அதெல்லாம் சீக்ரெட்.. பொடி வச்சு பேசும் மாஜி!.. அப்போ ஓபிஎஸ்ஸை அந்த பதவியிலிருந்து நீக்க முடிவா?
சென்னை: தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்க வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது. ஆனால் எந்த முடிவுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
Recommended Video
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் இன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். தனது கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி 1 மணி நேரம் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இதையடுத்து தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்ட அவருக்கு தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர். எம்ஜிஆர் மாளிகையில் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
உள்ளே மீட்டிங்.. வெளியே அதிமுக அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் பேனர்.. ஆதரவாளர்கள் அதிர்ச்சி!
அன்பு வெள்ளம்
தொண்டர்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தி உள்ளே சென்றார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த கூட்டத்தில் பொருளாளராக உள்ள ஓபிஎஸ் நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின. அவ்வாறு நீக்கப்பட்டால் அவருக்கு பதில் பொருளாளராக கே பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.
ஜூலை 11 ஆம் தேதி செயல்வடிவம்
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியையும் பறிக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இன்றைய தினம் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "தலைமை கழக நிர்வாக குழு கூட்டத்தை கூட்ட தலைமை நிர்வாக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உரிமை உண்டு. கூட்டத்தில் நிறைய பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அது சீக்ரெட். அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது. எல்லா முடிவுகளும் வரும் ஜூலை 11 ஆம் தேதி தெரியவரும் என்றார். எனவே ஓபிஎஸ்ஸின் பதவிகளை பறிக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.
11 ஆம் தேதி என்ன நடக்கும்?
ஒரு வேளை ஜூலை 11 ஆம் தேதி ஓபிஎஸ்ஸின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டால் அந்த பதவி வன்னியர் சமூகத்தை சேர்ந்த கே பி முனுசாமிக்கு வழங்கப்படும். மேலும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி தேவர் சமூகத்தை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு கொடுக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. காரணம் பொருளாளராக இருந்த ஓபிஎஸ் தேவர் சமூகத்தை சேர்ந்தவர். எனவே அந்த சமூகத்து மக்களை திருப்திப்படுத்த பொருளாளர் பதவி அல்லது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு கொடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஒரு வேளை பொருளாளர் பதவி கே பி முனுசாமிக்கு கொடுக்கப்பட்டால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கா இல்லை நத்தம் விஸ்வநாதனுக்கா என்ற கேள்வி எழுகிறது.
திண்டுக்கல் சீனிவாசன்
இவர்களில் திண்டுக்கல் சீனிவாசன்தான் சீனியர், இவர் ஜெயலலிதா காலத்தில் பொருளாளராக இருந்தவர். திண்டுக்கல்லாரால் அரசியலில் அடையாளம் காட்டப்பட்டவர்தான் நத்தம் விஸ்வநாதன். திண்டுக்கல் சீனிவாசனுக்கே அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் பொருளாளர் பதவியும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியும் 2017 ஆம் ஆண்டு தர்மயுத்தத்தின் போது ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்தவர்களுக்கே செல்லாது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.