ஆர்கே நகரில் விட்டதை திருவாரூரில் வட்டியுடன் திருப்பிக் கொடுக்குமா திமுக?
சென்னை: திருவாரூர் தொகுதி என்றாலே நினைவுக்கு வருவது மு.கருணாநிதிதான். அவர் அந்த மாவட்டத்தில் உள்ள திருக்குவளையை சேர்ந்தவர்.
இந்த திருவாரூர் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தொகுதிக்கு வரும் 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அந்த தொகுதியை பற்றிய எதிர்பார்ப்பு தொற்றி கொண்டது.
திமுக கோட்டை
திருவாரூர் திமுகவின் கோட்டையாகும். இங்கு 1962ல் காங்கிரஸின் அம்பிகாபதி முதல் எம்எல்ஏவாக வென்றார். 67ல் சிபிஎம்மின் தனுஷ்கோடி வெற்றி பெற்றார். 1971-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவின் தாழை மு.கருணாநிதி போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 77 தேர்தலிலும் அவரே வெற்றி பெற்றார். 80,84ல் சிபஎம்மின் செல்லமுத்து, 89,91ல் சிபிஎம்மின் வி தம்புசாமி ஆகியோர் எம்எல்ஏக்களாக இருந்தனர். 96 முதல் தொகுதி திமுக வசம் வந்தது.
சட்டசபை தேர்தல்
திமுகவை சேர்ந்த அசோகன் கடந்த 1996-ஆம் ஆண்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 2001-ஆம் ஆண்டு வரை தொடர்ந்தார். இதையடுத்து 2006-ஆம் ஆண்டு மதிவாணன் திமுக சார்பில் எம்எல்ஏவானார். பின்னர் கடந்த 2011-ஆம் ஆண்டு மற்றும் 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில் திமுக தலைவர் மு. கருணாநிதி வெற்றி பெற்றார்.
இடைத்தேர்தல் தேதி
கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் மரணமடைந்துவிட்டார். இன்னும் இரு ஆண்டுகள் தற்போதைய அரசு நீடிக்கும் என்பதால் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக இல்லை
திருவாரூர் தொகுதியில் திமுகவினரோ அல்லது அவர்களது கூட்டணி கட்சியினரோ வெற்றி பெறுவது என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. ஆர்கே நகரில் ஜெயலலிதா இறந்தவுடன் நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெறவில்லை.
யார் போட்டியிடுவர்
கருணாநிதியின் தொகுதியிலும் அது போல் நடக்கக் கூடாது என ஸ்டாலின் கருதுகிறார். இதனால் அந்த தொகுதிக்கு அவர் வலுவான வேட்பாளரை நிற்க வைப்பார் என்றே கருதுகிறது. இல்லாவிட்டால் கருணாநிதி குடும்பத்தினர் யாரேனும் போட்டியிடுவரா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.