யாருப்பா இந்த குட்டிப் பையன்.. சிஎஸ்கே டீமின் பொக்கிஷம்.. அசத்தல் ஆல்-ரவுண்டர்.. கலக்கிட்டாரே கர்ரன்
சென்னை: அசப்பில் பார்க்க இப்போதான் ஸ்கூல் முடித்துவிட்டு டியூசனுக்கு கிளம்பும் பையன் போல ஒரு பால் வடியும் முகம். ஆளும், ஆறடி வளத்தி எல்லாம் கிடையாது.. ஐந்தே முக்கால் அடி இருப்பார் அவ்வளவுதான்.. 22 வயதுதான் ஆகிறது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்த இளம் வீரர்தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறுவதற்கு துருப்பு சீட்டாக இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா?
ஆரம்பமே சரவெடி.. பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் பதுங்கி பாய்ந்த சிஎஸ்கே.. மும்பையை வீழ்த்திய தோனி படை
வந்தாருய்யா விடிவெள்ளி
ஐபிஎல் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தது. ஆரம்பத்தில் நமது பவுலர்களை அடித்து துவம்சம் செய்தது டீ காக் மற்றும் ரோகித் சர்மா ஜோடி. ஆனால் மூன்றாவது பவுலராக சாம் கர்ரனை கொண்டு வந்தார் தோனி.
அருமையான ஸ்விங்
இடக்கை பந்துவீச்சாளர் கர்ரன், வந்ததும் டி காக் அதிரடி காட்ட முடியாமல் திணறியதை கவனிக்க முடிந்தது. பெரும்பாலும், மிடில் ஸ்டெம் திசையில் பிட்ச் செய்து, பந்தை அவுட் ஸ்விங் செய்தார் கர்ரன். இதில்தான் டி காக் திணறினார். தொடர்ந்து ஆட்டம் காட்டிய கர்ரன் அவரது விக்கெட்டையும் வீழ்த்தினர். 20 பந்துகளில் 33 ரன்களை எடுத்து அச்சுறுத்திய டி காக்கை முக்கியமான நேரத்தில் குட்டிப்பையன் விழுத்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
சூறாவளி
இதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை. பந்துவீச்சு மட்டும் கிடையாது. சிஎஸ்கே பேட்டிங்கின்போது, இறுதி நேரத்தில் களமிறங்கிய கர்ரன் 8 பந்துகளில் 18 ரன்கள் குவித்தார். ஆனானப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் கூட அவர் சிக்சர் விளாசினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
வென்றது சென்னை
அதுவரை அம்பத்தி ராயுடு மற்றும் டுப்ளசிஸ் ஜோடி மெதுவாக ரன் குவித்த நிலையில், திடீரென உள்ளே புகுந்து சூறாவளி போல் விளாசினார் கர்ரன். மும்பை இந்தியன்ஸ் பாவலர்களின் கை ஓங்கி இருந்த போது ஓங்கி முதுகில் தட்டி உட்கார செய்தார் கர்ரன். அவர் ஏற்றிவிட்ட அந்த எனர்ஜி டுப்ளசிசிக்கும் தொற்றிக் கொண்டதோ, என்னவோ, கடைசி நேரத்தில் அவரும் அதிரடி காட்ட, எளிதாக வென்றது சிஎஸ்கே.
சூப்பர் ஆல் ரவுண்டர்
அருமையாக பந்தை ஸ்விங் செய்து எதிரணிக்கு ஆட்டம் காட்டியதோடு, பேட்டிங்கிலும் அதிரடி காட்டிய இந்த ஆல்ரவுண்டர் கர்ரனை ஐந்தரை கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே வாங்கியது. கொடுத்த காசுக்கு மேல குமுறி, குமுறி எடுத்துவிட்டார் சாம் கர்ரன் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு வகையில் இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு கிடைத்த வைரம் இந்த குட்டிப் பையன்.
சூப்பர் ராசி
எப்போதுமே சென்னை அணிக்கு ஒரு ராசி உண்டு. யார் எப்போது சூப்பராக ஆடுவார்கள் என்று சொல்லமுடியாது. ஆடுவார்கள் என்று நினைப்பவர்கள் சொதப்பி விடுவார்கள், யாரென்றே தெரியாதவர்கள் விஸ்வரூபம் எடுப்பார்கள். இந்த ஐபிஎல் முதல் போட்டியிலேயே அதற்கான ஒளி மெல்ல தெரிய ஆரம்பித்துள்ளது.. சாம் கர்ரன் வடிவத்தில்.