சென்னையில் பாதியாக குறைந்த தக்காளி விலை.. கிலோ ரூ.55.. பெருமூச்சு விட்ட மக்கள்!
சென்னை: கோயம்பேட்டில் தக்காளியின் விலை நேற்றை காட்டிலும் பாதியாக குறைந்துவிட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
பொதுவாக கோடை காலங்களில் கிலோ 5 ரூபாய்க்கு உதைப்படும் தக்காளி, அண்மைக்காலமாக வரத்து குறைவு காரணமாக விலை அதிகமானது.
கோடை காலத்தில் மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதே வரத்து குறைவுக்கு காரணம் என சொல்லப்பட்டது. இதனால் தக்காளி விலை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ ரூ 120 வரை விற்பனையானது.
விஜயகாந்த்துக்கு வந்த அதிர்ச்சி.. தக்காளி விலையை பார்த்தீங்களா.. திமுக அரசுக்கு பறந்த அறிக்கை
கடும் அவதி
இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். தக்காளியை தங்கத்துடன் ஒப்பிட்டும் பெட்ரோல் டீசல் விலைக்கு நிகராக உயர்ந்து வருவதை ஒப்பிட்டும் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் வைரலாகின. ஹோட்டல்களிலும் தக்காளியின் பயன்பாடு குறைந்திருந்தது.
தக்காளி சட்னி
தக்காளி சட்னி, தக்காளி சாதம் ஆகிய உணவு வகைகள் கடந்த சில தினங்களாக வீடுகளில் மட்டுமில்லை ஹோட்டல்களிலும் குறைந்திருந்தது. இந்த நிலையில் தக்காளியின் வரத்து அதிகமானதால் அதன் விலை ரூ 100 ஐ தொட்டது. அதாவது ரூ 10 குறைந்தது. இதையடுத்து மேலும் தக்காளி பெட்டிகள் வரத்து வந்ததால் நேற்று கிலோ ரூ 90 க்கு இந்த தக்காளி விற்பனையானது.
கோயம்பேடு காய்கறி சந்தை
இந்த நிலையில் இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை ரூ 35 குறைந்து ஒரு கிலோ ரூ 55 முதல் 60 வரை விற்பனையாகிறது. மேலும் சென்னையில் சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ 65 முதல் ரூ 70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பசுமை அங்காடி
அரசு சார்பில் கூட்டுறவு பண்ணை பசுமை அங்காடியில் ரூ 63 க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளின் விலையும் 5 முதல் ரூ 10 வரை குறைந்திருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். இனி வீட்டில் தக்காளி சட்னி, தக்காளி ரசம், தக்காளி சாம்பார், தக்காளி ஊறுகாய்தான் போங்க!