அண்ணாமலையின் ஆதரவு ஓபிஎஸ்க்கா? ..ஈபிஎஸ்க்கா?.. வந்து விழுந்த கேள்வி.. செங்கோட்டையன் அளித்த பதில்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அதிமுகதான் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று தெரிவித்து இருந்தார். அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்து இருப்பதால் தமிழ்நாடு பாஜகவின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற பேச்சுக்களும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இது தொடர்பாக செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதேபோல் அதிமுக கூட்டணியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுகவிற்கு விட்டுக்கொடுத்தது. இதனால், அதிமுக போட்டியிடுவது உறுதியானது. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் அதிமுக சார்பாக வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவித்து இருக்கிறார்.
ஈரோடு கிழக்கு: நாங்களும் போட்டிதான்.. சவால்விடும் அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளரை தேடி வலைவீச்சு!
இரு அணியினரும் போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதேவேளையில் தேசியக் கட்சியான பாஜக போட்டியிட்டால் ஆதரவு கொடுப்போம் எனவும் ஓ பன்னீர் செல்வம் கூறி வருகிறார். அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்து இருப்பதால் ஈரோடு இடைத்தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்களை சந்தித்து இரு அணியினரும் ஆதரவு திரட்டினர்.
அதிமுகவுக்கு தான் ஆதரவு
அந்த வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து இரு அணியினரும் பேசினர். பாஜக போட்டியிடுமா? இல்லையா? என்பது இன்னும் வெளிப்பட்டையாக அறிவிக்கவில்லை. இருந்தாலும் நேற்று பேட்டி அளித்த அண்ணாமலை சூசகமாக பாஜக போட்டியிடாது என்ற கருத்தை தெரிவித்தார். அண்ணாமலை கூறுகையில், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை எங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடக்கூடிய பெரிய கட்சி அதிமுகதான். கூட்டணிக்கு என்று மரபு, தர்மம் இருக்கிறது.
பாஜக போட்டியில்லை?
தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய கட்சி பலம் வாய்ந்த கட்சியாக மக்கள் ஆதரவுள்ள கட்சியாக இருக்க வேண்டும். அந்த கட்சி அதிமுக தான். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஏற்கனவே அமைச்சரான பல தலைவர்கள் அதிமுகவில் உள்ளனர். பண பலம், படை பலம், அதிகார பலத்தை இந்த தேர்தலில் திமுகவினர் தவறாக பயன்படுத்த உள்ளார்கள். இவற்றையெல்லாம் எதிர்த்து நிற்க கூடிய வேட்பாளர் அதிமுக சார்பில் நிற்க வேண்டும். அவருக்கு பின்னால் எல்லோரும் அணிவகுத்து நிற்க வேண்டும். இதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு" என்றார்.
எந்த அணிக்கு பாஜகவின் ஆதரவு
அண்ணாமலை அளித்த இந்த பேட்டியின் மூலம் பாஜக இடைத்தேர்தலில் போட்டியிடாது என்பதை கருத முடியும் என அரசியல்வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் இரு அணிகளும் போட்டியிடுகின்றன. இதில் எந்த அணிக்கு பாஜகவின் ஆதரவு இருக்கும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
இரட்டை இலை சின்னம் எங்களுக்கு..
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்க்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை இரட்டை இலை சின்னம் முழுமையாக எங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பும் எடப்பாடியாருக்கு ஆதரவாக கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. இரட்டை இலையை பொறுத்தவரை வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு நீங்கள் அதை எதிர்பார்க்கலாம். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
எந்த அதிமுகவிற்கு பாஜக ஆதரவு
பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக பெரிய கட்சி அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் எந்த அதிமுகவிற்கு என்று சொல்லவில்லையே என செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேள்வியை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன் , "பொறுத்து இருந்து பாருங்கள்" என்று பதிலளித்தார்.
வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று
தொடர்ந்து செங்கோட்டையன் பேசுகையில், ஈரோடு மாவட்டத்தில் வியக்கத்தக்க வகையில் குடிநீர் திட்டங்கள், சாலைப் பணிகள், மேம்பாலங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும், சூப்பர் ஸ்பெஷிலிட்டி மருத்துவனை என அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை மக்களை சந்திக்க போகிறோம். மக்கள் மனம் மாறியிருக்கிறார்கள். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று" என பதிலளித்துள்ளார்.