கையெழுத்தால் அதிமுகவில் புதிய பிரச்சனை! இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் 34 வேட்பாளர்களுக்கு சிக்கல்!
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9 ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கட்சிகள் அடிப்படையில் வேட்பாளர்கள் போட்டியிடும் 34 பதவிகள் உள்ளன. இந்நிலையில் தான் அந்த வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கான படிவத்தில் கையெழுத்திடுவது யார் என்ன கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக்க அவரது ஆதரவாளர்கள் முயன்று வருகின்றனர்.
இதற்கு ஓ பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு நடந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வத்தை, எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அவமானப்படுத்தினர். தொடர்ந்து இருவரும் தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ரூ.35,000 சம்பளத்தில் உச்சநீதிமன்றத்தில் வேலை! பட்டதாரிகளுக்கு அழைப்பு! விண்ணப்பம் செய்வது எப்படி?
தலைமை கழகம் பெயரில் அறிவிப்பு
இந்நிலையில் தான் இன்று அதிமுக சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற உள்ளது என கூறப்பட்டு இருந்தது. வழக்கமாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் அறிவிப்புகள் வெளியாகும். ஆனால் இந்த அறிவிப்பானது தலைமை கழகம் பெயரில் மட்டுமே வெளியிடப்பட்டது. இதன்மூலம் அதிமுகவில் கையெழுத்து பிரச்சனை எழுந்துள்ளது. இந்நிலையில் தான் தற்போதைய கையெழுத்து பிரச்சனையால் இன்னொரு சர்ச்சை உருவாகி உள்ளது அதுபற்றிய விபரம் வருமாறு:
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் ஜூலை 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருந்தது. இதற்கான வேட்புமனுத்தகாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கியது. ஜூலை 28 ல் வேட்புமனு பரிசீலனையும், ஜூன் 30ம் வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாகவும் உள்ளது. நாளை(ஜூலை 27) வேட்புமனுத்தாக்கல் செய்ய இறுதி நாளாகும். தேர்தல் ஜூலை 7 ல் நடைபெற்று ஓட்டு எண்ணிக்கை ஜூலை 12ல் நடைபெற உள்ளது.
34 பதவிகளுக்கு கட்சி வேட்பாளர்கள்
அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இரண்டு மாவட்ட கவுன்சிலர், 20 ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 பஞ்சாயத்து உறுப்பினர்கள், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
சின்னம் ஒதுக்கீடு படிவம்
இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்ய வசதியாக ஏ, பி என்ற படிவங்கள் வழங்கப்பட வேண்டும். இந்த படிவங்களில் சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள் கையெழுத்திட்டு தங்களின் வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும். அதிமுகவை பொறுத்தமட்டில் தற்போது ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இந்த படிவங்களில் கையெழுத்திட்டு வந்தனர்.
இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?
தற்போது அதிமுகவில் உள்கட்சி பூசல் நிலவும் நிலையில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே மோதல் போக்கு உள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும் எம்பியுமான சிவி சண்முகம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது என தெரிவி்துள்ளது. இதனால் வேட்புமனுத்தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் அதிமுக வேட்பாளர்களின் படிவங்களில் யார் கையெழுத்திடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.