கலைந்த கனவு! அப்படியே வண்டியை யூ டர்ன் போடும் "புள்ளிகள்".. எடப்படியா? ஓபிஎஸ்ஸா? இப்போ யார் லீடிங்?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வருவதற்கு எப்படியும் ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால் ஓ பன்னீர்செல்வம் நிர்வாகிகளை எடப்பாடிக்கு எதிராக திருப்ப முயன்று வருவதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பில், பொதுக்குழு செல்லாது என்று அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக தீர்ப்பு வந்தது.
30+22.. திடீர் விஸ்வரூபம் எடுத்த எடப்பாடி.. 'எங்களோடது தான்’ - சிவகாசி சரவெடிக்குப் பின்னணி என்ன?
தீர்ப்பு
அதன்படி எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம். பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்காக எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்காக மாவட்டம் மாவட்டமாக சென்று அவர் தொண்டர்களையும் சந்தித்து வந்தார். பொதுச்செயலாளர் தேர்தல் மூலம் அதிகாரபூர்வமாக தலைவர் ஆவதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராகிக்கொண்டு இருந்தார்.
ஓ பன்னீர்செல்வம்
முக்கியமாக தொண்டர்கள் மூலம் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டால் அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு எதிராக வழக்கு தொடுத்தாலும் பெரிதாக கோர்ட்டில் நிற்காது. இதன் காரணமாக தேர்தலை நடத்த எடப்பாடி தீவிரமாக முயன்று வந்தார். இதன் காரணமாக கட்சியில் எடப்பாடி கையும் ஓங்கி இருந்தது. அதற்கு முன்னதாக ஓ பன்னீர்செல்வம் பக்கம் சாய பல எம்எல்ஏக்கள் தயாராக இருந்தனர். ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக இவர்கள் எல்லோரும் பின் வாங்கினர்.
பின்வாங்கல்
ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்ல வேண்டிய எம்எல்ஏக்கள்.. முழுசா தீர்ப்பு வரட்டுங்க.. அதுக்கு அப்பறம் அணி மாறுகிறோம். இப்பவே மாறி ஏமாற்றம் அடைய விரும்பல என்று பின்வாங்கினர். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி துரிதமாக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த ஏற்பாடுகளை செய்து வந்தார். ஆனால் தற்போது உச்ச நீதிமன்றம் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த கூடாது என்று கூறியுள்ளது. அதோடு வழக்கை நவம்பர் இரண்டாம் வாரத்திற்கும் தள்ளி வைத்து இருக்கிறது.
முடியாது
இதனால் வழக்கு முடியும் வரை எடப்பாடியால் எந்த முடிவும் எடுக்க முடியாது. அதோடு கோர்ட்டும்.. நாங்கள் மெஜாரிட்டி பற்றி ஆராய போவதில்லை என்று கூறி உள்ளது. மெஜாரிட்டி யாருக்கு இருக்கிறது என்பது எங்கள் கவலை இல்லை. பொதுக்குழு எப்படி கூடியது என்பதே எங்கள் கவலை. பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட்டதா என்பதை வழக்கில் ஆராய போகிறோம் என்று நீதிபதிகள் கூறி உள்ளனர். அதாவது மெஜாரிட்டி பற்றி கவலைப்பட போவது இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.
பின்னடைவு
இந்த பின்னடைவு கிட்டத்தட்ட எடப்பாடிக்கு எதிரான சிக்னலாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே எடப்பாடி மெஜாரிட்டியை வைத்து மட்டுமே வாதங்களை மேற்கொண்டு வந்தார். ஆனால் இப்போது அந்த மெஜாரிட்டி பற்றியே பேச கூடாது என்று தீர்ப்பு வந்துள்ளது சிக்கலான விஷயமாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி தரப்பு இப்படி பின்னடைவை சந்தித்து உள்ள நிலையில்தான், ஓ பன்னீர்செல்வம், தன் பக்கம் ஆட்களை இழுக்க முயன்று வருவதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வருவதற்கு எப்படியும் ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால் ஓ பன்னீர்செல்வம் நிர்வாகிகளை எடப்பாடிக்கு எதிராக திருப்ப முயன்று வருவதாக கூறப்படுகிறது.
முயற்சி
எடப்பாடிக்கு எதிராகவே தீர்ப்பு வரும். எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என்று ஓ பன்னீர்செல்வம் தூதுவிட்டுக்கொண்டு இருக்கிறாராம். இதில் சில தலைகள் யூ டர்ன் போடவும் ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது வேண்டாம். முழுமையாக தீர்ப்பு வரட்டும். இப்போதே நாங்கள் அணி மாறி, பின்னர் எதிராக தீர்ப்பு வந்தால் மீண்டும் அணி மாற முடியாது என்று "pause" செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழு தீர்ப்பில் மட்டும் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் பல்வேறு அணி மாறுதல்கள் நடக்கும் என்கிறார்கள். இதனால் கட்சிக்குள் இப்போதைக்கு இரண்டு தலைகளும் லீடிங் இல்லை.. தீர்ப்பு வந்தால்தான் தெரியும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!