அதிமுகவையே மொத்தமாக புரட்டிப்போட்ட தீர்ப்பு.. யார் இந்த நீதிபதி ஜெயச்சந்திரன்?
சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, அக்கட்சியின் எதிர்காலத்தையே புரட்டிப்போட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் யார் என்பது குறித்து பார்ப்போம்.
Recommended Video
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் பொதுக்குழுவை நடத்தலாம் என்று தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2 வாரங்களில் உயர்நீதிமன்றம் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது.
எடப்பாடிக்கு அடி மேல் அடி.. அதிமுக அலுவலக சாவியும் கையை விட்டுப் போகுமா? - வந்த 'நெகட்டிவ்’ சிக்னல்!
நீதிபதியை மாற்ற கோரிக்கை
இந்த வழக்கை கடந்த ஆகஸ்டு 4 ஆம் தேதி உயர்நீதிமன்றம் விசாரிக்க இருந்தது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும், வேறு நீதிபதி அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
அதிரடி தீர்ப்பு
இதனை தொடர்ந்து நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று காலை நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை வெளியிட்டார். அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், ஜூலை 23க்கும் முன் கட்சியில் இருந்த நிலையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பழைய நிலை
நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்துள்ள இந்த அதிரடி உத்தரவின் காரணமாக 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போயுள்ளது. எனவே இனி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை. அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லாது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
யார் இந்த ஜெயச்சந்திரன்?
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி வேலூரில் பிறந்தவர். சென்னை சட்டக்கல்லூரியில் 1983 ஆம் ஆண்டு சட்டம் படித்த இவர், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எம்.எல். படித்தார். போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வுப்படிப்பை முடித்து இருக்கிறார் ஜெயச்சந்திரன்.
வழக்கறிஞர்
1988 ஆம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த இவர், பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராக இவர் பதவியேற்றார். சி.ஐ.எஸ்.எப், பிஎஸ்என்எல், சுங்கத்துறை போன்ற மத்திய அரசின் துறைகளுக்காக ஆஜராகி வாதாடியவர் ஜெயச்சந்திரன். சிபிஐ நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து இருக்கிறார்.
நீதிபதியான ஜெயச்சந்திரன்
கடந்த 2005 ஆம் ஆண்டு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை கூடுதல் நீதிபதியாகவும், சிபிஐ சிறப்பு நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு நீதித்துறை அகாடமியின் இயக்குநராகவும், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியாகவும், திருவள்ளூர், சென்னை மாவட்ட சிறப்பு நீதிபதியாகவும், 2011 முதல் 2015 வரை தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செயலராகவும் இருந்துள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.