அடுத்த டிஜிபி யாரு.. மாநில அரசு ஒரு சாய்ஸ்.. மத்திய அரசிடம் வேறு சாய்ஸ்.. கடும் இழுபறி!
தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது
சென்னை: இன்னும் டிஜிபி யார் என்று முடிவாகவில்லை.. பாஜக ஒரு ஆளை கைகாட்டுகிறது என்றால், அதிமுகவின் சாய்ஸ் வேறு மாதிரியாக இருக்கிறது.. அதனால் நியமன விஷயத்தில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு திருமாவளவன், "இரட்டை தலைமை என்பதை டெல்லி தலைமை மற்றும் தமிழகத் தலைமை என்றே புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. மோடியும் அதிமுகவை தலைமை தாங்கி வழி நடத்துகிறார் என்பது தான் மறைமுகமாக சொல்லும் செய்தி. மத்திய அரசின் தலையீடுகள் முறியடிக்கப்பட வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்களுக்கு நான் விடுக்கிற வேண்டுகோள்" என்று கூறியிருந்தார்.
இந்த கருத்து இப்போதென்று இல்லை.. கடந்த 3 வருடங்களாகவே இப்படித்தான் சொல்லப்பட்டு வருகிறது. தற்போது டிஜிபி நியமன விவகாரத்திலும் கலந்துள்ளது போலவே தெரிகிறது.
ராஜேந்திரன்
இந்த மாசத்துடன் டிஜிபி ராஜேந்திரன் ஓய்வு பெற போகிறார். அடுத்த டிஜிபியை நியமிக்க வேண்டிய நியமனத்தில் மாநில அரசு உள்ளது. ஏனென்றால் இப்போது ராஜேந்திரன் உள்ளதே, பதவி நீட்டிப்பில்தான்! அதனால் புதிய டிஜிபி இன்னமும் இழுபறி நீடித்தே வருகிறது. காரணம், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாநில அரசு
லிஸ்ட்டில் எத்தனையோ பெயர் இருந்தாலும் கடைசியில் அதிகபட்ச வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது ஜாபர் சேட் மற்றும் ஜே.கே. திரிபாதிக்குதான். ஆனால் ஜாபர்சேட்டை நியமிக்க மாநில அரசு விரும்புகிறது என்றால், திரிபாதியை நியமிக்க மத்திய அரசு விரும்புவதாக தெரிகிறது.
பக்கா எதிர்
ஜாபர் சேட்டை பொறுத்தவரை, ஒரு காலத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் முடிசூடா மன்னனாக இருந்தவர். அவர் என்ன நினைப்பாரோ அதை சாதித்துவிடுவார். இதுவரை தமிழக காவல்துறை வரலாற்றிலேயே அதிகாரம் மிக்கவர் யாருமே இருந்தது கிடையாது என்ற பெயரையும் பெற்றவர். ஆனால் திமுகவுக்கு பக்கா எதிராக இவர் இருப்பதால், கைக்குள் போட்டு கொள்ளலாம் என எடப்பாடி தரப்பு நினைக்கிறது.
திரிபாதி
ஆனால் திரிபாதியை பாஜக தரப்பு முன்னிறுத்துகிறது. திரிபாதி சென்னை காவல்துறை ஆணையராக இருந்தவர்.. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் பணியாற்றியவர். ஜெயலலிதா இருந்தபோது, மிக முக்கிய பொறுப்பை வழங்கிய ஐபிஎஸ் அதிகாரிகளில் பெரும்பாலும் திரிபாதியும் இருப்பார். அதாவது ஜெயலலிதாவின் நற்பெயருக்கு ஆளானவர். இத்தனை இருந்தாலும் திரிபாதி ஒரு திமுகவின் அனுதாபி என்ற கண்ணோட்டம் நிலைத்து நிற்கிறது. அதனால்தான் அதிமுக தரப்பு பாஜகவின் இந்த சாய்ஸை விரும்பவில்லை என கூறப்படுகிறது.
வட மாநிலம்?
திமுகவின் அனுதாபி என்று தெரிந்தும் பாஜக இவரது பெயரை டிக் செய்ய என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதையும் தாண்டி வேறு ஏதேனும் காரணம் உள்ளடங்கி உள்ளதா என்பது வெளிப்படையாக தெரியவில்லை.
யார் அவர்?
2020 மே மாதத்தில்தான் இவர் ஓய்வு பெற போகிறார் என்றாலும், அதிமுக இவரை ஏற்குமா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் டிஜிபி என்ற மாநில காவல்துறையின் தலைமை பதவியில் அமர போவதில் இழுபறி நீடித்தே வருவதாக தெரிகிறது.