திமுக Vs அதிமுக.. விக்கிரவாண்டி யாருக்கு.. நாங்குநேரியில் கொடி நாட்ட போவது யார்.. மக்கள் வெயிட்டிங்
இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது
Recommended Video
சென்னை: நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக - திமுக இவர்களில் வெற்றி யாருக்கு என்பதை அறிய இரு கட்சி தரப்புமே ஆர்வமாக இருக்கின்றன.
எல்லா இடைத்தேர்தலும் ஆர்கே நகர் போல் ஆகிவிடாது. பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் என்று பொதுவான இயல்பு. இருந்தாலும் இந்த முறை இடைத்தேர்தலை பொறுத்தவரை, 2,3 முக்கிய காரணங்கள் முக்கிய மைனஸாக பார்க்கப்படுகிறது. அடிப்படையில் இரு தொகுதிகளிலுமே எந்த ஒரு முன்பிரச்சனையும் முன்வைத்து, நடந்த தேர்தல் இல்லை இது.
உதாரணத்துக்கு வேலூர் தேர்தலில் பார்த்தோமானால், கடைசி நாட்களில் மத்திய அரசின் 370, முத்தலாக் போன்ற விவகாரங்கள் பெரியதாக பேசுபொருளாக மாறியது. அதன் மூலம் தாக்கம் ஏற்பட்டு, ஒரு மாற்றமும் வந்தது. ஆனால் இந்த முறை அப்படி ஒரு பேசு பொருள் இல்லை. 2 தொகுதிகளிலுமே, இரு கட்சிகளுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.
சட்டை கிழிந்தது.. மாறி மாறி அடித்து கொண்ட பாமக, தேமுதிக தொண்டர்கள்.. விக்கிரவாண்டியில் பரபரப்பு
பேசுபொருட்கள்
இப்படி ஒரு பேசுபொருள் இல்லாத காரணத்தினால்தான், இளைஞர்கள் உட்பட பொதுமக்களிடையே தாக்கம் ஏற்படவில்லை. கூட்டணி தரப்பினரை எடுத்து கொண்டாலும் அபரிமிதமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாங்குநேரி காங்கிரஸ் வாக்குகள் நிறைந்த தொகுதிதான்.. ஆனால் சீமான் ராஜீவ் காந்தி விஷயத்தை அக்குவேறாக ஆணி வேறாக பிரித்து எடுத்து பேசியபோதுகூட, இந்த விவகாரத்தை காங்கிரஸ் தரப்பு நாங்குநேரியில் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
விசிக
அதேபோல, இதே நாங்குநேரியில் அதிமுக பாஜக தரப்பிலான எந்த முக்கிய பிரமுகரையும் பிரச்சாரத்துக்கு அழைத்து வரவில்லை. பொன்.ராதா மட்டும்தான் வந்து போனார்.. அதேபோல திமுகவை பொறுத்தவரை, இடதுசாரி, விடுதலை சிறுத்தைகளின் பிரச்சாரங்கள் போதிய வலுவை சேர்க்கவில்லை என்று கிசுகிசுக்கப்பட்டது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, விக்கிரவாண்டியில் வன்னிய சமுதாயத்திற்கு திமுக செய்த நற்செயல்களை லிஸ்ட் போட்ட ஸ்டாலினின் யுக்தி சந்தர்ப்பவாதமாகவே பார்க்கப்பட்டு விட்டது.
பிரதிபலிப்பு
இதைதவிர, செத்து போன ஜெயலலிதாவின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க செய்வோம் என்று அதிமுகவும் சொல்கிறது.. திமுகவும் சொல்லி ஏற்கனவே இருந்த குழப்பத்தை மக்களிடம் அதிகமாக்கி விட்டு சென்றுள்ளன. அதனால், திமுக, அதிமுகவில் ஏகப்பட்ட முரண்கள், கூட்டணியிடம் சமரசதன்மையின்மை போன்றவைகள் அப்பட்டமாக பிரதிபலித்தை பார்க்க முடிந்தது. இப்போது இதில் வெற்றி தோல்வி என்று எடுத்து கொண்டால், முதலிலேயே சொன்னபடி, இது ஆளும் தரப்புக்கு ஆதரவான தேர்தலாக தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவி சண்முகம்
அடுத்ததாக, தேனி ஃபார்முலா தாராளமாக புழங்கி உள்ளது. திமுகவும் இந்த ஃபார்முலாவை கையில் எடுத்தாலும், அதிமுகவின் அந்தந்த தொகுதி அமைச்சர்கள் உண்மையிலேயே வெற்றிக்காக பாடுபட்டதை மறுக்க முடியாது. நாங்குநேரியைவிட அதிகமாக எதிர்பார்க்கப்படும் தொகுதி விக்கிரவாண்டிதான்.. ஆனால், இங்கு சிவி சண்முகத்தை முழுக்க முழுக்க எடப்பாடியார் நம்பியது வீண் போகவில்லை என்றே சொல்கிறார்கள்.
ரிப்போர்ட்
நேற்று வாக்குபதிவு முடிந்ததும், இரு தொகுதி நிலவரம் குறித்து பல்வேறு வகையிலும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. அதில், ரிசல்ட் அதிமுகவுக்கே சாதகமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளதாம். அதேபோல, உளவுத்துறை ரிப்போர்ட்டும் கூட சாதகமாகவே வந்துள்ளதாக சொல்கிறார்கள். இதனால் அதிமுக தரப்பு ஹேப்பி என்கிறார்கள். உண்மையில் அதிமுக தரப்பு படு தீவிரமாக இரு தொகுதிகளிலும் வேலை பார்த்துள்ளதை மறுக்க முடியாது.
தீர்ப்பு?
சில பல குழப்பங்களை தவிர்த்து விட்டு கூட்டி கழித்து பார்த்தால், விக்கிரவாண்டியில் அபார வெற்றியும் நாங்குநேரியில் சுமாரான வெற்றியும் அதிமுகவுக்கு கிடைக்கும் என்கிறார்கள். எனினும் மக்கள் அளித்த தீர்ப்பை அதிகாரப்பூர்வமாக 24ம் தேதிதான் அறிந்து கொள்ளமுடியும்.. பார்க்கலாம்.. திமுகவா, அதிமுகவா என்று!