காஷ்மீர் பற்றி கமலின் ஒரே பேட்டி.. தேசிய அளவில் கண்டனம்.. எதிர்ப்பு.. என்ன பேசினார் தெரியுமா?
ஜம்மு காஷ்மீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த விழா ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசி உள்ளார்.
Recommended Video
சென்னை: ஜம்மு காஷ்மீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த விழா ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசி உள்ளார். கமல்ஹசானின் இந்த கருத்திற்கு எதிராக பலர் கோபமாக பதில் அளித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மொத்தம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் இந்தியாவையே பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனை மீண்டும் தலைத்தூக்கி இருக்கிறது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
பொது வாக்கெடுப்பு
கமல்ஹாசன் தனது பேச்சில், காஷ்மீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அங்குள்ள மக்கள் அவர்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதை ஏன் இன்னும் யாரும் நடத்தாமல் இருக்கிறார்கள். அவர்கள் எதை நினைத்து பயப்படுகிறார்கள்.
அசாத் காஷ்மீர்
அசாத் காஷ்மீரில் (பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்) என்ன நடந்து கொண்டு இருக்கிறது. அங்கு தீவிரவாதிகளை ரயில் நிலையங்களில் ஹீரோக்கள் போல சித்தரிக்கிறார்கள். படங்களை ஒட்டி வைத்து கொண்டாடுகிறார்கள். என்ன முட்டாள்தனம் இது. இது நிறுத்தப்பட வேண்டும்.
இந்தியா முட்டாள்தனம்
ஆனால் இந்தியாவும் அதே அளவு முட்டாள்தனத்துடன்தான் செயல்படுகிறது. இது சரியானது கிடையாது. இந்தியா பாகிஸ்தானை விட சிறந்த நாடு என்று நிரூபிக்க வேண்டும் என்றால், நாம் கொஞ்சம் சரியாக நடந்து கொள்ள வேண்டும். நாம் இப்படி மோசமாக முட்டாள் போல நடந்து கொள்ள கூடாது. அங்குதான் புதிய அரசியல் பிறக்கும்.
என்ன அரசியல்
ஒரு ராணுவ வீரர் ஏன் சாக வேண்டும். இரண்டு நாட்டிலும் அரசியல்வாதிகள் சரியாக இருந்தால், ஒரு ராணுவ வீரர் ஏன் சாக வேண்டும். அரசியல்வாதிகள் சரியாக இருந்தால்தான் நம்முடைய எல்லை நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும். நான் எழுதிய மய்யம் பத்திரிக்கையில் முன்பே இப்படி ஒரு சம்பவம் காஷ்மீரில் நடக்கும் என்று சிறு வயதில் எழுதி இருந்தேன்.
எல்லோரும் ஒற்றுமை
நம்முடைய பிரதமரும் அரசியல் கட்சிகளும் ராணுவத்திற்கு தோளோடு தோளாக இருக்க வேண்டும். நாம் மொத்த காஷ்மீரும் நம்முடையது என்று நினைக்கிறோம், அப்படி என்றால் அங்கு போராடும் நம்முடைய வீரர்களுக்காக நாம் எப்போதும் அவர்களுடன் துணை நிற்க வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கமல்ஹாசன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
என்ன சர்ச்சை
இதில் கமல்ஹாசன் சொன்ன இரண்டு விஷயங்கள் பெரிய சர்ச்சை ஆகி இருக்கிறது. காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியது, பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள், வலதுசாரிகளை அதிக கோபத்திற்கு உள்ளாகி உள்ளது. இதனால் அவர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
புதிய பிரச்சனை
அதேபோல் பொதுவாக பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகளை இந்தியர்கள் ஆசாத் காஷ்மீர் என்று அழைக்க மாட்டார்கள். ஆனால் கமல்ஹாசன் அப்படி சொல்லி இருப்பது பலரை எரிச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் கமல்ஹாசன் என்ற பெயர் இன்று டிவிட்டரில் தேசிய அளவில் பெரிய வைரலானது. பலர் அவருக்கு எதிராக டிவிட் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.