டிடிவி தினகரனுக்கு புதுப் பெருமை.. வாண்டையார் குடும்பத்து சம்பந்தி.. யார் இந்த பூண்டி வாண்டையார்?
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது ஒரே மகளான ஜெயஹரினியை பூண்டி வாண்டையார் குடும்பத்து மருமகளாக திருமணம் முடித்து கொடுக்கவுள்ளார்.
தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களிலும் பூண்டி வாண்டையார் குடும்பத்திற்கென தனி மதிப்பும், மரியாதையும், பாரம்பரியமும் உள்ளது.
கல்வி வள்ளலாகவும், காந்தியின் தீவிர சீடராகவும், திகழும் பூண்டி துளசி அய்யா வாண்டையாரின் மகன் வழிப் பேரன் ராமநாதன் தான் டிடிவி தினகரனின் மருமகனாக வரப்போகிறவர்.
பாரம்பரிய குடும்பம்
தஞ்சை, திருவாரூர், நாகை, என டெல்டா மாவட்டங்களில் எங்கு நோக்கினும் பூண்டி வாண்டையார் குடும்பத்திற்கென தனிபெரும் செல்வாக்கை காண முடியும். அதிகாரத்தாலோ, மிரட்டல் உருட்டலாலோ இந்த மரியாதையும், மதிப்பும் வாண்டையார் குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. மாறாக அன்பாலும், கருணையாலும் மக்களின் இதயங்களை கவர்ந்து தந்தையும், மூதாதையரும் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை தக்க வைத்து வருகிறார் பூண்டி துளசி ஐயா வாண்டையார்.
காங்கிரஸ் கட்சி
மகாத்மா காந்தியின் சீடராக வாழ்ந்து வரும் பூண்டி துளசிஅய்யா வாண்டையார் காங்கிரஸ் கட்சி சார்பில் 1991-1996-ம் காலகட்டத்தில் தஞ்சை மக்களவை தொகுதி உறுப்பினராக பதவி வகித்தார். இவர் எம்.பி.யாக இருந்த போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு மத்திய அரசு வழங்கிய எந்த சலுகையையும் ஏற்காதவர். விமான டிக்கெட், ரயில் டிக்கெட், காருக்கு டீசல் என ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிடைக்கும் அரசின் அனைத்து சலுகைகளையும் வேண்டாம் என உதறித்தள்ளி தனது சொந்த நிதியின் மூலம் டெல்லி சென்று வருவதற்கான செலவுகளை கவனித்துக்கொண்டவர்.
விவசாயம்
பூண்டி வாண்டையார் குடும்பத்திற்கு சொந்தமாக பல நூறு ஏக்கர்களில் விளைநிலங்கள் உள்ளன. ஒரு மனிதனுக்கு எளிமை, நேர்மை, ஆளுமை இவை மூன்றும் இருக்க வேண்டும் என அடிக்கடி கூறும் இவர், தன்னை எப்போதும் விவசாயி எனக் கூறிக் கொள்வதில் அலாதி பிரியம் கொண்டவர். அரசியல், விவசாயம், சமூகப்பணி, இலக்கியம் என பலதுறைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடும் அறிவும் அனுபவமும் உடையவர் இவர். அந்தக் காலத்திலேயே சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர்.
இலவச உயர்கல்வி
பூண்டியில் ஏ.வி.வி.எம்.ஸ்ரீ புஷ்பம் கலை அறிவியல் கல்லூரி நடத்தி வரும் வாண்டையார் குடும்பம் வருடத்திற்கு குறைந்தது ஆயிரம் மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி அளித்து வருகிறது. விவசாய கூலிகள், ஏழை எளியோர் வீட்டு பிள்ளைகள் பலர் இன்று உயர் பதவிகளில் ஜொலிக்க பூண்டி துளசி வாண்டையாரின் இதயத்தில் கசிந்த கருணையும், அன்புமே காரணம் என பெருமிதம் தெரிவிக்கிறார்கள் தஞ்சை பகுதி மக்கள். 60 ஆண்டுகளை கடந்த பழம்பெருமை மிக்க ஸ்ரீ புஷ்பம் கலை அறிவியல் கல்லூரியில், இதுவரை ஒரு ரூபாய் கூட எந்த மாணவர்களிடமும் நன்கொடை பெற்றதில்லை.
வெள்ளிக்கிழமை
மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாளான வெள்ளிக்கிழமை அன்று வாரம் தோறும் பிற்பகலுக்கு மேல் மவுன விரதம் கடைபிடித்து வருபவர் பூண்டி துளசி அய்யா வாண்டையார். மகாத்மா காந்தி மீதும் அவருடைய கொள்கைகள் மீது எந்தளவிற்கு இவர் பற்றுடையவர் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம் ஆகும்.
தந்தை வழியில்
இப்படி பல நற்குணங்களுக்கு சொந்தக்காரராகிய பூண்டி துளசி வாண்டையாரின் மகன் தான் கிருஷ்ணசாமி வாண்டையார். இவர் தற்போது தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார். தனது தந்தை வழியில் கல்லூரி, விவசாயம், சமூகப் பணிகளை கவனித்து வருகிறார். இவருடைய மகன் ராமநாதனுக்கு தான் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணியை திருமணம் முடிக்க உள்ளார்கள். ராமநாதன் தமிழக இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.