சாத்தான்குளத்தில் மட்டுமே இப்படி என்றால்.. தமிழகம் முழுவதும்..? களம் இறங்குகிறது மநீம.. கமல்
சென்னை: காவல்துறையின் மீது பொதுமக்கள் கொடுத்த புகார்கள் குறித்து சட்ட ரீதியான விசாணை கோரி மக்கள் நீதி மய்யம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறுகையில் "சாத்தான்குளம் போலீஸ் அராஜகம் ஒற்றை நிகழ்வல்ல. தோண்டத் தோண்ட வெளிவரும் குற்றங்கள், ஒரு காவல் நிலையத்தில் இத்தனை தவறுகள் என்றால் தமிழகம் முழுவதும் நிலை என்னவாயிருக்கும் என்ற கேள்விகளை எழுப்புகிறது.
பல ஆண்டுகளாக தமிழகத்தில் காவல்துறை விசாரணை என்ற பெயரில் அத்துமீறுவதும், காவல்துறையை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் தாக்கப்படுவதும், சிறைச்சாலை மரணங்களும் நடந்தேறிக் கொண்டேயிருக்கிறது. காவல்துறையின் கண்காணிப்பில் நிகழும் மரணங்கள், இந்தியா முழுவதும் நடக்கும் பெருங்குற்றம். அதில் தமிழகம் இவ்வகை மனித உரிமை மீறல் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம்.
முகக் கவசத்தை தூக்கி எறிய வேண்டாம்.. மறு சுழற்சி செய்ய 1000 ரூபாயில் மிஷின்- கோவை டாக்டர் அசத்தல்
வரம்புமீறல்கள்
காவல்துறையின் வரம்பு மீறல்கள், சாமானியனை அவமரியாதையாக பேசுவதில் தொடங்கி, இன்று மக்களின் பாதுகாப்பையும், வாழ்வையும் அச்சுறுத்தும் அளவுக்கு ஆளும், ஆண்ட கட்சிகள் வளர விட்டிருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம், மக்கள் பாதுகாப்பினை அச்சுறுத்தும் இந்தத் தவற்றினை வேரோடு அகற்றிடும் முயற்சிகளை தொடங்கியிருக்கிறது. இதன் முதல் கட்டமாக, தமிழகத்தின் ஆண்ட, ஆளும் கட்சிகள் தொடர்ந்து புறக்கணித்து வரும் காவல் துறையின் சீரமைப்பை உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படுத்திட சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கை பதிவு செய்திருக்கிறோம். உச்ச நீதிமன்றம் காவல் துறையின் அதிகாரத்தை கண்காணித்திடவும், அதிகரிக்கும் பணி அழுத்தம் அவர்களை பாதிக்காமல் மக்கள் பணியாற்றிட செய்யும் வகையில் பலமுறை திட்டங்களையும், வழிமுறைகளையும் வழங்கியிருக்கிறது. அந்த வழிமுறைகளை தமிழக அரசு பின்பற்றிட நீதிமன்றம் உத்தரவிடவும், கண்காணிக்கவும் வேண்டி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
புகார்
அத்துடன் சாத்தான்குளம் இரட்டை மரணத்தில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்று ட்விட் பதிவிட்டார்.
வழக்கு பதிவு
2001 - 2018 வரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காவல் துறையின் கண்காணிப்பில் உயிரிழந்துள்ளனர். ஆனால் அது தொடர்பாக ஒருவர் மீது கூட வழக்கு பதிவு செய்யவில்லை என்பது தமிழகத்தை ஆண்ட திமுகவும், ஆளும் அதிமுகவும் இந்த விஷயத்தில் காண்பித்து வரும் மெத்தன போக்கை மக்களுக்கு சொல்லும். காவல் துறை மக்களைப் பாதுகாத்திட வேண்டும். ஆனால் காவல்துறையிடமிருந்தே மக்களைப் பாதுகாக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் இத்தனை காலம் ஆண்டவர்கள். நீதித்துறையின் உத்தரவுகளையும், மனித உரிமை மீறல்களையும், மக்கள் பாதுகாப்பையும் அலட்சியமாக கையாளும் இந்த அரசியல்வியாதிகளை மாற்றுவது நம் கையில் தான் உள்ளது.
மக்கள் நீதி மய்யம்
இந்த சீர்திருத்தங்களை தமிழக அரசினை செயல்படுத்த வைக்க மக்கள் நீதி மய்யம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சட்டத்தின் வழியே நம் உரிமைகளைக் காத்திடும் இப்போரில் மக்கள் நீதி வெல்லும் வரை மய்யம் போராடும். அதே நேரத்தில் இம்மாற்றங்களை செய்யும் பொறுப்பில் இருப்பவர்களை மாற்றும் அதிகாரம் மக்களிடம் தான் இருக்கிறது. ஆணவக்கொலை வழக்கினில் A1 குற்றவாளியின் குற்றத்தைக் கூட நிரூபிக்காமல் வழக்காடுதல், உரிமைகளைக் கேட்டு போராடும் மக்களின் மீது அடக்குமுறை, கேள்வி கேட்பவர்கள் மீது காவல்துறையின் ஏவல், மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகளின் மீதான தாக்குதல்கள் என தமிழகத்தையும், தமிழர்களையும் கடந்த 30 ஆண்டுகளாக திட்டமிட்டு, நசுக்கிக் கொண்டிருக்கும் இரண்டு கட்சிகளையும் அகற்றி, தமிழகத்தை புனரமைத்திடும் பெரும்பணியில் பங்களிக்க மக்களை அழைக்கிறோம்.
காவல் துறை
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசும், காவல் துறையும் மக்களுக்காக பணி செய்ய வேண்டும். மக்களாட்சி என்பது மக்களின் ஆட்சியாகவும், மக்களுக்கான ஆட்சியாகவும் இருந்திட மக்களே தங்கள் அதிகாரத்தை கையில் எடுத்திட வேண்டிய நேரம் இது. ஒரு ஊர், ஒரு காவல் நிலையம், இரு உயிர்கள் மட்டும் பற்றியது அல்ல இந்த போராட்டம். பல நூறு உயிர்கள், பல்லாயிரக்கணக்கான குற்றங்கள், அநீதிகள், பல இலட்சம் கோடி ஊழல் என தமிழகத்தை அரித்துக் கொண்டிருக்கும் சீர்கேட்டை செம்மைப்படுத்த மக்கள் ஒன்றுபடவேண்டிய நேரம் இது. நாளை நமதே! என தனது செய்திக்குறிப்பில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை புகார்கள்
இந்நிலையில் கமல்ஹாசன் இன்று வெளிட்டுள்ள ட்வில் பதிவில், 'சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது' குறிப்பிட்டுள்ளார்.