கட்டுக்கட்டாக பணம் சிக்கிய வேலூர் சிமென்ட் ஆலை யாருடையது? வெளியான பரபரப்பு தகவல்
சென்னை: வேலூர் அருகே சிமென்ட் ஆலையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
வருமான வரித்துறையினர் வேலூர் மாவட்டத்தின் பள்ளிகுப்பம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு, கட்டுக்கட்டாக மூட்டைகளில், அட்டைபெட்டிகளில் பணம் கட்டி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒவ்வொரு மூட்டையிலும், வார்டு எண் எழுதி வைக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண்கள் இவையாகும். எனவே தொகுதி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவே இவ்வாறு மூட்டை மூட்டையாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து ரெய்டில் சிக்கும் கதிர் ஆனந்த்.. மூட்டை மூட்டையாக மாட்டிய பணம்?.. சிக்கலில் துரைமுருகன்?
பூஞ்சோலை சீனிவாசன்
இதுதொடர்பாக, வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அந்த சிமென்ட் ஆலை, பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானது என தகவல் கிடைத்துள்ளது. இவர் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, வேலூர் திமுக பகுதி செயலாளர் சீனிவாசன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணை
மேலும், வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் எந்த வங்கியில் இருந்து யாரால் எடுக்கப்பட்டது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை 5 எந்திரங்களைக் கொண்டு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வங்கி அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இப்படியாக பெரிய அளவில் பணத்தை எடுத்திருக்க முடியாது என கூறப்படுகிறது.
வங்கி அதிகாரிகள்
ஒருவர் ரூ.10 லட்சத்துக்குமேல் எடுத்தால் உடனடியாக தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுக்கவேண்டும். ஆனால் இப்படி மூட்டை மூட்டையாக, கோடிக் கோடியாக பணம் பதுக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் இதில் தவறு செய்த வங்கி அதிகாரி யார்? என்ற கேள்வி அடுத்ததாக எழுகிறது.
மத்தியப்படை பாதுகாப்பு
இதனிடையே, பணம் பறிமுதல் செய்யப்பட்ட சிமென்ட் ஆலைக்கு வருமான வரித்துறை சார்பில், மத்திய படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியே பரபரப்புடன் காணப்படுகிறது.