கேசவவிநாயகம், எல்.முருகன் ‘வேற ஒருத்தருக்கு’ டார்கெட்.. ரொம்ப நாள் மறைக்கமுடியாது.. காயத்ரி ‘பகீர்’!
சென்னை : திருச்சி சூர்யாவுக்கு எல்.முருகன் பற்றியோ, கேசவ விநாயகம் பற்றியோ புகார் சொல்ல அவசியமே இல்லை, இது தனிப்பட்ட வெறுப்பா? அல்லது வேறொருவரின் வெறுப்பா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் காயத்ரி ரகுராம்.
திருச்சி சூர்யா, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குரலையே ஒலித்திருக்கிறார் என விமர்சனங்கள் கிளம்பி வரும் நிலையில், அதுகுறித்து பாஜகவில் 8 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த காயத்ரி ரகுராம் அதுபற்றி சந்தேகம் கிளப்பியுள்லார்.
பாஜக விவகாரம் பற்றி பொதுவெளியில் பேசியதால் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் அண்ணாமலையை மறைமுகமாக சாடி வருகிறார்.
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்ததோடு காயத்ரி வகித்து வந்த பதவியை இசை அமைப்பாளர் தினாவுக்கு கொடுத்த நிலையில், அதனையும் விமர்சித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
வெகுண்டெழுந்த காயத்ரி ரகுராம்! பெண் வன்கொடுமை செய்பவரை பாதுகாத்தால் என்ன பேரு தெரியுமா? நறுக் ட்வீட்
சூர்யா கொளுத்திய வெடி
பாஜகவில் இருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த திருச்சி சூர்யா, பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில், "நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்க வெற்றியை அடையும். அதை அடைய வேண்டுமென்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும். தமிழகத்தில் பாஜக வெற்றி அடைய வேண்டும் என்றால் எல்.முருகனும், கேசவ விநாயகனும் அண்ணாமலையின் வழியில் தலையிடக்கூடாது" என்று குறிப்பிட்டிருந்தார்.
அண்ணாமலையின் குரல்
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலையின் விருப்பத்தையே சூர்யா சிவா கூறி இருக்கிறார்கள். பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரின் தலையீட்டை அண்ணாமலை விரும்பவில்லை. அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்பதால் திருச்சி சூர்யா மூலமாக அண்ணாமலை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என பாஜக வட்டாரத்திலேயே பேசப்பட்டு வருகிறது.
காயத்ரி சந்தேகம்
இந்நிலையில் கேசவ விநாயகம், எல்.முருகன் ஆகியோரை குற்றம்சாட்டி திருச்சி சூர்யா பேசியதற்கு அண்ணாமலையின் பங்களிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் வகையில், பாஜகவில் இருந்து அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். சூர்யாவுக்கு எல்.முருகன் பற்றியோ, கேசவ விநாயகம் பற்றியோ புகார் சொல்ல அவசியமே இல்லை, அது வேறு ஒருவரின் வெறுப்பு என விமர்சித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
வேறு ஒருவரின் வெறுப்பா?
இன்று காயத்ரி ரகுராம் தொடர்ச்சியாக பதிவிட்டுள்ள ட்வீட்களில், "திருச்சி சூர்யா கேசவ விநாயகம் ஜியை ஏன் வெறுக்கிறார்? திருச்சி சூர்யாவுக்கு கேசவ விநாயகம் ஜியுடன் எந்த வேலையும் இல்லை. திருச்சி சூர்யா கட்சியில் சேர்ந்ததில் இருந்து கேசவவிநாயகம் ஜியை 5-6 முறை தான் சந்தித்திருப்பார். இது தனிப்பட்ட வெறுப்பா அல்லது வேறொருவரின் வெறுப்பா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிப்படையா சொல்லுங்க
மேலும், முருகன் ஜி மாநில தலைவராக இருந்த போது நீங்கள் கட்சியிலேயே இருந்ததில்லை. அவரை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? அவர்கள் இருவரும் உங்களை எந்த விதத்தில் தனிப்பட்ட முறையில் தொந்தரவு செய்தார்கள்? அல்லது அண்ணாமலை ஜியை எந்த வகையில் தொந்தரவு செய்தார்கள்? தயவு செய்து வெளிப்படையாக சொல்லுங்கள் என சூர்யாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
வார் ரூம் உண்மை
தொடர்ந்து அவர், சூர்யா பேசுவதைப் பார்க்கும்போது, அது அவருடைய பிரச்சனையல்ல, அவர் பேசியது வேறொருவரின் பிரச்சனை. கேசவவிநாயகம் ஜி மற்றும் முருகன் ஜி பற்றி பேச அவர் அனுப்பப்பட்டாரா? வார் ரூம் பற்றிச் சொன்னது உண்மையாகிவிட்டது. கட்சியின் மூத்த தலைவர்களான இல.கணேசன் ஜி, கேசவவிநாயகம் ஜி, முருகன் ஜி மற்றும் சொந்தக் கட்சிப் பெண்களைத் தாக்கச் சொன்னது யார்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்னை மட்டும் உடனே நீக்கினீர்களே
பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் மற்றும் அமைச்சருக்கு எதிராக கடிதம் எழுதுவது சரி. பெண்களைத் தவறாகப் பேசுவதும் சரி. அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை. ஆனால் வார் ரூம் ட்ரோல்கள், மோசமான வார்த்தைகளுக்கு எதிராக பதிலளித்ததற்காக அவசரமாக ஒரு பெண்ணை இடைநீக்கம் செய்து, அவர் வகித்த பதவியை உடனடியாக வேறு ஒருவருக்கு கொடுப்பது சரியா?'' என காயத்ரி ரகுராம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஆடியோவை லீக் செய்தது யார்
மேலும், ஆர்.எஸ்.எஸ் தலையிடக் கூடாது என்பது தாங்கள் விருப்பமா? கட்சி எப்படி செயல்படுகிறது என்பது பற்றி புரியவில்லையா? முதலில் பாஜகவை வளர்க்க போராடியவர்களுக்கு மரியாதை இல்லையா? எந்த ஒரு தனிமனிதனும் கட்சிக்கு மேல் இல்லை. இதை நான் உறுதியாக கூறுவேன். இது ஒரு ரசிகர் மன்றம் அல்ல. ஆடியோவை லீக் செய்தது யார் என்பதும் தெரியும். அவர்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? உண்மையையும் நோக்கத்தையும் நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது என காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.