நாய்க்கறி வதந்தி பின்னணியில் இருக்கும் சதி இதுதான்.. இறைச்சி வியாபாரிகள் சங்கம் சொல்வதை பாருங்கள்
Recommended Video
சென்னை: ஆட்டு இறைச்சியை, நாய் இறைச்சி என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இறைச்சி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரிலிருந்து, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் அனுப்பப்பட்ட 2000 கிலோ இறைச்சி என்பது ஆட்டு இறைச்சி கிடையாது, நாய் இறைச்சி என்று அதிகாரிகள் கூறியதோடு, அவற்றை அழித்தனர்.
ஆனால், வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு நேற்று வெளியானது.
ஆய்வறிக்கை
அதில் கைப்பற்றப்பட்ட இறைச்சி என்பது ஆடு அல்லது செம்மறி ஆடு இனத்தை சேர்ந்ததுதான் என்றும், நாய் இறைச்சி கிடையாது என்றும் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேட்டியளிக்கப்பட்டது.
அப்போது, அவர்கள் கூறியதாவது:
அசைவத்திற்கு எதிரான சதி
பொதுவாக அசைவ உணவுக்கு எதிராகவும், அதேபோல மாட்டு இறைச்சிக்கு எதிராகவும் பல்வேறு சதிகள் பின்னப்பட்டுக் கொண்டிருக்கின்றன, என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அப்படிப்பட்ட சதியின் பின்புலத்தில் உள்ள சக்திகள், இதன் பின்புலத்தில் இருந்தன என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. இதன் மூலமாக சிறுபான்மை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், இதனை தொழிலாக கொண்டு, வியாபாரமாக கொண்ட மக்கள், வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் மீது மிகப்பெரிய அடி கொடுக்க வேண்டும் என்று நோக்கமாக உள்ளது.
பிரியாணி மீது டார்கெட்
பிரியாணி என்பது ஒரு ஈர்ப்புக்குரிய பொருளாக பேசப்பட்டு வருகிறது. அந்த பிரியாணி உணவு மீது வெறுப்பை உமிழ்ந்து, அந்த வியாபாரம் படுக்க வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம். கடந்த 5 நாட்களில் பிரியாணி வியாபாரம், இறைச்சி விற்பனை கடும் சரிவை சந்தித்தது. அசைவ உணவு விடுதிகள் சரிவை சந்திக்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒரு சில சக்திகள் இதன் பின்னணியில் இருந்தார்கள் என்பதை நாம் கண்ணாரப் பார்த்தோம்.
சமூக ஊடகங்கள்
சமூக ஊடகங்களில், இதன் பின்னணியிலிருந்து யார் இதை வெறுப்பரசியலோடு பார்க்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். 'பாய்' என்றால் நாய்க்கறி பிரியாணி கொடுப்பவர்கள் என்று வெளிப்படையாகவே விமர்சித்ததை எல்லாம் நாம் பார்த்தோம். இதன் பின்னணியில் ஒரு சில சதி சக்திகளும் இருக்கின்றன என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு.
தப்பு செய்தால் நடவடிக்கை
எந்த தவறும் நடக்காமல் உணவு விடுதிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் சரியாக நடக்கிறது என்று நாங்கள் சொல்லவில்லை, சொல்லவும் முடியாது. ஆனால், எல்லா விவகாரத்திலும் தவறு நடப்பது போல இங்கும் தவறு நடந்திருந்தால் அரசுத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன் என்ற பெயரில் ஆட்டிறைச்சி புக் செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது, அல்லது இறைச்சி கெட்டுப் போயிருந்தது போன்ற விவகாரங்களில் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்.
அதிகாரிகள்
இந்த இறைச்சியை ராஜஸ்தானிலிருந்து அனுமதித்தது யார்? அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் வாங்கி இருப்பார்கள்? அந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு விடுதிக்குச் சென்று சாப்பிடப் போவது யார்? நாம் சாப்பிடுவோம், நமது பிள்ளைகள் சாப்பிடுவார்கள். எனவே உணவு தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் எல்லோருக்கும் அக்கறை உள்ளது. யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
இறைச்சிகளின் வகைகள்
ஆட்டு இறைச்சி தான் என்பதை அரை மணிநேரத்தில் ஆய்வகத்தில் உறுதி செய்திருக்க முடியுமா? ஐந்து நாட்கள் தேவையா என்பது போன்ற கேள்விகளுக்கு எங்களால் பதில் அளிக்க முடியாது. அதுபற்றிய விவரம் எங்களுக்கு தெரியாது. இதை கால்நடை அரசு மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள்தான் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்டிறைச்சி என்பது வித்தியாசப்படும். மேற்குவங்கத்தில் உள்ள ஆட்டிறைச்சி தமிழக ஆட்டிறைச்சியைவிட பழுப்பு நிறத்திலும், கூடுதல் சிவப்பு நிறத்திலும் இருக்கும். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் எதை வேண்டுமானாலும் பேசிவிட கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் மிக நீண்ட வால் கொண்ட ஆட்டினங்களை அவர்கள் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் எடுத்து வந்து காண்பித்தனர்.