"அழுத்தம்" எங்கிருந்து வந்தது.. சசிகலா சைலன்ட் மோடுக்கு போனது ஏன்.. பரபரக்கும் தகவல்கள்!
சசிகலாவின் அதிரடி அறிவிப்புக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை
சென்னை: "சசிகலா இல்லாத தமிழக அரசியல்".. நேற்று இரவுக்கு மேல் இந்த புதிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் 2 விதமாக பிரித்து பார்க்கலாம்.. ஒன்று சசிகலாவின் நிலைமையில் இருந்து பார்ப்பது, மற்றொன்று சசிகலாவை விலக்கி வைத்து பார்ப்பது..!
சசிகலாவின் மனநிலையில் இருந்து பார்த்தோமானால், ஜெயிலில் இருக்கும்போதும் சரி, வெளியே வந்தபோதும் சரி, அதிமுகவில் தனக்கு மறுபடியும் அதிகாரம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கம் பெரிதாக இல்லை.. அதைவிட அவரது எண்ணம் முழுவதும் திமுக மீதே இருந்ததாக சொல்கிறார்கள்..
மகாசிவராத்திரி நாளில் தேர்தல் அறிக்கையை வெளியிடும் திமுக - பரபர பின்னணி
அதிமுக
எந்த ரூபத்திலும் அதிமுக பலவீனமாக போய்விடாமல், திமுக பலம் பெற்றுவிடக்கூடாது என்பதே ஒரே விஷயமாக இருந்திருக்கிறது. இதற்கு அரசியல் காரணம் தவிர தனிப்பட்ட காரணமும் உண்டு.. 30 வருடமாக அரசியல் லாபி செய்து வந்த காலத்தில் இருந்தே திமுக மீது ஒருவித வெறுப்பு இருக்கத்தான் செய்தது, இதனாலேயே அவரது ஒரே குறி திமுகவாக இருக்கிறது.. அமமுக - அதிமுக கட்சிகள் இணைப்பு விஷயத்திலும் அவர் மறுப்பு சொல்லாததற்கு காரணமும், இதுதான். ஒன்றிணைவோம் என்று அறிக்கை விட காரணமும் இதுதான்..!
புள்ளிகள்
இதைதவிர, அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் தன்னை வந்து சந்திக்கவில்லை என்ற வருத்தமும் அவருக்கு இருந்து கொண்டே இருந்தது.. குறிப்பாக 5 அமைச்சர்களை எதிர்பார்த்திருந்தார்.. ஆனால் அவர்கள் சந்திக்க வரவே இல்லை.. தேர்தல் தேதிக்கு பிறகு வருவார்கள் என்று பார்த்தால், அப்போதும் வரவில்லை.. இதற்கு நடுவில் பாஜகவும் கட்சிகள் இணைப்பு பற்றின பேச்சை தொடராமல் அப்படியே நிறுத்தி கொண்டது. இதுவும் சசியின் வருத்தத்திற்கு ஒரு காரணம் எனலாம்.
அமமுக
மற்றொரு புறம் தினகரன் அமமுகவை கொண்டு வந்து முன்னிறுத்தி கொண்டிருப்பதால், அதில் ஆர்வம் காட்டவும் விருப்பமில்லை.. ஒருவேளை தினகரன் கேட்டுக் கொண்டதற்கிணங்க பிரச்சாரத்துக்கு தமிழகம் முழுக்க சென்றால், இரட்டை இலைக்கு எதிரான பிரச்சாரத்தையே தான் முன்வைக்க வேண்டி இருக்கும்.. இதை ஒருபோதும் செய்ய விருப்பமுமில்லை.. அதனால்தான் தினகரனையே தேர்தலில் நிற்க வேண்டாமென்று அட்வைஸ் செய்ததாகவும் ஆனால், தினகரன் தன் முடிவில் பிடிவாதமாக இருப்பது தெரியவும்தான், இப்படி ஒரு முடிவை சசிகலா எடுத்திருப்பதாக ஒருசாரார் கூறுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, சசிகலாவுக்கு ஏற்கனவே உடல்நலம் குன்றிய விஷயத்தையும் இங்கு பொருத்தி பார்க்க வேண்டி உள்ளது.
தினகரன்
ஆனால், சசிகலாவின் விலகலை வேறு விதமாக அரசியல் நோக்கர்கள் பார்க்கிறார்கள்.. சசிகலாவின் தற்போதைய நிலைமை, திமுகவின் அசுர வளர்ச்சி, தினகரனின் குறிக்கோள், அதிமுக தலைமையின் பிடிவாதப்போக்கு, என இவை அனைத்துமே பாஜகவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.. இப்போதைக்கு ஒரே வழி இந்த பிரச்சனையை ஆறப்போடுவதுதான்.. அதுவரை சசிகலாவை அமைதியாக இருக்கும்படி பாஜக சொல்லி இருக்கலாம் அல்லது தேர்தலுக்கு பிறகு அதிரடியில் இறங்கும்படியும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.. பொது எதிரி திமுக என்பதால், முழு கவனத்தையும் அங்கே திருப்பவே பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
விலகல்?
அதுமட்டுமல்லாமல், சசிகலா, அரசியலில் இருந்து விலகுவதாக அந்த அறிக்கையில் எங்குமே சொல்லவில்லை.. "ஒதுங்கியிருக்கிறேன்" என்று மட்டுமே சொல்லி இருப்பதால், இந்த அறிக்கையை முற்றுப்புள்ளியாக கருத தேவையில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அன்று ஜெயலலிதாவும் இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தார்.. பிறகு தன் முடிவையும் மாற்றி கொண்டு அரசியலில் தீவிரமானதால், இந்த அறிக்கையை பெரிதாக எடுத்து கொள்ளவும் தேவையில்லை என்பதே பரவலான கருத்து.
டெல்லி
அதனால், அதிமுக - அமமுக இணைப்புக்காக சசிகலாவை வைத்து நாடகம் அரங்கேற்றப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.. சசிகலா ஆக்டிவாக இருக்கும் வரை அமமுகவை தன்னுடன் அதிமுக சேர்த்துக் கொள்ள முன்வராது. இது தொடர்பாக டெல்லி மேலிட ஆசியுடன் நடந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்து போய் விட்டன. முதல்வர் எடப்பாடியார் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். ஓபிஎஸ் இறங்கி வந்தாலும் கூட எடப்பாடியார் இறங்கி வராததால் இந்த முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை.
திமுக
அதேசமயம், அதிமுக வாக்குகள் சிதறி விடக் கூடாது என்ற கவலையில் டெல்லி உள்ளது. அப்படி சிதறினால் அது திமுகவுக்கு சாதகமாகி விடும் என்பது அதன் கவலை. அமமுக தனியாக போட்டியிட்டால் நிச்சயம் அதிமுக வாக்குகள்தான் அதிக அளவில் பிரியும். அது அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரும் பாதகத்தையே ஏற்படுத்தும்.
இந்த நிலையில்தான் சசிகலாவை விலகக் கோரி மேலிடம் கேட்டுக் கொண்டிருக்கலாம். இந்த முடிவுக்காக அவருக்கு பல வாக்குறுதிகளையும் டெல்லி மேலிடம் அளித்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது.
விலகல்?
"முதலில் அதிமுக அமமுக இணையட்டும். பிறகு உங்களது பேச்சை கட்சித் தேர்தல்கள் உள்ளிட்டவற்றில் கேட்பது போல செய்கிறோம். இப்போதைக்கு நீங்கள் விலகுங்கள்" என்று டெல்லி மேலிடம் கேட்டுக் கொண்டிருக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் அதிமுக - அமமுக இணைப்புக்கு எந்தத் தடையும் இருக்காது என்று டெல்லி நம்புகிறது.
அதிரடி
அடுத்து அதிமுக - அமமுக இணைப்பு வேகப்படுத்தப்படலாம். இருவரையும் இணையுமாறும் டெல்லி மேலிடம் கட்டாயப்படுத்தலாம். இணைத்தும் வைக்கவும் செய்யலாம். ஒருங்கிணைந்த அதிமுகாகே தேர்தலை சந்திக்க வேண்டும் எனவே டெல்லியின் விருப்பம். எனவே இனி வரும் நாட்களில் பல அதிரடிகளை எதிர்பார்க்கலாம்.