7 தமிழர்களின் விடுதலைக்கு தடையாக இருப்பது யார்… வைகோ கேள்வி
சென்னை: பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது யார் என்று ஆளுநரும், தமிழக அரசும் பதில் சொல்ல வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேரை விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் ஆட்சேபம் தெரிவித்ததால் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் ஆளுநர் எல்லை மீறி செயல்பட்டு இருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.
இதற்கிடையே, 7 பேர் விடுதலை குறித்த கோரிக்கையை 6 மாதமாக கிடப்பில் போட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், ஆளுநர் விரைவில் கையெழுத்திட வேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்கோரி மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 7 பேர் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவும் அப்போது வலியுறுத்தப்பட்டது.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன், கி.வீரமணி, நடிகர் சத்யராஜ், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.