தினகரனின் துருப்புச்சீட்டு தங்க தமிழ்ச்செல்வன்.. திருப்பம் தருமா ஆண்டிப்பட்டி?
ஆண்டிப்பட்டியில் தேர்தலை சந்திக்க ஓபிஎஸ், தங்கதமிழ்செல்வன் ஆயத்தமாகி வருகிறார்கள்.
சென்னை: ஆண்டிப்பட்டி!!! தென் தமிழகத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்று. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகளை உறுப்பினராக்கி அழகு பார்த்த ஒரே தொகுதி ஆண்டிப்பட்டி மட்டுமே.
ஆண்டிப்பட்டி நீண்ட காலமாகவே அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது. முக்குலத்தோர் வாக்குகள் மற்றும் படிக்காதவர்கள் அதிகம் என்பதால் இந்த தொகுதி மீது எம்ஜிஆர் தனிக் கவனம் செலுத்தினார்.
2 முறை உறுப்பினர்
1977ம் ஆண்டு முதல் இந்தத் தொகுதி திராவிடக் கட்சிகள் வசம் இருந்து வருகிறது. அதிலும் 2 முறை மட்டுமே திமுக வசம் இருந்தது. மற்ற 9 தேர்தல்களிலும் இது அதிமுகவுக்கே வாக்களித்துள்ளது. அதில் ஒரு முறை எம்ஜிஆர் உறுப்பினரானார். 2 முறை ஜெயலலிதா உறுப்பினரானார். இந்தத் தொகுதியில் அதிமுக முறை ஜெயித்த அதிமுக எம்எல்ஏ என்ற பெயர் தங்க தமிழ்செல்வனிடமே உள்ளது.
அழகு பார்த்த ஜெ.
தினகரன் மூலமாக ஜெயலலிதா மனதில் வெகு சீக்கிரமாகவே இடம் பிடித்தவர் தங்க.தமிழ்செல்வன். ஜெயலலிதா போட்டியிடுவதற்காக ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததன் விளைவு, அதிமுகவின் தேனி வேட்பாளர் மற்றும் எம்.பி..யாகவும் வளர்த்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. அப்போது ஏற்பட்ட கெத்தும் மரியாதையும் இன்னமும் அரசியல் களத்தில் தங்கதமிழ்செல்வனுக்கு நீடித்தே வருகிறது.
டிடிவியின் இதயக்கனி
தேனி மாவட்ட அதிமுக அரசியலில் ஒரு முனை ஓபிஎஸ் என்றால் மறு முனையாக தங்க தமிழ்ச்செல்வன் இருந்து வந்தார். தினகரனின் இதயக்கனியாக ஓ.பி.எஸ் இருந்தவரை தங்க தமிழ்ச்செல்வன் ஓரம் கட்டப்பட்டிருந்தார். ஆனால் ஓபிஎஸ் எதிர் துருவமாக மாறிய அடுத்த விநாடி முதல் தினகரனின் புதிய இதயக் கனியாக மாறி விட்டார்.
தடாலடிக்கு பஞ்சம் இல்லை
ஆண்டிப்பட்டி தொகுதி தங்க தமிழ்செல்வனுக்கு என்றுமே நெருக்கமானது. அங்கு வலுவான ஜாம்பவான்களான ஆசையன் உள்ளிட்டோரை தாண்டி தனக்கென செல்வாக்கை உருவாக்கியதில் தங்க தமிழ்ச்செல்வனின் உழைப்பு அசாத்தியமானது. அன்றும் சரி, இன்றும் சரி, ஆதரவாளர்களை பெருமளவு தன் பக்கமே இழுத்து வருவதில் ஓபிஎஸ்-ஐ விட முன்னணியில் நீடித்து வருவது தங்க.தமிழ்செல்வன்தான்!! மேலும் தற்போதைய அரசியலில் பரபரப்புக்கும், தடாலடிகளுக்கும் எந்தவித பஞ்சமும் இல்லாமல் வைத்திருக்கிறார் தங்க.தமிழ்செல்வன்!!
முறுக்கோடை ராமர்
பதவி நீக்கம் குறித்த தீர்ப்பு டிடிவியுடன் சேர்த்து தங்க.தமிழ்செல்வனையும் ரொம்பவே வாரி சுருட்டி போட்டுவிட்டது. தேர்தலை எதிர்கொள்ளவும் தயங்கியபடியே உள்ளனர். ஆனால் இந்த சாதகமான வழக்கை பயன்படுத்தி கொண்ட அதிமுக தரப்போ சூடு பறக்க தேர்லை சந்திக்க தயாராகி வருகிறது. குறிப்பாக ஆண்டிப்பட்டியில் ஓபிஎஸ், மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமரை அதிமுக சார்பில் களம் இறக்க போவதாக கூறப்படுகிறது.
வெற்றிக்கனி
இப்படிஒருபக்கம் அதிமுகவும் இன்னொரு பக்கம் திமுகவும் இடைத்தேர்தல் பணியில் உற்சாகமாக இறங்கிவிட்டதை கண்ட டிடிவி தரப்பும், இனி இப்படி சோர்ந்து போனால் வேலைக்கு ஆகாது என்று தாங்களும் களமிறங்க முடிவு செய்துள்ளார்கள். ஓபிஎஸ்-ன் இந்த தடாலடி யோசனையை தங்க.தமிழ்செல்வன், தன்னுடைய செல்வாக்கான தொகுதியான ஆண்டிப்பட்டியிலேயே போட்டியிட்டால்தான் வெற்றிக்கனியை பறிக்க முடியும் என்று முடிவு செய்துள்ளார்.
சாதி ஓட்டுக்கள்
அதோடு ஏற்கனவே ஆதரவாளர்கள் தன் பக்கம் நிறைய இருக்கும் பட்சத்தில் கூடவே ஜாதி ஓட்டுக்களும் அதிகமாகவே விழும் என்றும் கணக்கு போடுகிறார். ஆதரவாளர்கள் கூடவே இருப்பதும், சாதி ஓட்டுக்கள் நிறைய விழும் என்று தங்க.தமிழ்செல்வனின் யூகம் ஒரு பக்கம் சரியென்றே வைத்துக் கொண்டாலும், கிட்டத்தட்ட 2 வருஷமாகவே தொகுதி பக்கம் போகாமல், மக்களின் தேவையை பூர்த்தி செய்யாமலும் இருப்பதால் எதிர்பார்த்த ஓட்டுக்கள் விழுமா என்பது தெரியவில்லை.
வெற்றி பெற வாய்ப்பு
அதேசமயம் தேனி மாவட்ட அரசியலைப் பொறுத்தவரை அதிமுக வாக்கு வங்கி என்பது கிட்டத்தட்ட தினகரன் வாக்கு வங்கி போலத்தான். மாவட்டம் முழுவதும் தினகரன் தரப்புதான் மேலோங்கி நிற்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தாலும், ஜாதி அடிப்படையில் பார்த்தாலும் ஆண்டிப்பட்டி மீண்டும் தங்க தமிழ்ச்செல்வன் வசமாகும் வாய்ப்புகளே அதிகம் என்கிறார்கள் தொகுதியிலிருப்போர்.