அவரும் வேண்டாம்.. இவரும் வேண்டாம்.. மூன்றாவது ஒருவரை முதல்வராக முன்னிறுத்தினால்? அதிமுக வியூகம்
சென்னை: தேர்தல் காலம் நெருங்க நெருங்க, தமிழக அரசியலில் அனல் பறக்க ஆரம்பித்து உள்ளது. குறிப்பாக, அதிமுக பக்கத்தில் அதிர்வுகள் அதிகமாகத் தென்படுகின்றன.
முதல்வர் வேட்பாளர் யார் என்பதில்தான் இத்தனை பரபரப்புகளும் மையம் கொண்டுள்ளன. தேர்தலுக்கு பிறகு சட்டசபை உறுப்பினர்கள் இணைந்து முதல்வரை தேர்ந்தெடுப்போம் என்று சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு.
என்றைக்குமே, எடப்பாடியார்தான் முதல்வர்.. என்று சூட்டோடு சூடாக பதிலை கொடுத்தார் இன்னொரு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதன் பிறகுதான் இந்த விவகாரம் தமிழக அரசியலில் சுழன்று அடிக்க ஆரம்பித்துள்ளது.
அவசரப்படாதீங்க... அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்கிறார் கே.பி முனுசாமி
ஆலோசனை
ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு வகையான கருத்துக்களை கூற ஆரம்பித்த நிலையில்தான் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, வைத்தியநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று திடீரென ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக அறியப்பட்டவர்கள் என்பதால் பரபரப்பு மேலும் கூடியது.
ஒரே உரையில் இரு வாள்
ஒரு உரையில் இரு வாள்கள், இருக்க முடியாது என்று சொல்வார்களே.. அது அதிமுக விஷயத்தில் மிகவும் பொருந்திப் போகக் கூடியது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் கட்சியின் நலனுக்காக ஒரே அணியில் இணைவதாக அவர் அறிவித்திருந்தார். ஆனால், பன்னீர்செல்வம் போன்று 3 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தவர். ஜெயலலிதாவால் அவ்வப்போது முதல்வராக கை காட்டப்பட்டு பதவிக்கு வந்தவர். அப்படி இருக்கும் போது துணை முதல்வராக எப்படி தொடர முடியும் என்பதைப்போல அரசியல் விமர்சகர்கள் அப்போது கேள்வி எழுப்பினர்.
எதிர்ப்பு இல்லை
ஆனால் ஆட்சி காலம் முடிவடைவதற்கு காலங்கள் பல இருந்ததாலோ என்னவோ, இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது. முதல்வர் பதவி எடப்பாடி வசமிருந்தாலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு வழங்குவதில் எடப்பாடி எதிர்ப்பு காட்டவில்லை. அந்த வகையில் இரு தரப்பும் விட்டுக்கொடுத்தல் மூலமாக இணைந்து செயல்பட தொடங்கியது. ஆனால் இப்போது காலம் மாறி உள்ளது, காட்சிகள் மாறத் தொடங்கியுள்ளன.
பேட்டிகள்
2021ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது மறுபடியும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினால் அதிமுகவில் பன்னீர்செல்வம் தொடர்ந்து இரண்டாவது நிலையிலேயே இருக்க நேரிடும் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். இதன் வெளிப்பாடுதான் இன்றைய ஆலோசனைகளும், இதற்கு முந்தைய பேட்டிகளும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சசிகலா
மூன்று முறை முதல்வராக பதவி வகித்த பன்னீர்செல்வம் இரண்டாம் நிலையிலேயே தொடர்வதை அவரது ஆதரவாளர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு பக்கம் சசிகலா விடுதலை 2021ல் இருக்கும் என்பதால் அதிமுகவில் தற்போதைய அணிகள் வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். அல்லது சசிகலா தரப்பு வளர்ந்துவிடும் என்று கட்சிக்குள் சிலர் கருதுகிறார்கள். எனவே இப்போதே யார் முதல்வர் வேட்பாளர் என்பதை முடிவு செய்து கொண்டு அதற்கு ஏற்ப வியூகம் அமைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
யார் முதல்வர்
அதேநேரேம், யார் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இருதரப்பில் யார் விட்டுத் தருவார்கள் என்பது அடுத்த கேள்வி. எனவேதான் மூன்றாவது ஒரு பார்முலாவை முன்வைக்கிறார்கள் கட்சிக்குள் சிலர். இருவரில் யாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினாலும், மற்றொரு தரப்பு அதிருப்தி அடையும். எனவே இருவருக்கும் நெருக்கமான ஒருவரை வேட்பாளராக நிறுத்தி அதிகாரத்தை பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்ற பேச்சுக்கள் வருகின்றன. மேற்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு தற்போதைய அமைச்சருக்கு முதல்வர் வாய்ப்பை வழங்கலாம் என்றும் சிலர் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது நடைமுறைக்கு வருவதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு.
பேச்சுவார்த்தை
எனவே அமைச்சர்களும் அல்லது நிர்வாகிகளும் தனித்தனியாக இந்த விஷயத்தை பேசி முடிவு செய்துவிட முடியாது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் இணைந்து இந்த விஷயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, இணைந்த கரங்களாக தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை விரைவில் துவக்கி, இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஒருவேளை இது நடைபெறாமல் போனால், அதன் பாதிப்பு கட்சிக்குத்தான் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.