மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதி பெற்றுத் தந்த வில்சனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி!
Recommended Video
சென்னை: திமுக ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் வில்சன்தான், மறைந்த முதல்வர் கருணாநிதியை சென்னை மெரினாவில் அடக்கம் செய்யவதற்கான அனுமதியை சென்னை உயர்நீதிமன்றத்தில் போராடி பெற்றுத் தந்தவர்.
இந்தியாவின் மூத்த வழக்கறிஞரான இவர் சென்னையில் பிறந்தவர். இவரது முழு பெயர் புஷ்பநாதன் வில்சன். இவர் கடந்த 1966-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி பிறந்தார். பள்ளிப் படிப்பை ஆசான் மெமோரியல் கல்லூரியிலும் கல்லூரி படிப்பை லயோலா கல்லூரியிலும் முடித்தார்.
பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார். 1989-ஆம் ஆண்டு தமிழக பார் கவுன்சிலில் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். கடந்த 2009-ஆம் ஆண்டு தனது 43 ஆவது வயதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பதவி வகித்தார்.
ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்களாக தொமுச சண்முகம், வக்கீல் வில்சன் போட்டி- மதிமுகவுக்கு 1 இடம்!
என்ன பதவி
இவர் அரசியலமைப்பு தொடர்பான பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வெற்றி கண்டுள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் மே 2011-ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் 2012-ஆம் ஆண்டு முதல் மே 2014-ஆம் ஆண்டு வரை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி வகித்தார்.
வாதாடி வெற்றி
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக சென்னை, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் அதன் பெஞ்சுகளுக்கு நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடி வெற்றி கண்டுள்ளார்.
முக்கியமான வழக்குகள்
இதில் முக்கியமானதொன்று சமச்சீர் கல்வியாகும். இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை தொடர்பான வழக்குகளிலும் வெற்றி கண்டுள்ளார். இவர் வெற்றி கண்டுள்ள முக்கியமான வழக்குகளின் தொகுப்பு இதோ ...
கருணாநிதி நல்லடக்க வழக்கு
1. பல்நோக்கு மருத்துவமனைக்காக திமுக ஆட்சியில் ஓமந்தூரார் எஸ்டேட்டில் கட்டப்பட்ட கட்டடத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அங்கு தலைமைச் செயலகத்தை கொண்டு செல்ல முயற்சித்தார். அதை எதிர்த்து பொது நலன் வழக்கை தொடுத்து அதில் வெற்றி கண்டார் வில்சன்.
2. உலக புகழ் வாய்ந்த கோட்டூர்புரத்தில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை இடமாற்றம் செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து வாதாடி வெற்றி கண்டார். இது முக்கியமான வழக்காகும். மிகவும் அரிதான புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் இங்கு வாங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
3. நில அபகரிப்பு குற்றங்களை விசாரிக்க தனி குழுக்களையும், தனி கோர்ட்டுகளையும் அமைப்பது தொடர்பான மாநில அரசின் முடிவை எதிர்த்து போராடி அதை ரத்து செய்ய வைத்தவர்.
4. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதா அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 13000 மக்கள் நலப் பணியாளர்களுக்காக போராடி வெற்றி கண்டார்.
5. கடந்த 2011-ஆம் ஆண்டு மாநகராட்சி தேர்தலின் போது அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வீடியோ பதிவாக எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு காரணமாக இருந்தார்.
6. தமிழக அரசு தேர்வாணையம் சார்பில் நியமிக்கப்பட்ட 11 பேரை எதிர்த்து திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வாதாடி அந்த நியமனங்களை சென்னை உயர்நீதிமன்றம் மூலம் ரத்து செய்ய வைத்தார்.
7. திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடி வசம் இருந்து சிபிஐ வசம் ஒப்படைக்க வைத்தார்.
8. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது பள்ளிகளை மூடுவது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்து அதை தடுத்து நிறுத்தினார்.
9. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிபதி குன்ஹாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய வேலூர் மாநகராட்சி மேயருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கோர நீதிமன்றத்தை உத்தரவிட வைத்தார்.
10. திருச்சி - காரைக்குடி சாலை திட்டத்தை எதிர்த்து போராடி அந்த திட்டத்தை கைவிட வைத்தார்.
11. தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில் 500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளை பாமக வழக்கறிஞர் கே பாலுவுடன் இணைந்து மூடவைத்தவர்.
12. விஸ்வரூபத்துக்கு எதிரான வழக்கு, சச்சினுக்கு பாரத ரத்னா கொடுப்பதற்கு எதிரான வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.
13. கருணாநிதி மறைந்த போது அவருக்கு மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக அரசை திமுக நாடிய போது அவர்கள் அங்கு இடம் வழங்க மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து போராடி கருணாநிதி விருப்பப்படி அவரை அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்ள வைத்த பெரும் பங்கு வில்சனையே சாரும்.