கூட்டணிக்குப் பெரிய கட்சிகளுக்கு வாய்ப்பில்லை.. தனித்து விடப்படும் அபாயத்தில் தமிழக பாஜக!
சென்னை: தமிழகத்தில் பாஜகவுக்கு கூட்டணிக்கு ஆளே கிடைக்காத நிலை ஏற்படக் கூடிய வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று அரசியல் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
தற்போதைய நிலையைப் பார்க்கும்போது காங்கிரஸ் தலைமையில் அகில இந்திய அளவில் மெகா கூட்டணி அமையப் போகிறது. தமிழகத்திலும் இந்தக் கூட்டணி வலுவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட முக்கியக் கட்சிகள் எல்லாம் இந்தக் கூட்டணியில் இடம் பெறக் கூடிய வாய்ப்புகள் கூடி வருகின்றன. அப்படி நடக்கும்போது பாஜகவுக்கு என்று சொல்லிக் கொள்ளும்படியான கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
வலிமையான கூட்டணி
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையில் அமையப் போகும் கூட்டணியே வலுவானதாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நிலையில் கட்டமைப்பு சீர்குலையாமல் உள்ள ஒரே பெரிய கட்சி திமுக மட்டுமே. எனவே திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றிக் கூட்டணியாக இருக்க முடியும் என்று அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
அப்படியே அள்ளப் போகிறது
இந்தக் கூட்டணியானது வாக்குகளை சிதற விடாமல் அப்படியே அள்ளுவதற்கான வாய்ப்புகளை சேர்த்து வருகிறது. சின்ன சின்ன சக்திகளையும் கூட விடாமல் உள்ளே இழுக்கும் முயற்சிகள் சத்தம் இல்லாமல் நடந்து வருகிறதாம். அதேசமயம், பெரிய கட்சிகளை இணைத்து இதுவரை இல்லாத வலுவான கூட்டணியை அமைக்க திமுக காய் நகர்த்தி வருகிறதாம்.
யாரெல்லாம்
திமுக தலைமையிலான தமிழக கூட்டணியில் காங்கிரஸ் கண்டிப்பாக இடம் பெறும். அதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் சேர்க்க முயற்சி நடந்து வருகிறது. தமாகா, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் என மற்ற சக்திகளையும் இணைத்து வலிமையான கூட்டணிக்கு முயற்சிகள் நடக்கிறதாம்.
அமமுக என்ன செய்யும்
தினகரனின் அமமுக என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. அதேசமயம், திமுகவிடமிருந்து காங்கிரஸைப் பிரிக்க அமமுக முயற்சிப்பதாகவும் ஒரு பேச்சு உள்ளது. ஆனால் மறுபக்கம் இன்னொரு பேச்சு அடிபடுகிறது. அது, அதிமுகவுடன் சமரசமாகி இணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்பது. இதில் எது நடக்கப் போகிறது என்று தெரியவில்லை.
அதிமுக வலிமை பெற்றால்
ஒருவேளை தினகரன் தரப்பும், அதிமுகவும் இணைந்து விட்டால் நிச்சயம் அது பலமான சக்தியாக அமையும். காரணம், இரட்டை இலை. ஆனால் அந்த நிலையை ஏற்படுத்த பாஜக அனுமதிக்காது. வலிமையான அதிமுக பாஜகவுக்குத் தேவையில்லை. நோஞ்சான் அதிமுகதான் அதற்குத் தேவை. எனவே அது நடக்க வாய்ப்பில்லை.
பாஜக என்ன செய்யும்
இந்த நிலையில் தற்போது பாஜகவுக்கு கூட்டணியாக வரப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. அக்கட்சிக்கு பெரிய கட்சி எதுவும் கூட்டணிக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. மிஞ்சிப் போனால் பலவீனமான அதிமுக, கிருஷ்ணசாமி, பாரிவேந்தர் போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய கட்சிகள்தான் கூட்டணியாக வரும் என்று தெரிகிறது. ஆக, பலமான கூட்டணிக்கு மத்தியில் பாஜக தமிழகத்தில் தனித்து விடப்படும் அபாய நிலையை மறுப்பதற்கில்லை என்று சொல்கிறார்கள்.