'தலித் முகம்..'யார் இந்த பஞ்சாப் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி? காங்கிரஸ் திட்டம் வேலை செய்யுமா
சென்னை: அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 33% தலித்துகள் இருக்கும் நிலையில் சரண்ஜித் சிங் சன்னி நியமனம், காங்கிரஸின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
'மாபெரும் சாதனை..' 3 நாள் ஸ்பேஸ் சுற்றுலா.. பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்
கடந்த சில ஆண்டுகளாகவே பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த நவ்ஜோத் சிங் சித்து கடும் மோதல் போக்கு நிலவி வந்தது.
அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறியும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி நவ்ஜோத் சிங் சித்துவுக்கு வழங்கப்பட்டது.
அமரீந்தர் சிங் ராஜினாமா
இவர்கள் இருவருக்கும் இடையே கடும் வார்த்தை போர் இருந்து வந்த நிலையில், பஞ்சாப் முதல்வர் பொறுப்பிலிருந்து அமரீந்தர் சிங் நேற்று பதவி விலகினார். இதையடுத்து முதல்வர் பதவி யாருக்கு அளிக்கப்படும் என பெரும் கேள்வி எழுந்தது. சுக்ஜிந்தர் சிங் ரந்தவாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனச் செய்திகள் வெளியாகின. அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் அம்பிகா சோனிக்கு முதல்வர் பொறுப்பு வழங்கக் காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டதாகவும் ஆனால் அதை அவர் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகின.
புதிய முதல்வர்
இப்படிக் கிளம்பிய அனைத்து வியூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சரண்ஜித் சிங் சன்னியை பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராகக் காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராகத் தேர்வு செய்துள்ளனர். இது குறித்து பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவராகச் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
சரண்ஜித் சிங்
அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சரண்ஜித் சிங்கை முதல்வராகத் தேர்ந்தெடுத்திருப்பது அரசியல் சதுரங்கத்தில் முக்கியமான நகர்வு என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 49 வயதான சரண்ஜித் சிங், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். களத்தில் மக்கள் தலைவராகக் கருதப்படும் சரண்ஜித் சிங், 2000ஆம் ஆண்டு, காங்கிரஸ் சார்பில் கரார் தொகுதியிலிருந்து உள்ளாட்சி அமைப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு, சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர் மீது அதிருப்தி எழுந்த நிலையில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், சட்டப்பேரவையில் சிரோமணி அகாலி தளத்துடன் இணைந்து செயல்பட்டார்.
தொழில்நுட்பத் துறை அமைச்சர்
பின்னர், அமரீந்தர் சிங் அரசில் அமைச்சராக இருந்த மன்பிரீட் பாதலுடன் நெருக்கமானார். 2010ஆம் ஆண்டு, அமரீந்தர் சிங்கின் உதவியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் சரண்ஜித் சிங், காங்கிரஸ் சார்பில் மூன்று முறை சம்கவுர் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமரீந்தர் சிங்கை நீக்கி விட்டு வேறொருவரை முதல்வராகத் தேர்வு செய்ய வேண்டும் எனக் கட்சி மேலிடத்தை வலியுறுத்திய எம்எல்ஏக்களில் ஒருவர் இந்த சரண்ஜித் சிங். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் எதிர்க்கட்சி இருந்த போது, எதிர்க்கட்சி தலைவராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பு வகித்தார். 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் அவருக்குத் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் சரண்ஜித் சிங்.
Me too புகார்
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு முறையற்ற வகையில் மெசேஜ் அனுப்பியதாகவும் சரண்ஜித் சிங் சன்னி மீது Me too புகாரும் எழுந்தது. ஆனால், அந்த அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. அப்போது முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் தலையிட்டு இந்த பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தலித் முகம்
சரண்ஜித் சிங் சன்னி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 33% வரை தலித்துகள் உள்ளனர். எனவே, அடுத்த ஆண்டு நடைபெற்று சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இது வேர்க் அவுட் ஆகுமா என்பதைக் காலம் தான் பதில் சொல்லும்..!