என்ன செய்தார் இந்த சித்தாண்டி.. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து அதிர வைக்கும் தகவல்
சென்னை: ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சித்தாண்டிக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப்2 ஏ தேர்வு முறைகேட்டில் பெரிய தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சித்தாண்டியை தீவிரமாக விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்று தெரிகிறது.
சென்னையில் காவல்துறையின் ஆயுத படை பணியாற்றி வருபவர் சித்தாண்டி. சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணூர் கிராமத்தைச் சேர்ந்த காட்டுராஜா என்பவரின் மகன் ஆவார். இவர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் மோசடி செய்து கடந்த சில ஆண்டுகளில் 100க்கணக்கான நபர்களுக்கு வேலை வாங்கி கொடுத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
சித்தாண்டியின் மனைவி பிரியா குரூப்2 தேர்வில் தமிழகத்தில் 5வது இம் பிடித்தார், சித்தாண்டியின் தம்பி வேல்முருகன் குரூப் 2 தேர்வில் தமிழகத்தில் 3வது இடம் பிடித்தார்.
தம்பி 3வது இடம்
வேல்முருகன் மனைவி குரூப் 2 தேர்வில் தமிழகத்தில் 6வது இடம் பிடித்தார். சித்தாண்டியின் தம்பி கார்த்தி குரூப் 4 தேர்வில் தமிழகத்தில் முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார். இது தவிர டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்த திருவராஜ் , சித்தாண்டியின் சொந்த ஊரான பெரிய கண்ணூரைச் சேர்ந்தவர் ஆவார். இவருடன செப்டம்பர் மாதம் அதே மையத்தில் தேர்வு எழுதிய 35 பேர் முறைகேடாக வெற்றி பெற்றவர்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஒரே தேர்வு மையம்
2017 2018ம் ஆண்டில் நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வில் அதிகமான நபர்களை சித்தாண்டி வேலைக்கு சேர்த்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தள்ளது. இவர்கள் அனைவரும் வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை தேர்வு செய்து எழுதியவர்கள் என்றும் கூறப்படுகிறது.
குரூப் 4ல் 9 லட்சம்
இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெறுவதற்கு 13 லட்சம் ரூபாயும், குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவதற்கு 9 லட்சம் ரூபாயும் கொடுத்ததாக கொடுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது பற்றி சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்துவருகிறார்கள்.
சந்தேகப்பார்வை
முன்னதாக டிஎன்பிஎஸ்சி தேர்வின் முறைகேடுகளுக்கு மூளையாக சென்னையைச் சேர்ந்த ஜெயக்குமார் செயல்பட்டதாக போலீஸார் கருதி வந்த நிலையில் சித்தாண்டி குறித்து வெளியான ஒரு கடிதம் அவர் மீதான சந்தேக பார்வையை அதிகரித்தது. இதையடுத்து சித்தாண்டி குறித்து குறித்து விசாரிக்க போலீசார் அவரது அலுவலகம் சென்ற போது அவர் விடுப்பில் சென்றது தெரியவந்தது. இதேபோல் அவரது மனைவியும் விடுப்பில் சென்றார்.
வேல்முருகன் சிக்கினார்
இதனிடையே சித்தாண்டியின் தம்பி வேல்முருகனை பிடித்த போலீசார் அவரிடம் சித்தாண்டி குறித்தும் அவரது இருப்பிடம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர். இதேபோல் ஓம் காந்தன் அளித்த வாக்குமூலம் தொடர்பாகவும் விசாரித்தனர். இதனிடையே சித்தாண்டி தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னைக் காவல்துறையில் பணியாற்றும் சித்தாண்டிக்கு நீதிமன்றக் குடியிருப்பில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிலரின் மூலம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தொடர்பு கிடைத்ததாம். அரசியல் பிரமுகர்களின் தொடர்பும் சித்தாண்டிக்கு கிடைத்துள்ளதாம். அதன்பிறகே முறைக்கேட்டை செய்திருக்கிறாராம்.
எப்படி முறைகேடு
இதனிடையே ஓஎம்ஆர் சீட்டில் முதல் 5 கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும். மீதமுள்ள கேள்விகளுக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் தேர்வு முடிந்த பிறகு கொடுத்துவிட வேண்டும் என்கிற அடைப்படையில் சித்தாண்டி தன்னை நாடிய தேர்வர்களுக்கு கண்டிசன் போட்டாராம். அதன்படியே விடைத்தாள்களை திருத்தியிருக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.
உண்மைகள் வரும்
இந்த சூழ்நிலையில் தான் சித்தாண்டி இப்போது ராமநாதபுரம் அருகே போலீசிடம் சிக்கி இருக்கிறார். அவரிடம் தீவிர விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணையில் தான் டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது. எப்படி அரங்கேறியது. எத்தனை ஆண்டுகளாக முறைகேடு நடந்தது. யாரெல்லாம் முறைகேடாக வெற்றி பெற்றார்கள், ஓம் காந்தன், ஜெயகுமார் இதில் பங்காற்றியது எப்படி என்பது உள்பட பல தகவல் வெளியாக வாய்ப்பு உள்ளது.