இந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்!
Recommended Video
சென்னை: தேசிய அரசியலில் மிக வல்னரபிள் தமிழ் முகமாக விளங்கியவர் ப.சிதம்பரம். மோடி, அமித்ஷா இருவர் இணைந்து நடத்தும் பா.ஜ.க.வின் பரம எதிரிதான் இந்த ப.சி. இரு தரப்புக்கும் இடையில் நடப்பது கடைந்தெடுத்த அரசியல் மோதலில்லை, கார்ப்பரேட் லெவல் யுத்தம்.
அன்று அதிகாரத்திலிருந்த ப.சிதம்பரம், அமித்ஷாவை 'கிரிமினல்' வழக்கில் கைது செய்தார், ஆனால் இன்று அமித்தோ அவரை 'ஒயிட் காலர் கிரிமினல்' வழக்கில் கைது செய்திருக்கிறார். அது இருக்கட்டும்.
சி.பி.ஐ.யின் சீறலான நடவடிக்கையின் முடிவாக பதறப்பதற கைதாகியிருக்கிறார் ப.சிதம்பரம். ஐந்து நாள் விசாரணை காவல்! என்ற அடிப்படையில் அவரைக் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருக்கிறது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இரண்டும்.
அடுத்து கார்த்தியா
இந்த நிலையில், அடுத்து சிதம்பரத்தின் மகன் கார்த்தியும் கைதாவார்! என்கிறார்கள். சிவகங்கை தொகுதியின் லோக்சபா எம்.பி.யாக இருக்கும் கார்த்திக்கும் மிக முழுமையான கைது வலையை சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை மூன்றும் இணைந்து விரித்துள்ளன என்கிறார்கள்.
இந்திராணி விரித்த வலை
சிதம்பரம் மற்றும் கார்த்தியை சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் கைது வலையின் அடிப்படையானது இந்திராணி முகர்ஜி கடந்த ஜூலை நான்காம் தேதியன்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலமே! என்கிறார்கள். ஐ.என்.எக்ஸ். வழக்கின் மிக முக்கிய குற்றவாளியாக இந்த இந்திராணி முகர்ஜி இருக்கிறார்.
எப்படி அணுகினேன்
அந்த வாக்குமூலத்தில், நிதியமைச்சரின் மகனாக இருந்த கார்த்தியை , தான் எப்படி அணுகினேன்? யார் வாயிலாக அணுகினேன்? என்னவெல்லாம் பேசி திட்டமிட்டார்கள்? சென்னைக்கு நான்கு முறை பீட்டர் முகர்ஜியும், ராணி முகர்ஜியும் வந்து இவர்களை சந்தித்தது எதற்காக? என்கிற கேள்விகளுக்கான முழு பதில்களும் அந்த ரகசிய வாக்குமூலத்தில் உள்ளதாம்.
சிங்கப்பூர் நபர்
கூடவே சிங்கப்பூரில், ப.சிதம்பரத்துக்கு நெருக்கமான ஒரு மனிதர் இருக்கிறாராம். இன்டர்நேஷனல் வங்கி ஒன்றில் பணிபுரியும் அவர், கார்த்தியுடன் மிக நெருக்கமாக இருந்ததாகவும், சமீபத்தில் மும்பையில் நடந்த சர்வதேச வங்கிகளுக்கான கூட்டமொன்றில் கலந்து கொள்ள வந்த அவரை ‘ரா' அமைப்பானது மிக முழுமையாக ஸ்கேன் செய்தது, அவருக்கும் சிதம்பரம் குடும்பத்துக்குமான வணிக நெருக்கங்கள், சர்வதேச நாடுகளில் இவர்களுக்கு இருக்கும் முதலீடுகள், சொத்துக்கள், பங்குகள் ஆகியவை பற்றி இந்த நபருக்கு தெரியும், அவரது மூலமாகவே கார்த்தி பல முதலீடுகளை செய்திருக்கிறார்!....என்றெல்லாம் ஆதார ஆவணங்களுடன் எடுத்து வைத்தனராம்.
வலை விரிப்பு
இப்படி வலை மேல் வலை பின்னி, இறுக்கிக் கொண்டே போவதால் சிதம்பரத்தை தொடர்ந்து அவர் மகன் கார்த்தியும் கைதாகலாம் என்கிறார்கள். அவர் சிட்டிங் எம்.பி. என்பதால் ஃபார்மாலிட்டீஸை முடிக்க நாள் எடுக்கிறதாம். இந்த கைது படலத்தின் முடிவில் சோனியா குடும்பத்தை சேர்ந்த ஒரு மிக முக்கிய வி.வி.ஐ.பி.யே கூட சிக்கலாம்! என்று தகவல் தடதடக்கிறது.
என்னெல்லாம் நடக்கப் போகுதோ!
- ஜி.தாமிரா