தமிழக மக்கள் மீது பாசம்.. சுயநலமில்லா சேவை.. யார் இந்த ககன்தீப் சிங்?.. செய்த "தரமான சம்பவம்" என்ன?
சென்னை: 2015 ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பின் போது ஒரு மாதமாக கடலூரில் வெள்ள மீட்பு பணிகளில் இடைவிடாமல் ஈடுபட்ட ககன்தீப் சிங், ஒரு நாள் மழை ஓய்ந்துவிட்டதாக கருதி குடும்பத்தினரை பார்க்க சென்னை திரும்பினார். மீண்டும் மழை தொடங்கியதை அறிந்து மதியமே கடலூருக்கு ரிட்டர்ன் ஆனார். இது போன்ற தரமான சம்பவங்கள் மூலம் அவர் மக்கள் மீது எத்தகைய பாசம் வைத்துள்ளார் என்பது தெரிகிறது.
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப சிங் பேடி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ககன்தீப் சிங் பேடியை எங்கு இயற்கை பேரிடர் நடந்தாலும் அங்கு மீட்பு குழு மேற்பார்வையாளராக நியமிக்கப்படுவார்.
அன்று காங்-ல் முதல்வர் பதவி கிடைக்காமல் அல்லாட்டம்- இன்றும் பாஜகவில் போராடி வென்ற ஹிமந்த பிஸ்வாஸ்
யார் இவர் என்பதை பார்ப்போம். பஞ்சாப் மாநிலத்தில் 1968 ஆம் ஆண்டு பிறந்தவர். பிஇ (இசிஇ) படித்துள்ளார். பின்னர் 1991 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே துறையில் இந்திய பொறியியல் சேவைகள் பிரிவில் தேர்வானார். 1993 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வென்றார்.
தமிழகம்
ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானவுடன் தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். மதுரை, கன்னியாகுமரி, கடலூர் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழக குடிநீர் விநியோகத்தின் இயக்குநர், ஊரக வளர்ச்சி துறையின் செயலாளராக நியமிக்கப்பட்ட ககன்தீப் சிங், 2016ஆம் ஆண்டு முதல் தமிழக வேளாண் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர்
2003, 2004 இல் கன்னியாகுமரி, கடலூர் மாவட்டங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத சுற்றுலா திட்டங்களை கொண்டு வந்தார். 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்குதலின் போது கடலூர் மாவட்ட மக்களை மீட்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டார். சுனாமியால் வீடிழந்தவர்களை தங்கவைப்பது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்தவர்.
அம்மா திட்டம்
2013 ஆம் ஆண்டு வருவாய் துறை மூலம் மக்களின் குறைகளை தீர்க்க அம்மா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினார். அது போல் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது பெற்றார். 2015 ஆம் ஆண்டு கடலூரில் வெள்ள பாதிப்பின் போது இவர் ஆற்றிய தொண்டு சிறப்பானது.
கடலூரில் மழை
கடந்த 2015-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் சென்னையிலிருந்து வீட்டை விட்டு கடலூருக்கு புறப்பட்டார். அப்போது ஒரு மாதம் தொடர்ந்து கடலூரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். ஒரு கடலூரில் மழை நின்றுவிட்டது என கருதி சென்னைக்கு காலையில் சென்றார். ஆனால் கடலூரில் மழை மீண்டும் தொடங்கியது.
வித்தியாசமானவர்
இதனால் காலையில் சென்ற ககன்தீப் அன்று மதியமே கடலூர் திரும்பினார். குடும்பத்தினரை விட்டுவிட்டு மக்கள் சேவையாற்ற வேண்டும் என ஒரு சில அதிகாரிகளுக்குத்தான் மனம் வரும் அந்த ஒரு சிலரில் ககன் தீப் சிங்கும் ஒருவர். அதிகாரிகளிலேயே வித்தியாசமானவர்.
கோவை
இதன் பிறகு 2017ஆம் ஆண்டு கோவை அருகே சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து பலியான சம்பவத்தை விசாரணை நடத்தும் பொறுப்பையும் ஏற்றார். கஜா புயலின் போதும் மக்கள் பணியாற்றினார். 2020ஆம் ஆண்டு வேளாண்துறை செயலாளராக இருந்த போது வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க அரும்பங்காற்றியவர்.
பிரதமரின் கிசான் திட்டம்
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 6000த்தை மூன்று தவணைகளாக வழங்கும் திட்டத்தில் 110 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக பேட்டி கொடுத்தது அல்லாமல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கையையும் எடுத்தார். கடந்த ஆண்டு நிவர் புயல் சென்னை அருகே கரையை கடந்த போது கடலூரில் பெய்த கனமழையால் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின. இதை பார்வையிட அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி கடலூர் சென்றார். அங்கு வேட்டியை மடித்துக் கொண்டு வயலில் எடப்பாடியார் இறங்கிய போது தனது பேன்ட்டை முட்டி வரை மடித்துவிட்டுக் கொண்டு பாதிப்பு குறித்து எடப்பாடியாருக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.