வேல்முருகனை வைத்து திமுக போடும் ஸ்கெட்ச்.. தவிடுபொடியாக்க தயாராகும் பாமக.. பக்பக் நிலையில் அதிமுக!
வேல்முருகன் வன்னியர்களின் ஓட்டுக்களை அள்ளுவாரா
சென்னை: யதார்த்தத்தை சொல்ல வேண்டும் என்றால் அதிமுகவினால் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது பாமக! அதிமுக-பாமக என்ற மெகா கூட்டணியை திமுகவால் அவ்வளவு லேசில் உடைத்துவிட முடியுமா என்பதும் லேசான சந்தேகத்தை கிளப்புகிறது.. அதேபோல் முழுக்க முழுக்க வேல்முருகனால் வன்னியர்களின் ஆதரவை பெற்றுவிட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது!
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அடியை மிக கவனமாக எடுத்து வைத்து வருகின்றன.. அதிமுகவின் செயல்பாடுகள் சமீப காலமாக மெச்சத்தகுந்த வகையிலேயே உள்ளது.. குறிப்பாக எடப்பாடியாரை பெரிதாக எந்த குறையும் சொல்வதற்கில்லை.
முன்பாவது உள்ளடி வேலைகள், உட்கட்சி பூசல் என்று வெடித்தது.. ஆனால் இப்போது அவையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது... ஒவ்வொரு விஷயத்தையும் முதல்வரே நேரடியாக கண்காணிக்கிறார்.. அமைச்சர்கள் யாராவது சர்ச்சையாக பேசினாலும் அதை கண்டிக்க தவறுவது இல்லை.
வன்னியர்கள்
அதேபோல கூட்டணிகளையும் சரிகட்டி கொண்டு போகிறார்.. இதில் பாமகதான் அதிமுகவுக்கு எனர்ஜி தரக்கூடியதாக உள்ளது.. தமிழகத்தில் 20 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவற்றில் 10 தொகுதிகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கின்ற சமுதாயமாக வன்னியர்கள் இருக்கிறார்கள். ஆட்சியை நிர்ணயம் செய்யக்கூடிய அளவுக்கு வாக்கு வங்கி நிரம்பியவர்கள்..
பாமக
வடமாவட்டங்களில் பாமகவில் செல்வாக்கு பெருகி வருகிறது என்பதே உண்மை.. சமூக நிதியை முன் வைத்துதான் ஆரம்பத்தில் பாமக களம் இறங்கினாலும், அப்போது முதல் இப்போது வரை ஏற்ற இறக்கத்துடன் வாக்கு வங்கியை தக்க வைத்து வருகிறது. பொதுவாக பாமக தரப்பில் வைக்கப்படும் மைனஸ் என்றால், மாறி மாறி கூட்டணி வைப்பதும், சாதிக்கட்சி என்ற முத்திரையை தக்க வைத்து வருவதும்தான்.. மற்றபடி பாமக எங்கு கூட்டணி வைக்கிறதோ அங்கு இமாலய வெற்றி கிடைத்துவிடும்.. மாறி மாறி கூட்டணி வைப்பதால், இக்கட்சி மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடுகிறது.. அதைவிட முக்கியம், ஒரு கட்சியில் இருக்கும்போது, இன்னொரு கட்சி தலைவரை சரமாரி விமர்சிப்பதை பெரும்பாலும் யாரும் ரசிக்கவில்லை.
இட ஒதுக்கீடு
இடஒதுக்கீடு அரசியலை தூக்கி பிடித்ததுதான், இக்கட்சியின் வாக்கு வங்கியை பலமாக்கியது.. வடமாவட்ட அரசியலில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துள்ள நிலையில், இதை திமுக எப்படி சமாளிக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.. வன்னியர்களின் ஆதரவை பெறுவதற்காக வேல்முருகன் உள்ளார்... வடமாவட்டங்களில் வேல்முருகனுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது.. இதை தவிர பிற மாவட்டங்களிலும் ஆதரவு இருக்கிறது.. இதுபோக காடுவெட்டி குரு ஆதரவாளர்களும் பக்கபலமாக உள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக விசிகவின் நட்பு நெருக்கமாக உள்ளது.. இவை எல்லாம் சேர்ந்து திமுகவின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது..
வேல்முருகன்
அதேசமயம் வேல்முருகன் எப்போதும் கேட்கும் கேள்விகள் "இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 23 பேரின் குடும்பங்களுக்கு மருத்துவர் என்ன கொடுத்தார்? இந்த இனத்துக்காக திமுகதான் பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி உள்ளது.. பாமகவில் இருந்து வெளியேறிய எத்தனையோ பேர் இன்று அடையாளம் தெரியாமல் போய்விட்டனர். ஆனால் அதிலிருந்து விலகி வந்து, அவர்களை எதிர்த்து இத்தனை ஆண்டுகளாக அரசியல் செய்து வரும் ஒரே கட்சி தமிழக வாழ்வுரிமை கட்சி மட்டுமே... இட ஒதுக்கீட்டில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்திற்கு பென்சன் வழங்கியவர் கருணாநிதி தான். வன்னிய இனத்துக்கு கருணாநிதியை தவிர வேறு யாரும் நல்லது செய்தது இல்லை..." என்பார்.
சாத்தியமா?
இதே பேச்சைதான் இப்போதும் வேல்முருகன் முன்னெடுத்து வைப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.. ஆனால், வேல்முருகனால் பெரும்பாலான வன்னியர்களின் ஆதரவை திமுக பக்கம் திருப்பம் முடியுமா என தெரியவில்லை.. எப்படி பார்த்தாலும் அதிமுக-பாமகவை எதிர்கொள்ள திமுக பெரிய அளவில் திட்டம் தீட்டினால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!