ஜெயலலிதா இருந்திருந்தால் அதிமுக இப்படி குழம்பியிருக்குமா.. வரலாறு காணாத இடியாப்ப சிக்கல்!
அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் யார் என்பதே குழப்பமாக உள்ளது.
Recommended Video
சென்னை: அதிமுகவுக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.. கட்சியின் நிர்வாக ரீதியான நடப்புகளும் புரியவில்லை.
"ஒன் உமன் ஆர்மி" என்று சொல்லப்பட்டவர் ஜெயலலிதா. அவர் இருக்கும்வரை அவர் முன்னாடி ஒருத்தர் கூட முன்வந்து நின்று பேச பயந்தார்கள். ஒரு சின்ன முனகலை கூட ஒருத்தரும் வெளிப்படுத்தவில்லை. அப்படி ஒரு கட்டுப்பாட்டுடன் கட்சியை வைத்திருந்தார்.
அதிலும் தேர்தல் என்று வந்துவிட்டால் அதற்கு ஸ்பெஷலான லிஸ்ட்டுகளை ரெடி செய்வார் ஜெயலலிதா. இதற்காக உளவுத்துறை மூலம் வேட்பாளர் பற்றின தகவல்களையும் திரட்டி, அதனடிப்படையில் இறுதி வேட்பாளரை அறிவிப்பார்.
கெட்டித்தனம்
அந்த வேட்பாளரும் கொஞ்ச நாளில் ஓவர்நைட்டில் மாற்றப்பட்டு விடுவார். இப்படி கறார்தன்மையுடன்தான் இருந்தது அவரது ஆட்சி. எதிர்தரப்பினர் அவரை ஹிட்லர், கொடுங்கோல் ஆட்சி என்றெல்லாம் விமர்சித்தாலும் எதையுமே காதில் வாங்காமல் தன் போக்கில் கெட்டித்தன்மையோடு இருந்தார்.
உறுதியான நிலைப்பாடு
அன்று ஜெயலலிதா ஏன் அப்படியெல்லாம் இருந்தார், எதற்காக எதிர்க்கட்சிகளிடம் தாறுமாறாக வாங்கி கட்டி கொண்டார் என்பதெல்லாம் இப்போதுதான் புரிகிறது. அதிமுகவின் இன்றைய நிலையை பார்க்கும்போதுதான் ஜெயலலிதா சரியான நிலைப்பாட்டில்தான் சாகும்வரை உறுதியாக இருந்திருக்கிறார் என்றும் தெரிகிறது.
பனிப்போர் நீடிப்பு
இப்போதுள்ள அதிமுக யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியவில்லை. அமைச்சர்கள் இதுவரை சர்ச்சை, பரபரப்பு கருத்துக்களை தவிர வேறு எதையுமே ஆக்கப்பூர்வமாக பேசவில்லை. இரட்டை குழல் துப்பாக்கி என்று சொல்லப்பட்டாலும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் உள்ளுக்குள் காழ்ப்புணர்ச்சியோடவே இருப்பதாகவும், நிறைய விஷயங்களில் இருவருக்கும் பனிப்போர் நீடித்தே வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா சிகிச்சை
ஒரு அமைச்சர் ஊழலை செய்தார் என்று அப்பட்டமாக தெரிந்தும், ஆவணங்கள் சிக்கியும் நடவடிக்கை எடுக்காதது இந்த ஆட்சியில்தான். சில தினங்களுக்கு முன்பு சிவி சண்முகம் அன்றைக்கு ஜெயலலிதா சிகிச்சை பற்றி ஒரு கருத்தை சொன்னார், அது அமைச்சரின் சொந்த கருத்து என்று இன்னொரு அமைச்சர் சொல்கிறார். ஜெயலலிதா சிகிச்சை என்பது அனைத்து அதிமுக அமைச்சர்களுக்கும் பொதுவான விஷயமாகத்தானே இருக்க முடியும்?
தம்பிதுரை கருத்து
அதேபோல, அன்றிலிருந்து இன்றுவரை பாஜகவை கடுமையாக விமர்சித்து வருபவர் தம்பிதுரைதான். இந்த விஷயத்தில் எப்போதுமே ஒரு கருத்தை கடைசிவரை உறுதியாக முன்வைத்து வருகிறார். ஆனால், பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்து அல்ல அது அவரது சொந்த கருத்து, அதிமுக கருத்து இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார்.
தொண்டர்கள் குழப்பம்
எனவே அதிமுக என்ற ஆலம்விருட்சமான கட்சி இன்றைய நாளில் என்ன முடிவை எடுக்கிறது, கட்சியின் எந்த முக்கிய முடிவானாலும், அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது யார்? யார் சொல்வதை நம்புவது? என்றெல்லாம் பொதுமக்களுக்கு மட்டுமல்லாது, அதிமுக தொண்டர்களுக்கே குழப்பமாக உள்ளது. தடி எடுத்தவர் எல்லாம் தண்டல்காரர் மாதிரி இன்றைக்கு அக்கட்சி நிலைமை ஆகிவிட்டது.
கடிவாளம் அவசியம்
தங்களின் தரம்தாழ்ந்த வார்த்தை உபயோகங்கள் எல்லாமே தங்களின் கட்சி சரிவுக்கே காரணமாகி கொண்டிருக்கிறது. எல்லை மீறி போய்க்கொண்டிருக்கும் தனிநபர் வார்த்தை தாக்குதல்கள், குழப்பமான பேட்டிகள், தெளிவற்ற பேச்சுகள் போன்றவற்றிற்கு கடிவாளம் போடப்பட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இன்றைக்கு உள்ளது.