மாணிக்கம் தாகூர் VS கார்த்தி சிதம்பரம்! அனல் பறக்கும் இளைஞர் காங்.தேர்தல்! முட்டி மோதும் புள்ளிகள்!
சென்னை: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது.
மாணிக்கம் தாகூர் எம்.பி. மற்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகிய இருவரும் இந்த தேர்தலில் தங்கள் ஆதரவாளரை வெற்றிபெற வைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளனர்.
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
குறிப்பாக இந்த தேர்தலை தங்கள் பிரஸ்டிஜ் பிரச்சனையாக அவர்கள் இருவரும் கருதுகின்றனர்.
இளைஞர் காங்கிரஸ்
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள ஹசன் மவுலானா எம்.எல்.ஏ.வின் பதவிக்காலம் வரும் டிசம்பரில் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால் இப்போது தலைவராக உள்ள ஹசன் மவுலானா எம்.எல்.ஏ. மீண்டும் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸில் மாநில அளவில் 34 பதவிகளும், மாவட்ட அளவில் 24 பதவிகளும் உள்ளன.
இருவரும் குறி
இந்த இடங்களில் எல்லாம் தங்கள் ஆதரவாளர்கள் பொறுப்புக்கு வந்தால் தான் கட்சியில் தங்களுக்கான செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முடியும் எனக் கருதும் மாணிக்கம் தாகூரும், கார்த்தி சிதம்பரமும் உட்கட்சி தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனிடையே இவர்கள் இருவருமே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை குறிவைத்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. கடந்த முறை இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக வெற்றிபெற்ற ஹசன் மவுலானாவும், ஊர்வசி அமிர்தராஜூம் மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்கள். இன்று அவர்கள் இருவருமே சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
கொங்கு மண்டலம்
இதை வைத்து மாணிக்கம் தாகூரை நம்பினால் நல்ல எதிர்காலம் என்ற பரப்புரையை அவரது தரப்பினர் முன்னெடுத்துள்ளனர். இதற்கு சற்றும் சளைக்காமல் கார்த்தி சிதம்பரம் தரப்பும் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே மாணவர் காங்கிரஸ் நிர்வாகியாக இருக்கும் அஸ்வத்தாமன் தரப்பும் தங்கள் பங்குக்கு இந்த கோதாவில் குதிக்கிறது. மாணிக்கம் தாகூர் அணி சார்பில் கோவையை சேர்ந்த ஜி.ஆர்.நவீன்குமார் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.
தென் மாவட்டம்
பாஜகவில் கொங்குமண்டலத்தை சேர்ந்த அண்ணாமலை மாநில தலைவராக இருப்பதால், இளைஞர் காங்கிரஸ் தலைவராக கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவரை கொண்டுவர விரும்புகிறார் மாணிக்கம்தாகூர். பெரியளவில் பண பலமோ, குடும்ப பின்புலமோ இல்லாத ஜி.ஆர்.நவீன்குமாருக்கு மாணிக்கம் தாகூர் தான் எல்லா வகைகளிலும் உதவி செய்யக்கூடும் எனத் தெரிகிறது. இதற்கு போட்டியாக தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை கார்த்தி சிதம்பரம் தரப்பு களத்தில் இறக்கவுள்ளது.
ஏன் முக்கியத்துவம்?
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஏன் இவ்வளவு மவுசு என நாம் விசாரித்ததில், இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவருக்கு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் சீட் கொடுக்கப்படும். இது மட்டுமல்லாமல் செயல்பாடுகள் நன்றாக இருப்பின் கட்சியில் தொடர்ந்து ஏறுமுகம் தான். இதனால் தான் இந்தப் பதவிக்கு காங்கிரஸில் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதாக தகவல் கிடைத்தது.