ஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ.. ரஜினி, கமல் ஏன் திடீர்னு இப்படி பேசணும்??
கமல் - ரஜினி திடீரென கை கோர்க்க யார் காரணம் என உறுதியாக தெரியவில்லை
Recommended Video
சென்னை: "ஒருவேளை இது பிரஷாந்த் கிஷோர் வேலையாக இருக்கலாமோ" இந்தக் கேள்விதான் பலரது மனதிலும் இப்போது எதிரொலிக்கிறது. காரணம், ரஜினியும், கமலும் திடீரென இணைப்பு குறித்து பேச ஆரம்பித்துள்ளதே.
கமலும் சரி, ரஜினியும் சரி.. அவர்கள் பாட்டுக்கு சிவனே என்று நடிப்பில் தீவிரமாக இருந்து வந்தனர். ஒருவர் வசூலில் சாதனை படைத்தால்.. இன்னொருவர் நடிப்பில் அதகளம் செய்து வந்தார். இருவரது போட்டா போட்டி கலைப் படைப்புகளை ரசிகர்கள் மாய்ந்து மாய்ந்து பார்த்து மகிழ்ந்து வந்தனர்.
இடையில் இவர்களுக்குள் புகுந்தது அரசியல்.. அதாவது இவர்களைப் பிரிக்கவில்லை.. மாறாக அரசியல் இவர்கள் மீது பாய ஆரம்பித்தது. ரஜினியின் சில பேச்சுக்களால் அவர் அரசியல் பக்கம் இழுத்து வரப்பட்டார். அவருக்கு அதில் துளியும் விருப்பம் இல்லாவிட்டாலும் கூட அவரை அரசியல் இழுக்க ஆரம்பித்தது.
கமல் - ரஜினி சேர்வது இருக்கட்டும்.. ஆனால் இந்த கேள்விக்கு மட்டும் பதில் இல்லையே? என்ன செய்வார்கள்?
அரசியல்
ஆனால் கமல் அப்படி இல்லை. அரசியலுக்கு வர மாட்டேன். அது எனக்குத் தெரியாது என ஓப்பனாகவே சொல்லி வந்தார். இதனால் அவர் தொடர்ந்து சினிமாவிலேயே சவுகரியமாக இருந்து வந்தார். ஆனால் ரஜினி மட்டும் பூடகமாகவே இருந்து வந்தார். அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற வாதம் கிளம்பி 20 வருடங்கள் ஓடி விட்டன. அப்படி ஒரு ஜவ்விழுப்பாக போய் விட்டது ரஜினியின் பாதை.
பரபரப்பு
இந்த நிலையில் கமல் அதிரடியாக அரசியலுக்குள் வந்து விட்டார். ஆனால் ரஜினிதான் இன்னும் வந்தபாடில்லை. அதற்குள் இப்போது இருவரும் இணையப் போவதாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. ஏன் இப்படி ஒரு திடீர் பேச்சு, பரபரப்பு என்று யாருக்குமே புரியவில்லை. ஆனால் ரஜினியும் சரி, கமலும் சரி ஏதோ ஒரு கணக்குடன்தான் கமுக்கமாக செயல்பட்டு வருவதாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.
ரகசிய பேச்சுக்கள்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாறேன் என்பது போல கமலை முன்னுக்கு அனுப்பிவிட்டு ரஜினி லேட்டாக வந்து இணையப் போகிறாரா என்று தெரியவில்லை. அதாவது இருவரும் பேசி வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்களா என்ற சந்தேகமும் கேள்வியும் எழுகிறது. காரணம், தனித் தனியாக செயல்படுவது போல தெரிந்தாலும் கூட இருவருக்கும் இடையே ரகசிய பேச்சுக்கள் இருக்கலாமோ என்ற எண்ணமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
அரசியல் ஆலோசகர்கள்
இன்னொரு பக்கம் வேறு சிலரின் மீதும் கவனம் திரும்பியுள்ளது. அதாவது சில அரசியல் ஆலோசகர்கள் தமிழ்நாட்டின் மீது சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதாவது கார்ப்பரேட் அரசியலாக தமிழக அரசியலும் மாறி விட்டது. ஒரு காலத்தில் தலைவர்கள், தொண்டர்கள், மக்கள் என்று இருந்த அரசியல் இன்று அரசியல் ஆலோசகர்கள், தலைவர்கள் என்ற அளவுக்கு சுருங்கிப் போய் விட்டது. ஆலோசகர்கள் சொல்வதை தலைவர்கள் கேட்கிறார்கள். அவர்கள் சொல்வதை மட்டுமே பாலோ செய்கிறார்கள். அப்படி ஒரு நிலைக்கு இப்போது தலைவர்கள் போய் விட்டனர்.
பிரசாந்த் கிஷோர்
அந்த வகையில், பிரஷாந்த கிஷோர், ஓஎம்ஜி என சில கார்ப்பரேட் அரசியல் ஆலோசகர்கள் தமிழக அரசியலை வலம் வந்து கொண்டுள்ளனர். இவர்களில் பிரஷாந்த் கிஷோர் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஒரு அறிக்கையை தயாரித்துக் கொண்டு அதை சிசி போட்டு பல தலைவர்களுக்கும் கொடுத்து ஆலோசனை தந்து கொண்டுள்ளார். அதிமுகவை அணுகினார். கமல்ஹாசனை அணுகினார். ரஜினியையும் பார்த்ததாக சொல்லப்பட்டது. அதேபோல நடிகர் விஜய்யையும் அணுகிப் பேசியதாக கூறப்பட்டது.
பெரும் ஆதரவு
இந்த பிரஷாந்த் கிஷோர் ஆலோசனைப்படியே இப்போது கமல், ரஜினி இணைப்புக்கான செயல்பாடுகள் தொடங்கியுள்ளதாக ஒரு பேச்சு அடிடுகிறது. இருவரும் தனித்து செயல்பட்டால் வேலைக்கு ஆகாது. மாறாக, இணைந்து சந்தித்தால், நிச்சயம் ஆட்சி உங்கள் கைக்கு வந்து சேரும். மக்களிடையே மிகப் பெரிய ஆதரவும் கிடைக்கும் என்று பிகே ஆலோசனை கூறியதாக ஒரு டாக் ஓட ஆரம்பித்துள்ளது.
விஜய்
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஒரு வேலை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவர்களுடன் நடிகர் விஜய்யும் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. காரணம், பிகே, விஜய்யையும் சந்தித்ததாக ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. அப்படி நடந்தால் தமிழக அரசியல் களம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பும் போர்க்களமாக மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
திராவிட கட்சிகள்
அதை விட முக்கியமாக, திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் சாம்ராஜ்ஜியங்களை தகர்க்கும் வகையில் இந்த கூட்டணி கட்டமைக்கப்படுகிறதா என்ற மிகப் பெரிய கேள்வியும் விஸ்வரூபம் எடுத்து எழுந்து நிற்கிறது. எனவே அடுத்தடுத்து வரப் போகும் நாட்கள் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமே இல்லை.