயே வெளிப்பட்டது.